செவ்வாய், 20 ஜூன், 2023

 


வியாழன், 2 ஜூன், 2016

பாளையங் கால்வாய்.... அது ஒரு கனாக்காலம் ....

மேலப்பாளையத்தில் நீச்சல் தெரியுமா என்று கேட்கனுன்னா...தப்பட்டா அடிக்கதெரியுமான்னு தான் கேப்பாக..

நாங்கள் சின்ன வயசுப் பய்யங்களா இருந்த போது .....விடுமுறைகள் வந்து விட்டால் எங்க வீட்டுக்குப் பொறத்தாலே ஓடுகிற  பாளையம் கால்வாயில் நீந்தி அழிச்சாட்டியம் பண்ணுவதுதான் எங்க செட்டுகளின்  பொழுது போக்கே.....எங்க ஊரைச்சுத்தி ஓடி....பயிர் பச்சைகளை விளைய வைக்கிற.......அந்தக் கால்வாய்க்கு ஊரு  வச்ச பேருதான் “நம்மாறு”....தாமிரபரணிக்கு பெரியாறுன்னு தான் பேரு.
சேக்காளிகள் ...சங்காத்திகள் ஒன்னு சேர்ந்து கோடைக் காலங்களில் பெரியாத்துலே  தாமிரபரணி ஆத்திலே போய் மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டே  குளிப்பது.....அடடா.....சொல்ல முடியாத சொகத்தைக் கொடுக்கும்....அதுக்கு நிகரா என்னத்த சொல்ல முடியும்?....
டவுசர் போட்டகாலங்களில் அத...... கழ்ட்டி வச்சுட்டு மணிக்கணக்கில் கண்கள் சிவக்க தலைமுடிஎல்லாம் பஞ்சு போலாகி காற்றில் பறக்கும் அளவுக்கு குளிப்போம் குளிப்போம் .....அம்புட்டு நேரம் குளிப்போம்... இதே கோலத்தில் வீட்டுக்கு போனால் அங்கே எங்க வாப்பும்மா தலைமையில் விசாரணை நடக்கும்....
வீட்டுக்கு போக முன்னாலேயே கோணத்து கடையில் மூனு பைசாவுக்கு கரண்டி நிறைய ஸ்டார் ஆயில் வாங்கி தலையில்..... தேச்சிட்டு...அது . ஒழுகி நெத்தி,மூஞ்சி பூராவும் படருகிற அளவில் தான் வீடு போய் சேர்வோம்...
எதுக்காம்?.....குளிச்சது தெரியக்கூடாது என்பதுக்காம்...
ஏதாவது சேட்டை கீட்டை பண்ணி, வழக்கமா எங்களுக்கு விழுகிற அடிகளை தடுத்து நிறுத்தி எங்களைப்  பாதுகாக்கும் வேலைகளை வாப்பும்மா ரொம்ப கவனமா செய்வா.....
ஆனா வாய்க்காலில் குளிச்சு முடிச்சு....தும்மல் விழ வீட்டுக்கு போனால்......அஞ்சாறு அடிகள் அவ கிட்டே இருந்துதான் விழும்..வீட்டுக்குள் நுழைந்தவுடன் கேப்பாள்....
“எலே.....எங்கல போன”?....
“நா....இங்கன தானம்மா நின்னேன்...”
“பொய் சொல்லப்படாது.....மறைக்காம சொல்லு”..... என்று அவ கேக்கும் போது .....வேற எதையும் பேச  முடியாமல் ‘ கல்லூளிமங்கான் ‘ முழி தானாவே வந்துடும்...
போவியா?.....போவியா?....வாயில் இருந்து வார்த்தைகள் வரும்போதே....முதிகில் ரண்டு விழும்......வீராப்பா அடி விழுந்த வலியை..... வெளியே காட்டாமல் .....கண்ணைக் கசக்கிட்டே நிப்பேன்.....கொஞ்சமாவது கண்ணில தண்ணி வந்தாத்தானே....அவ முறைக்கிரதை விடுவா...”.மூஞ்சியப் பாரேன்....மூஞ்சிய...”....அதோடு...... அவளோட.... தாக்குதல் முடிஞ்சிடும்.
“இனி அப்படிப் போகப்டாது...” என்பாள்.
“ உன்ன எங்கனைஎல்லாம் போய்த்  தேட?...நீ ஊடு வந்து சேருற வரைக்கு பயமா இருக்கு.....நெல கொள்ள மாட்டேங்கு........இனிமே இப்பிடி போனே?....அவ்வளோதான் பாத்துக்கோ....பெர்னா சார்கிட்டே போய் சொல்லிடுவேன்.......நீ படிச்சுக் குடுத்த ஆ.....க்கம் இது தானா?....ன்னு   போய் கேட்டுட்டு வந்துடுவேன் ”..... என்று சொல்லி கடும் மிரட்டல் விடுவாள்..
பெர்னா சார் பகவதியா பிள்ளை எங்க பக்கம் கடுமையான வாத்தியார்.....நாங்கல்லாம் அவர்கிட்டே எத்தனை வருஷம் படிச்சோம்னு சொல்லிக்க முடியாது....நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பொளுகிற வேளையில் பள்ளிக் கூடம் விட்டு, வந்து அவர் வீட்டுக்கு டீயுசன் படிக்க அனுப்பிருவாங்க..
அதென்ன பெர்னா சார்?....ஆங்கில மேதை ,அறிஞன் பெர்னாட்ஷா பேர் அவருக்கு யாரும் வச்சாங்களோ?....இல்ல அவராவே அத வச்சிகிட்டரோ?....ன்னு யாருக்கும் விளங்கியதில்லை.அந்த பெர்னாட்ஷா பேருதான் பெர்னா சார்வாள்ன்னு பரவிடுச்சு....


அந்த மாபெரும் மேதை அவர்கிட்ட படிக்கிற பையங்க கையெழுத்தை ரொம்பநல்லாஆக்கிப்புடுவார்.... சும்மா இருக்கிற நேரம்......தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருக்குறள்.....பாரதியார் பாடல்கள், விநாயகர் பாடல்கள் பாடுவார்....திருவாசகம் பாடும்போது பல நேரங்களில் குரல் கம்மிப் போய் அழுதுவிடுவார்....சார்வாள் ஒரு கண் பார்வை கொண்டவர்..... ஆகையால்...அந்த நேரம் .......அவர் அழும்போது நாங்களும் சேர்ந்து  அழுதுடுவோம்...மழை வந்தால் பள்ளிக் கூடத்துக்கு லீவு தான்....காரணம் அவர் வீட்டில் வகுப்புகள் நடந்த இடம் ஒலைக்கூரைகளால் ஆனது....எப்படியும் மழைக் காலத்திலேயே மாசம் பாதி நாள்..... வகுப்பு நடந்தாலே ஆச்சரியம் தான்..
இதெல்லாம் எதுக்கு சொல்ல வந்தேன்னா?........வீட்டில பெத்தும்மா.....உம்மா, வாப்பா கண்ணைத்தப்பி நம்மாத்திலே போய் நீச்சலடிச்சு.....குளிச்சு வந்த கதையை சொல்லும் போது வருவது ....
ஒரு ஆறு...... ஏழு  படிக்கிற காலத்தில்....உள்நீச்சல்..... எதிர் நீச்சல்..... மழைக்காலத்தில் வேகமாக பெருகி வெள்ளம் ஓடும் ஆத்தில்  ....நீச்சல் போடும் தைரியம் கொண்டு இருப்போம்...
ஆனா....எல்லா மக்களும் அவ...... அவ வீட்ல பாத்  ரூம் கட்டி.....  குளிக்க ஆரம்பிச்ச பொறவு ....ரண்டு நடந்துது.....ஒன்னு ஒவ்வொரு வீட்டில இருந்தும் ஏராளமா....... கழிவு நீர் பெருகி ஓடி....  மலச்சாக்கடை  தண்ணியும்....வாறுகாலில் சேர்ந்து  மேலப்பாளையம் காட்டுத்தெருல ஆரம்பிச்சு....ஊர் முழுக்க 80 க்கும் மேற்பட்ட கழிவு நீரோடைகள் ....கால்வாய்  தண்ணியில்   கலந்து ....மொத்தமா பெருகி ........ பாளையங்கால்வாயை ...நம்மாத்தை கூவமாக்கிடுச்சு.....இந்தக் கொடுமை 1987 ஆம் வருஷத்தில் தான் துவக்கம் கொண்டது....
இப்போ யாரும் வாய்க்கா பக்கம் போறதும்  இல்லை...சட்டிப்பானைகள் கழுவ.....துணிமணிகள் துவைக்கக் கூட அங்கே செல்வதில்லை...செல இடங்களில் ...தூண்டி போட்டு ...அல்லது வல வீசி மீன் பிடிக்கிற ஆட்கள் கூட ....தூரமாய் போகிற அளவுக்கு நம்மாறு ஆகிவிட்டது... ...இந்த கொடுமைக்கு யார் காரணம்?.....
மையித்துகள் குளிப்பாட்ட....சோறாக்க.....பாளையங்கால்வாயில் ..... இளைஞர்கள்....கொடத்த வச்சு தண்ணி மெத்திக்கிட்டு  போவாங்க..... கல்யாணத்துக்கு மறுநாள் புதுப்பெண்கள்.......குளிச்சு முடிச்சு ....அந்த ஆத்து நீரை செப்புக்குடத்தில்  பிடித்து..... தூக்கி இடுப்பில் கொண்டு போவார்கள்.........
சாக்கடை கலந்த அநியாயம் ..... இப்போது..... அந்தத்  தண்ணிய சீண்டுவார் யாருமில்லை...அந்த தண்ணீர் என்ன பாவம் செய்தது?
இன்னொன்னு 1987க்கு பொறகு பொறந்த மேலப்பாளையத்து....பையங்களுக்கு  நீச்சல் என்பதே தெரியாமப் போச்சு....அதனாலே ஒரு முப்பது வருஷத்திலே....80 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மூச்சு திணறி தாமிரபரணியிலும் ....பாளையங்கால்வாயிலும்  மூழ்கி இறந்து போய் இருக்கிறார்கள்....
வீட்டுக்கு வீடு நீச்சல் தெரிஞ்சவர்கள் இருந்த ஊரா இன்னைக்கு இப்படி  ஆயிடுச்சு?.....இத மாத்த வழியே இல்லையா?....
பாதாள சாக்கடைகள் அமைக்கப்பெற்ற தெரு வாசிகளும் ....அவர்கள் வீட்டு சாக்கடை தண்ணியை வீட்டுக்கு வெளியே தான் விடுறாக...பல வீட்டு கழி ப்பறைகளுக்கு “ செப்டிக் டாங்கே ”.....வச்சு கட்டுறதில்லை...அவன் வீட்டு கழிவுகள் ....அடுத்தவன் வீட்டுக்கு பக்கத்தில் போய் ....நாத்தக் காடாக்குவதை யாரும் கண்டிக்க முடியவில்லை...இதையெல்லாம் ஒட்டு மொத்தமா சரி செய்ய எத்தனை வருஷங்கள் ஆகப் போகுதோ?..தெரியல்லை...அது முடிஞ்சா பொறவு நம்மாத்திலே போய் மக்கள் குளிக்க ஆரம்பிச்சு....எப்பிடி தப்பட்டா அடிக்க பழகுவாங்களோ?.....
ஆனா....ஒன்னு செய்யலாம்.....ஊரில் நீச்சல் குளங்கள் ஏற்படுத்தலாம்....அதிலே பிள்ளைகள் நீஞ்ச..படிக்கலாம்.. நீச்சல் குளம் ஒன்று அமைக்க வேண்டுமென கட்டாயப் படுத்தி  இருக்கிறேன்.....நிதி தான் வேண்டும்....அரசு தான் அதனை ஏற்படுத்த வேண்டும் .

1 கருத்து:

  1. வாய்காலில் நீச்சலடிக்கும் கதையை சொல்லி,எங்களை பழைய காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் அண்ணே

    பதிலளிநீக்கு

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

" நல்லா இருப்ப......நிப்பாட்டு ".

 அப்போவெல்லாம்..... ரயில் பயணங்கள்ன்னா ....கனவுகள் மாதிரி இருக்கும்.

பக்கத்திலே உள்ள ஊர்களுக்கு போறதா இருந்தாலும்...

மணிக்கணக்கில் பயணங்கள் நீண்டு நெடுப்பமா இருக்கும்....

நினைவு தெரிந்து என்னுடைய தந்தையை பெற்றெடுத்த வாப்பும்மா மற்றும் அவளை ஒத்த வயதுக்காரங்களோடு சிறுவயதில் பொட்டல்புதூர் போக...

ரவண சமுத்திரம் ரயில் நிலையம் போய் இறங்கி உள்ளேன்.

திருநவேலி வீராவரம் ஸ்டேஷனில் இருந்து 45 கி.மீ.தூரத்திற்கு.... அந்தக் காலத்தில் குறைந்தது 3 மணி நேரமாவது ரயில் போகும்.

மதியம் 12 மணி சுமாருக்கு புறப்படும் அந்த ரயில் வண்டி மூனு அல்லது மூனரை மணி வாக்கில் அங்கே போய்ச் சேரும்.

அந்த வண்டி போய்க்கிட்டே இருக்கும் போது....வீட்டுல இருந்து கொண்டு போன...சாப்பாட்டை ஊட்டி விடுவாள்...

சேர்மாதேவி கத்திப் பாலம் அம்பாசமுத்திரம் போளி... இது எல்லாம் கண்டது... அப்போதுதான்.

அந்த வண்டியை ....கரி என்ஜின் பெரும் சப்தமிட்டுக்கொண்டு... புகையை கிளப்பிக் கொண்டு இழுத்துச் செல்லும்.... ஒரு அஞ்சு ஆறு பெட்டிகள் இருப்பது அந்த காலத்தில் பெரிய விஷயம்.

அந்த ரயில் பெட்டியின் உள்ளே புகை வாடையும்....நீராவி வாடையும்....

கலந்த ஒரு கலவையான வாசனை மூக்கில் ஏறிக் கொண்டிருக்கும் .

போகிற போக்கில் நீராவி எஞ்சினின் நீராவியை உண்டாக்கும் நிலக்கரி எரியும் போது ....குப்குப்ன்னு புகை பெருகி வந்து ....ஜன்னல் ஓரம் இருக்கக்கூடியவர்களின் கண்களில் கரித்தூசி வந்து விழும் .

ஜன்னலோரம் இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புகை வந்து கொண்டிருக்கும் போது முகத்தை வேற தெசையில் திருப்பிக் கொள்வார்கள். 

அது ஒரு இளம் பிராயக் காலம்.

அதுக்குப் பொறவு.... பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாசிலாமணி சார்வாள் தலைமையில் குற்றாலத்திற்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி இரயில் நிலையம் வரை புகை வண்டியில் சென்று, குற்றாலம் வரை அந்தா இந்தான்னு...

சொல்லி நடத்தியே....

கூப்பிட்டு போன கதை எல்லாம் உண்டு.

அதுக்குப் பொறவு 1981 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஜனவரி மாதம் 5 6 தேதின்னு நெனைக்கேன்.... அப்பொழுது எம்ஜிஆர் இரண்டாவது முறையாக ஆட்சியில் ஏறி இருந்தார். நான் பள்ளி மாணவனாக இருந்த காலகட்டத்தில் எங்களை எல்லாம் ஆசிரியர் கோமதிநாயகம் தலைமையில் அன்றைக்கு பணியில் இருந்த அகமது மீரான் , ஹபீப் சார்வாள்கள் பொறுப்பில் கூப்பிட்டுப் போனாங்க....

. மதுரையிலிருந்து புதூர் அருகில் உள்ள அல் அமீன் உயர்நிலைப் பள்ளியில் எங்களை எல்லாம் தங்க வச்சாங்க.....

அப்வவும் கரி வண்டி.... புகையை எழுப்பிக் கொண்டு சென்ற நீராவி எஞ்சின்தான்.

160 கி.மீ.தூர மதுரைக்கு போய்ச் சேருவதற்கு 6 மணி நேரத்திற்கு மேலாக ஆகும். நாங்கள் போன வண்டியோ... இரவில் 11 மணிக்கு புறப்பட்டு விடியக்காலை அஞ்சரை மணி வாக்குல மதுரைல கொண்டு போய் விட்டான்.

அப்படி என்றால் எவ்வளவு நேரம் அந்த கரி வண்டி எடுத்து இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

எனது மாமா மேலப்பாளையம் முன்னாள் சேர்மன், வழக்கறிஞர் எல் கே எம் அப்துல் ரஹ்மான் அவர்கள், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்தவர்கள்.

ஒரு காலகட்டத்தில் கல்லூரியின் பொறுப்பு செயலாளராகவும் இருந்தவர்கள்.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் 30 ஆண்டு கால தாளாளராக பணி செய்தவர்கள்.

அவர்களுக்கு மிக நெருக்கமாக காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் ஷாம் சிகாபுதீன் ஹாஜி யார் என்று ஒரு பெருந்தகை அதுவும் இலங்கையில் வணிகம் தொழில் செய்து வந்த பெருந்தனக்காரர் இருந்தார்.

அவர்களை அடிக்கடி சந்தித்து வரக்கூடிய வாய்ப்பு என் மாமா அவர்கள் மூலம் ஏற்பட்டது.

மேலப்பாளையத்தில் இருந்து கடிதம்.... காயல்பட்டினத்தில் இருந்து திரும்பவும் கடிதம் என்று தகவல் தொடர்பு பரிமாற்ற பணியில் என்னை அனுப்பி வைப்பார்கள்.

காயல்பட்டினம் செல்வதற்கு பஸ்ஸை விட.... திருச்செந்தூர் ரயில் வண்டியைத் தான் அதிகம் விரும்புவேன்.

இன்னும் ஆசை அதிகம் கொண்டு.... மேலப்பாளையம் குரிச்சியில் அந்த காலத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வந்தது.

அங்கே என்னுடைய பள்ளித் தோழன் கிருஷ்ண னின் தந்தை தான் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். 

ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய காலகட்டங்களில் கிருஷ்ணன் என்னோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் தேர்வு நடக்கின்ற காலங்களில் அந்த ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் 

அது 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது .

ஆகவே மேலப்பாளையம் குறிச்சி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து காயல்பட்டினத்திற்கு அல்லது திருச்செந்தூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அந்த ரயிலில் ஆவலோடு ஏறி அமர்ந்து காயல்பட்டினம் செல்வேன்.

அது ஒரு காலம்.

1981 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் என்று ரயில் பாதை அமைந்தது.

முதன்முதலாக நாகர்கோவிலில் இருந்து பெருத்த உருவத்தினுடைய நீராவி எஞ்சின் இரண்டு மூன்று பெட்டிகளோடு திருநெல்வேலி ஜங்ஷனை நோக்கி வந்தது.

கொக்கிறகுளம் ரயில் பாலத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல்.... இந்தக் கரையிலேயே நின்று விட்டது.

காரணம் ...தண்டவாளப் பணிகள் முடியாமல் இருந்த காலம் அது.

அந்த ரயில் பாதை அமைந்ததற்கு பின்னால் நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்வதற்கும்.... அதையும் தாண்டி கொல்லம், எர்ணாகுளம், கொச்சின் செல்வதற்கும் போய் வந்துள்ளேன்.

இன்னும் பொறுப்புக்கள் பல வந்ததற்குப் பின்னர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாக.... சாவக்காடு பகுதிகள் தாண்டி மலப்புறம், பொன்னானி மஞ்சேரி செல்வதற்கும்... கண்ணனூர் வரை போய் வருவதற்கு அந்த பாதையை பயன்படுத்தி இருக்கிறேன்.

சென்னைக்கு வந்து செல்வது என்பது என்னுடைய மாணவப் பருவத்திலேயே துவக்கம் ஆகி விட்டது .

அதுவும் ரயில் ...பஸ் பயணங்கள் என்பவை என்னோடு பின்னிப்பிணைந்தவை.

ஒரு காலத்தில் திருநவேலியில் இருந்து ரயிலில் மாலை நாலு மணிக்கு புறப்பட்டால் மறுநாள் காலை 8:30 அல்லது 9 மணி அளவில் தான் சென்னை எக்மூர் போய் இறங்க முடியும். 

630 கி.மீ....16 மணி நேரங்கள் ரயில்ல போகணும். அப்படி இருந்த காலங்கள் அகல ரயில் பாதை வந்தபோது 14 மணி நேரம் 12 மணி நேரம் என்று குறைஞ்சி... தற்போது பத்தரை மணி நேரத்தில் சென்னை எழும்பூர் போய் சேர முடிகிறது 

1992 93 காலகட்டங்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு உள்ள விருது நகர் வரை மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் மீட்டர்கேஜ் மூலமாக சென்னை செல்வதற்கு திருநெல்வேலி- பேட்டை- தென்காசி என்று போய் சிவகாசி- ராஜபாளையம் என்று தொடர்ந்து விருதுநகரை தொட்டு அந்தப் பாதையில் சென்னை போய் சேர்ந்த நாட்கள் உள்ளன.

ஒரு காலகட்டத்தில் சென்னை செண்ட்ரலில் இருந்து பயணப்பட்டு ஜோலார்பேட்டை அரக்கோணம் ஜோலார்பேட்டை வழியாக எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டு  திண்டுக்கல் மதுரை வந்து திருநெல்வேலி வரவேண்டிய சூழ்நிலையிலும் இருந்தது.

தற்போது மின் மயமாக்கப்பட்ட பாதையின் மூலமாக மிக வேகமாக ரயில் மூலம் சென்னைக்கு செல்ல முடிகின்றது.

இவையெல்லாம் எதற்காக இங்கே சொல்றேன்னா....ரயில் பயணங்களில் ஒரு காலத்தில் பக்கத்தில் இருப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க முடியும். பேச வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளில் கைகளில் கொண்டு செல்லும் புத்தகங்கள் நமக்கு பயணங்களில் அதுவும் குறிப்பாக ரயில் பயணங்களில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவங்களை கொடுக்கும்.

சில சில வேளைகளில் பக்கத்தில் இருக்கின்ற பேர்வழிகள் பேசுகின்ற தொல்லைகள் தாங்க முடியாமல் கூட புத்தகங்களில் கவனம் செலுத்தி வாசிக்க முடியும்.

அதே நேரத்தில் பல்வேறு பயணங்களில் பக்கத்தில் இருக்கின்ற அதிகாரிகள் அலுவலர்கள் மூலமாக பல்வேறு தகவல்களும் ரயில் பயணத்தில் பெற முடியும் .

ரயில் சினேகம் என்பது 12 மணி நேரத்திற்குரியது மட்டுமல்லாமல்.... சில நட்புகள் நீண்ட நெடிய நாட்கள் வருடங்கள் தொடர்ந்தே வந்திருக்கின்றன .

இப்பவெல்லாம் கிழடுகள் முதல்...

குமரிகள்... சிறுசுகள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு செல் போன்ல பாட்டுகள் கேட்டுகிட்டு ..

முகத்தை ஒரு தினுசா வச்சிக்கிட்டு வருகிற லட்சணத்தைப் பார்த்தாலே சிரிப்புகள் வந்து கொண்டிருக்கும்.

கதைக்கு வருவோம்...... நேற்றைய தினம் திருநெல்வேலியில் இருந்து கல்விப் பணிகள் தொடர்பாக சென்னைக்கு பயணப்பட்டேன்.

வரும்போது இருக்கட்டுமேன்னு.... அடிக்கடி நான் வாசித்து மகிழும்... என்னுடைய அருமை சகோதரர் நெல்லை சுகா அவர்களின் புத்தகமாகிய ...தாயார் சன்னதியையும் அன்பு அண்ணன் நாரும்பூ நாதனின் வேணுவன மனிதர்கள், அண்ணன் தீன் அவர்களின்சந்தனத் தம்மை, கலாப்ரியா அவர்களின் பேரருவி புத்தகங்களையும் எடுத்து வந்தேன்.

என்னை விட ஓரிரு வயதுகள் இளையவரான சுகா அவர்கள் திருநவேலி ஊரைச் சேர்ந்தவர்.


அவர் குடும்பத்தோடு.... தலைமுறைகளான தொடர்பை கொண்டவன்.


அவருடைய தந்தை தமிழ்க் கடல் ஐயா  நெல்லை கண்ணன் அவர்களை... நாங்கள் எல்லாம் வாப்பா முறை வைத்து அழைப்போம்.... அவரும் எத்தனையோ இடங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்.

என்னுடைய பிள்ளைகள் திருமணத்திற்கு முன்னதாகவே வருகை தந்து... ஒரு பாட்டன் அந்தஸ்திலிருந்து குழந்தைகளை எவ்வளவு தூரம் வாழ்த்தி மகிழ்விக்க முடியுமோ அவரெல்லாம் செய்தார்.

அதுபோல எங்களுடைய வீட்டில் எத்தனையோ முறை அவர்கள் உணவருந்தி சென்றதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பினை எங்களுக்கு.

அன்புத் தம்பி சுகா அவர்கள் தன்னுடைய சிந்தனையாலும், உழைப்பாலும், எழுத்தாலும், தமிழ்த் திரையுலகத்தின் தகுதியான ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

இயக்குனர் பாலு மகேந்திராவின் அறிமுகம் பெற்று ...அவர்களுடனே பல்வேறு திரைப்படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் ஓரிரு படங்கள் இயக்கி ...முழு நேரமும் கதை வசனகர்த்தாவாக தன்னுடைய பணியை சென்னையில் நெல்லையில் தொடர்கிறார் .

அவருடைய கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம், தனுஷ் நடித்த அசுரன் முதலானவை அவருடைய எழுத்தின் எழுச்சியை வசனங்களில் காட்டித் தந்தன.

திருநெல்வேலி பாஷையில் அவர் எழுதுகின்ற அந்த எழுத்துக்கள் சினிமாவில் மட்டுமல்லாது பார்ப்பவர் கேட்பவர்கள் மனசில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த மூங்கில் மூச்சு என்கின்ற கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் பெருமை சேர்த்தது.

அதனைப் போலவே தாயார் சன்னதி என்கின்ற திருநெல்வேலி பதிவுகள் அற்புதமானவை .

வாசித்து ....வாசித்து மகிழத்தக்கவை.

அதனை நேற்றைய தினம் ரயிலில் வரும்போது வாசித்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் புத்தகத்தில் ஜெயன்ட் வீல் என்கின்ற ஒரு பதிவு உள்ளது.

திருநவேலி பகுதியில் உள்ள குடும்பங்கள் பலவற்றில்...

சினிமா.... பொருட்காட்சி... சர்க்கஸ் ....பார்க்க சின்ன ஊரார் போகனும்ன்னா....குடும்பத்தில் உள்ளவர்கள் போக அக்கம் பக்கத்தில் உள்ள பெரிய மனுஷாட்களிடம் ஒப்படைத்து பத்திரமாக கூப்பிட்டு போய்ட்டு வாங்கன்னு.... அனுப்பி வைப்பார்கள்.

என்னையும் அவ்வாறு பலமுறை பொருட்காட்சி, சர்க்கஸ் ,சினிமா.... குறிப்பா எம்ஜிஆர் சிவாஜி சினிமா பார்க்க அனுப்பிச்சு வச்சு இருக்காங்க.

அத மாதிரி ....சுகாவை இளம் வயதில் பொருட்காட்சிக்கு அழச்சிக் கிட்டுபோன பெரியப்பா பற்றி

ஜெயண்ட் வீல் ராட்டிணம்....ங்கிர பதிவை வாசிச்சுக் கிட்டிருந்தேன்.

அதிலே சுந்தரம் பிள்ளை பெரியப்பா என்கின்ற ஒரு கமிஷன் கடை பெரியவர்...

சிவப்பழம் டி எஸ் பாலையா மாதிரி முழிப்பு உள்ளவர் ... பனியன் மாதிரி மூன்று பித்தான்கள் மட்டும் உள்ள கழுத்தில் வழியாக போடும் ச ... அந்தச் சட்டையை அணிந்து திருநெல்வேலி பொருட்காட்சிக்கு அழைத்து செல்கிறார்.

பொருட்காட்சியில் இருக்கின்ற அந்த பெரிய ராட்டினத்தில் ஏறுவதற்கு கொஞ்சம் பெரியவனாக இருந்த சுகா ஆசைப்பட்டதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு.... அதில் ஏறி விட்டார்.

மனதளவில் மிகப் பயந்த குணமுடைய சுந்தரம் பிள்ளை பெரியப்பா அந்தராட்டில் ஏறி உட்காரும்போது... ஆண்டவனை துணைக்கு அழ ச்சிகிட்டு... அவருடைய வழக்கப்படி சிவாய நம என்று சொல்லி... கண்களை இறுக்கமாக மூடி ராட்டினம் சுற்றுவத எதிர்கொண்டு இருந்திருக்கிறார்....

ஒரே ஒரு சுற்று தான் போயிருக்கும்...

அந்தப் பெரியப்பா.... ஏ நிறுத்து சின்னப் பையன் பயப்படுதான் னு. பக்கத்தில் இருந்த சுட்டியான சுகாவ பார்த்துக்கிட்டே சொல்லி இருக்கார்.

பெரியப்பா எனக்கு ஒன்னும் பயமில்லை ...ஜாலியாத் தான் இருக்கு ...என்று சொல்லவும் அவர் பார்த்த பார்வை வேறுவிதம் .

இன்னும் கொஞ்சம் வேகம் பிடிச்சதும்.... ஏய் நிறுத்த போறியா இல்லியா? ..ன்னு ஒரு சவுண்டு கொடுக்க... அது ராட்டுக்காரன் காதில் விழவே இல்லை.

இன்னும் வேகம் கூடியதும் ....ஏ ஐயா ....நல்லா இருப்ப.... கூட கொஞ்சம் துட்டு தரேன்... இறக்கி விடுறான்னு சொல்லி.... அழுகை...பீதி....வியர்வை வடிய அவர் போட்டக் கூச்சல் கீழே நின்ற ....மோட்டார் மூலமாக ராட்டு ஓட்டுநவன் காதில் விழவே இல்லை.

அவருக்கு பயத்தில் வேர்த்து விறுவிறுத்து ...இறங்கிப் போய் இருந்த விதத்தை ....அன்பு இளவல் சுகா அவர்கள் தன்னுடைய தாயார் சன்னதி புத்தகத்தில் உள்ள கட்டுரை பதிவு ஒன்றில் ....சிரிக்க சிரிக்க எழுதி இருந்ததை பார்த்து படித்து வாசித்துக் கொண்டிருக்கும் போது.... திருநெல்வேலி பொருட்காட்சிக்கு நான் நேரில் சென்றது.... பார்த்தது போல் உணர்ந்தேன் ....

என்னை அறியாமல் நீண்ட நெடிய நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

என் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மனிதர் அவரைப் பார்த்தால் பிராமண குடும்பத்தில் உள்ளவர் போல் தெரிந்தது.

அவரும் அவருக்கு எதிரே அவருடைய மனைவியும்  என்னைப் பார்த்துக்கொண்டு ....தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.

நான் சிரிச்ச சிரிப்பை பார்த்துவிட்டு.... அடக்க முடியாமல் இருந்த என்னுடைய நிலையை பார்த்துவிட்டு.... அவர்கள் இருவரும் என்னை பார்த்து முறைச்ச முறைப்பு இருக்கே...


புத்தகத்தை மூடி வச்சுக்கிட்டு அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

.. சுகா என் கண் முன்னே கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

சுந்தரம் பெரியப்பா முழுசா.... பே முழி... முழிச்சது என் கண் முன்னே வந்து போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்தவர் தலையில் அடிச்சிக்கிட்டு...மூஞ்சியை வேற பக்கமா திருப்பிக்கிட்டார்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

10 ஆம் நம்பர் 22 ஆம் நம்பர் பஸ்


 அப்போவெல்லாம் திருநெல்வேலி டவுணுக்கு எங்க ஊர் மேலப்பாளையத்திலிருந்து  போக....22  ஆம் நம்பர் பஸ்ஸில் ஏற வேண்டும்.

 அந்த பஸ் வி.எஸ்.டி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு.... அப்படியே அபுல் கலாம் ஆசாத் வீதி, அண்ணா வீதி, கொடிமரம்,  வாய்க்கால் பாலம், என்று  போய்..... நத்தம் ,கருப்பந்துறை, குறுக்குத்துறை, வாகையடி முக்கு, மேலரதவீதி என்று தளவாய்  அரண்மனை வாசல் முன்பாக நிற்கும்.

கருப்பன் துறை ஏற்றத்தில் இருந்து ,குறுக்குத்துறை திருப்பம் வரை, ரோடு மிகக் குறுகலாகவும்....  கிழக்குப் பகுதி  பள்ளமாகவும், மேலப் பகுதி வயக்காடாகவும் இருக்கும்.

பஸ் முழுக்க ஆள் நெருக்கடி அதிகமாகி...ஒரு பக்கமா சாஞ்ச படி திக்கித் திணறி....போகும்.

சாலையின் விளிம்பை தொட்டுக்கொண்டு பஸ் செல்வதை , உள்ளிருந்து பார்ப்பதற்கு கொஞ்சம் பீதியாகவே இருக்கும்.

 அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, இன்றைய வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி,வாகையடி முக்கு, குறுக்குத்துறை தொட்டு.... பழையபடி மேலப்பாளையம் ஊருக்குள் அண்ணா வீதியில் நுழைந்து... இடது புறம் திரும்பி பஸ்டாண்ட் மருத்துவமனை வாசலில் நின்று, குறிச்சி   இப்போதைய ரவுண்டானா ,விஎஸ்டி பள்ளிவாசல்..... என்று போய்க்கொண்டிருக்கும்.

 அந்தக் காலத்தில் தாஜ்மஹால் டிரான்ஸ்போர்ட் என்று பெயரை வைத்து அந்த பஸ் ஓடிக்கொண்டிருந்தது...

 அந்த பஸ் ஒரு டிரைவர் பாட்டையா ஓட்டிக்கொண்டு இருப்பார்.

 அதற்குப் பிறகு பேரின்பவிலாஸ் பஸ் ஓடத்துவங்கியது.  பின்னர் MPR ட்ரான்ஸ்போர்ட் , அரசு  பஸ்... அதுவும் கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரேநேரத்தில் பஜார் அண்ணா வீதியில் எதிரும் புதிருமாக 2 பஸ்கள் நுழைந்து செல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

 இன்றைக்கு 2 கார்கள் சிக்கி முக்கிக் கொண்டு செல்வதை உணர்கின்றோம்.

மேலப்பாளையத்தில் மேற்கு புறத்தில் உள்ள எங்கள் தெருவில் இருந்து  கொடி மரம், அண்ணா வீதி, காயிதே மில்லத் பள்ளிக்கூடம் ரோடு.... உள்ளே நுழைந்து, எதிரே இன்னொரு வேன் அல்லது சிறிய வகை லாரி வந்து விட்டால் அந்த சாலையில் இருந்து வெளியேறுவதற்கு போக்குவரத்தின நெருக்கடியினால் பத்து நிமிடங்கள் ஆகின்றன.

அதற்காகவே வாய்க்கால் பாலம் சென்று கால்வாய் கரை உள்ள சாலையின் வழியாக குறிச்சி வந்து முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி... ஜங்சன், பாளையங்கோட்டை அல்லது அம்பை ரோடு செல்வதற்கு முடிகிறது. 

இந்தச் சாலை விரிவு படுத்தப் பட்டு வருவது.... மேலப்பாளையத்தில் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு, இன்னும் நத்தம் பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பாளையங்கோட்டை போய் வருபவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக உள்ளது

 இதற்கெல்லாம் காரணம் அண்ணா வீதி பழைய வீதியாக இருப்பதே.....

அதே நேரம் முன்னர் நடந்தோ....

 சைக்கிளிலோ வந்துதான்  மீன், இறைச்சி, காய்கறிகள் ,பல சரக்குகள் வாங்கி செல்வார்கள்.

 இன்றைய காலம் அனைத்து வீடுகளிலும் ஒன்று இரண்டு பைக்குகள் உள்ளன.

 அந்த பைக்கு களில் வரக்கூடியவர்கள்.... எங்கெல்லாம் செல்கிறார்களோ.... அந்தக் கடை வாசல்....சாலை, அவர்களுக்கு பார்க்கிங் ஆக மாறிவிடுகிறது.

அதுவே அனைத்து போக்குவரத்துகளுக்கும் இடையூராய் மாறிப்போகிறது...

அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்வது ஒரு நாளைக்கு  பகலில் 12 முறையும்  இரவில் 5 முறையும் வந்து செல்ல வேண்டும் என்பது குறைந்த பட்ச விதியாகும்....

 ஊரில் நெருக்கடியான போக்குவரத்து உள்ளதால்  அரசு பஸ்சை ஓட்டக்கூடிய டிரைவர்கள் எவரும் மேலப்பாளையம் ரூட்டில் வந்து ஓட்ட விரும்புவது இல்லை.

 அண்ணா வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு முன்பாக மாலை 7 மணிக்கு பிறகு மிகுந்த சிரமப்பட்டே செல்ல முடிகிறது.

 காரணம் அங்கும் நிறுத்தப்பட்டு உள்ள பைக்குகள் தாம். யாரையும் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக 10 ஆம் நம்பர் பஸ் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு கொக்கிரகுளம் வழியாகச் செல்லும். 

ஒவ்வொரு மணி நேரமும் சொல்லி வைத்தாற் போல் சரியாக வந்து செல்லும் டிவிஎஸ் பஸ் சர்வீஸ் இருந்தது.

 அப்புறம்....  IR, SGKR, GMT கம்பெனி பஸ்கள்.... பாளையங்கோட்டை வழியாகச் சென்று.... திரும்பி... மீண்டும் அதே வழியில் வரும்.

 ஐ ஆர் பஸ் ஓட்டக்கூடிய டிரைவர்கள் பெரும்பாலும் மிக வேகமாக ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

 ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் இருந்து 18 ஆம் நம்பர் பஸ் என்று ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு பஸ் சர்வீஸ் இருந்தது.

 அந்த  பஸ் ஏறி ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சென்று வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

 இன்றைக்கு 18 ஆம்  நம்பரையும் காணோம்.

 10 /30 என்று ஒரு பஸ் இருந்தது.

 அந்த பஸ் மேலப்பாளையத்திலிருந்து கோபாலசமுத்திரம் வரை சென்று வரும்.

 நான் விவசாயம் செய்து வருகின்ற காடுவெட்டி கிராமத்திற்கு பஸ் வேண்டும் என்று கேட்டு 14 என்கிற ஒரு பஸ் சர்வீஸ் மேலப்பாளையத்தில் இருந்து சிங்கிகுளம் காடுவெட்டி...

வெங்கட்ரங்காபுரம் வரை சென்று வந்தது.இப்போது 14 A என்று போய் வருகிறது...

 படத்தில் உள்ள பஸ் போன்றே தான் ....தாஜ் மஹால் டிரான்ஸ்போர்ட் பஸ் மேலப்பாளையத்தை சுற்றி வரும்.

 அந்த நினைவுகள் எல்லாம் மனதில் வந்தன.

ஞாயிறு, 31 மே, 2020



எங்கள் வீட்டில் என் தந்தை காலத்தில்... அடிக்கடி கேட்ட பெயர்.
சிங்கம்பட்டி ராஜா TNS. முருகதாஸ் தீர்த்தபதி என்கிற அந்த கடைசி ராஜாவின் பெயர் .
தென்னாட்டு வேங்கை நல்லகுத்தி புலிக்குட்டி சிவசுப்ரமணிய கோமதி சங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர TNS முருகதாஸ் தீர்த்தபதி ராஜா என்கிற நீண்ட கம்பீரமான பெயரைப் பெற்றிருந்தார் அவர்.
சிலவேளைகளில் ஊத்து மலை ஜமீன்தார்கள் இருதாலய மருதப்ப பாண்டியன், SM. பாண்டியன், தங்க ராஜ் பாண்டியன்...இப்போதுள்ள முரளி ராஜா என்று பேச்சுக்கள் நடக்கும்.
என் தந்தையை பெற்றெடுத்த எங்கள் பெரியவாப்பா LKS. முகம்மது மீரா முகைதீன் தரகனார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் , 14 கிராமங்களின் நஞ்சை புஞ்சை நிலங்களுக்கு உரிமையாளராக இருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள
சிங்கம்பட்டிக்கு அருகில்...
இன்றைய மணிமுத்தாறு அணைக்கட்டு நீர்தேக்க பகுதியில் உள்ள நிலங்களும், அதனைத்தாண்டி வைராவி குளம் பகுதியிலும் சில ஏக்கர்களில் நிலங்கள் எங்கள் தாத்தாவின் சொந்தமாக இருந்தன.
அதனால் அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்கள்.
அப்போது முதல் சிங்கம்பட்டி அரண்மனை எங்கள் குடும்பத்தோடு தொடர்புடையதாக இருந்தது.
அதுவும் இவர்களது தந்தை 30 ஆம் ராஜா காலம் தொட்டு இருந்தது.
எங்கள் வாப்பா.... ஒரு முறை புதிய ராஜ்தூத் பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு நேராக சிங்கம்பட்டி ராஜாவைக் காண்பதற்காக என்னையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
அப்போது நான் சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன்.
அது தான் எனக்கு அவருடனான முதல் சந்திப்பு.
அந்த பிரமாண்ட அரண்மனைக் கட்டுமானம் கொண்ட...மாளிகையை, அதன் தேக்கு மரப்படிகளை, முந்தைய ராஜாக்களின் படங்ளை, அவர்கள் பயன்படுத்திய பல்லாக்குகளை, வாள் மற்றும் கலைப்பொருட்களை கொஞ்சம் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என் தந்தை அவரகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்...
"யாரங்கே....பண்ணையாருக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாருங்கள்"...என்று அழைக்க கொஞ்ச நேரத்தில் பால் வந்தது.அதுவும் பிரமாண்ட கண்ணாடிக் குவளையில்...
எனக்கு நாடோடி மன்னன் படத்தில் MGR பழ ரசம் அருந்தும் குவளை கண் முன்னே வந்தது.
என் தந்தையுடன் பேசிக்கொண்டே...
என்னை உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்.
" உங்க மகன்...எங்கே படிக்கிறார்?" என்கிற விபரம் கேட்டார்.
நான் எழுந்து நின்று அதற்கு பதில் சொன்னேன்.
"சபாஷ் "....என்றார்.
அவர் இலங்கையில் இளமை க்காலத்தில் கல்வி கற்றக் காலங்களைச் சொல்லிக்காட்டினார்.
உங்களுக்குத் தமிழில் என்னவெல்லாம் தெரியும் ? என்று அவர் கேட்க...
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியதைச் சொன்னேன்.
"ஆஹா....பிரமாதம் "என்றார்.
அவர் ஜாதகம், முன் ஜென்மம் போன்றவற்றில் மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கொஞ்சநேரம் என்னை உற்று நோக்கினார்....பின்னர் பல விஷயங்கள் என்னைப்பற்றி என் தந்தையிடம் சொன்னார்.....அவை எனக்கும் என் தந்தைக்கும் உரியவைகளாகும்.
" இவர் கல்வி, கலை, இலக்கியம், நாடகம் தொடர்பானவர்... ஊருக்கு உரியவர்.அதிகம் படிக்க மாட்டார்...ஆனால் படித்துக்கொண்டே இருப்பார்" என்று.... எனது 21 ஆம் வயதில் சொன்னதை மட்டும்
வெளியே சொல்ல முடியும்.
இன்னும் நிறைய பேசினார்.
என் தந்தை அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டார்.
அவர் ஒரு ஞானி போல பேசிக்கொண்டு இருந்தார்.
ஆமாம்...." மேலப்பளையத்தில் பாத்திமா தர்கா என்று இருப்பது தெரியுமா ? " என்று கேட்டார்....நான் விழித்துக்கொண்டு நின்றேன்.
"ஆமாம்....இருக்கிறது " என்று என் தந்தை சொன்னார்கள்.
அதற்கு அவர் அந்தப் பாத்திமா ஒரு பெண் ஞானி என்று சிலவற்றை சொன்னார்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டு அரண்மனையில் உணவு முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஊருக்குப் புறப்பட்டோம்.
1988 ஆம் ஆண்டில் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ...நாடு திரும்பிய பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவராகவும் திகழ்ந்த பன்னூல் ஆசிரியர், கல்லிடைக்குறிச்சி TMP என்கிற கல்லிடை TM.பீர்முகம்மது அவர்களின் பேத்தி திருமணத்தில்.... என்னைப்பார்த்துவிட்டு அழைத்தார்.
அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். " உட்காருங்க... தலைவரே " என்று என்னைப்பார்த்து சொன்னார்.சுற்றி நின்றவர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
இவர்... LKS மகன் என்று TMP அறிமுகப்படுத்தினார்.
" யாரு...இவரா ? இவருக்கும் எங்க அரண்மனைக்கும் தலைமுறைகள் தொடர்பு ".....என்று அவர் சொல்லி முடித்தவுடன்...பக்கத்தில் நின்றவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
எப்போதாவது....அவரைப்பார்க்கச் செல்வேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மேலப்பாளையம் பரோடா வங்கிக்கு சொந்த அலுவலாக வந்தார். நான் வழக்கம் போல அவர் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
எங்கள் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவிற்கு அழைத்தேன்.அதற்கு வருகை தர அங்கேயே ஒப்புதல் பெற்றேன்.
பள்ளிக்கூடத்தில் விழா நடந்து கொண்டு இருந்தது.
திடீரென....என்னைப்பார்த்து
" செல்வா " என்றார்.
எங்கள் சேர்மன் MAS. அபூபக்கர் சாகிப் ..."அவன் பேர் மீரான் முகைதீன் " என்றார்.
தெரியும்.
" பாத்திமா தர்காவுக்கு போகணும் வா " ...என்றார்கள்.
நான் காஜா நாயகம் தெரு மையவாடியின் கிழக்கு பகுதியில் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.
காருக்குள்ளே இருந்த அரச தலைப்பாகையை கட்டிக்கொண்டு உள்ளே சென்றார்...என்னை வெளியே இருக்கச் சொல்லிவிட்டார்.
நீண்ட நேரத்திற்குப்பின்னர் கதவைத்திறந்து வெளியே வந்து... புறப்படுங்கள் ...என்றார்.
பல்வேறு சந்திப்புக்கள்...
அவருடனான உரையாடல்கள்
இனி நடக்கப்போவதில்லை.
உயர்ந்த அரிதான மனிதர்.அதுவும் சிங்கம்பட்டி ராஜ குடும்பத்தில் கடைசி மன்னராக அரசால் அன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
அவரிடத்தில் சென்று பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் அமைக்க இடங்கள் கேட்டபோதெல்லாம் கைகாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்லியவர்.
சிங்கம்பட்டி ஊர் பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைந்துள்ள நிலம் அவர் கொடுத்த இடங்கள் தாம்.
" எங்கள் சமஸ்தானத்தில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவர்கள் என் மக்கள்.....அவர்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் " என்பார்.
அடிக்கடி மரணம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர்
24.5.2020 அன்று இறந்து போய்விட்டார்.
25.4.2020 அன்று நோன்புப்பெருநாள்...மதியம் ஊரிலிருந்து புறப்பட்டுச்சென்று
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு ...வந்தேன்.
வாழ்க சிங்கம்பட்டி ராஜா புகழ்.

ஞாயிறு, 24 மே, 2020

திருநெல்வேலி மேலப்பாளையம்...
எங்கள் தெரு....
அதன் வயது 125 ....
ஒரு காலத்தில் அதுக்குப்பேர்
ஐயர் தெரு...
ஐயர் தோட்டம்....
அங்கே மேற்கே பிள்ளையார்
கோவிலும் .....
கிழக்கே கந்த கோட்டமும்
இன்றும் உள்ளன.
1895 ஆம் ஆண்டு
ஸ்ரீசுப்பய்யர் என்கிற பெரியவரும்
இன்னும் 2 நபர்களும்
சேர்ந்து என் தந்தையின்
பாட்டனார் உள்ளிட்ட
3 பேர்களிடம்
தெருவை விற்றுவிட்டு
குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே...அக்ரகாரம் அமைத்தார்கள்....
அது ஒரு பெரிய வரலாறு.
எங்கள் வீட்டிலிருந்து 150 அடி தூரத்தில் உள்ள இந்தக்கோவில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அந்தக்கோவிலின் முகப்பு பார்த்துத்தான்
முக்கிய சாலைகளுக்குச் சென்று கொண்டுள்ளோம்...
முஸ்லிம்களைத் தவிர...
வேறு சமூகங்கள் எவரும்
கோவிலைச் சுற்றி இல்லை.
அந்தப் பெரிய ஐயர் அவர்கள் ...நிலத்தை விற்பனை செய்யும் போது எங்கள் முன்னோர்களிடம்....
" இந்தக்கோவிலுக்கு, எந்த மரியாதைக்குறைவும் வாராமல் பார்த்துக்கோங்க...."
என்று கண் கலங்கிச் சொன்னதை ,
எங்கள் முன்னோர்கள் தொடர்ந்து
எங்களிடம் சொல்லிவைத்துச் சென்றுள்ளார்கள்...
அது இன்றும் தொடர்கிறது.
இந்தக் கோவிலுக்குப் பின்னே....50 அடி தூரத்தில் பள்ளிவாசலும் அமைந்துள்ளது...
மாலை நேரங்களில் எங்கள் குடும்ப மூத்தவர்கள்,
முஸ்லிம் குடும்பங்களைச்
சேர்ந்த
பெரியவர்கள், இளைஞர்கள்
இங்கே கூடுவது வழக்கம்.
எங்கள் தெருவின் வரலாறு..... மதநல்லிணக்கத்தை, பிறர்க்கு சொல்லிக்காட்டுகிறது.

மேலப்பாளையம் தெருக்கள்....பெயர் மாறிய கதை



எனக்கும் ....எங்க தெரு காரங்களுக்கும் ...லெட்டர் , கிட்டர் போட்டா...ஆதியில் அய்யர் தெரு அப்படின்னு போட்டு அனுப்புவாங்க.

அதுக்குப் பொறவு உச்சிலி லெப்பைத் தெருவுன்னு போட்டு அனுப்புவாக.... இப்பம் எல்லாம் புகாரி தங்கள் தைக்கா தெருன்னு நெடுப்பமா தெருப்பேர எழுதி போடுறாங்க.

இப்போ உள்ள சின்ன ஊரார்லாம் "அதென்னங்க உங்க தெருவுக்கு இத்ண தினுசா பேரு? "...அப்படின்னு கேள்வி வேற கேட்கிறாங்க .

" எப்பா எங்க தெருவுக்கு மட்டுமில்லே... நம்ம ஊர்ல பல பேருக்கு பழைய தெருவுங்க பேரு தெரியாது" ன்னு ஒரு போடு போட்டேன்.

"என்னத்த இப்பிடி சொல்றிய?
" பழய பேரா?"....

"ஆமாண்டே...பழய பேர் தான்" .
நம்ம ஊருக்கு அசல் பேரே...மங்கை நகர்.அது திரு மங்கை நகர்ன்னு ஆகி...திருவி...மேல் பாளையம், மேலப்பாளையமா ஆகிப்போச்சு.

சரீ... தெருப்பேருக்கு வா...அந்த விஷயத்த பேசுவோம்.

மஞ்சி வீட்டுத்தெரு...சீக்கா லெப்பை தெரு...அதுக்கு ஆதிப்பேரு ஷேக் அப்துல் காதர் லெப்பை என்கிற சிக்கலார் லெப்பை தெரு மாறி....அப்பிடி ஒரு பேர் இருந்து பஷீர் அப்பா தெருன்னு ஆச்சு.

சரக்கி மூப்பன் தெரு...காயிதேமில்லத் தெரு ஆச்சு.

தண்ட லெப்பை தெரு ஜமாலியா தைக்கா தெருன்னு வந்துச்சு.

பள்ளிவாசல் மூப்பன் தெரு உமறுப்புலவர் தெரு....ஆச்சு.
அதுக்கு நம்ம புலவர் .த.மு.சா.காஜா முகைதீன் காரணம்.

தமிழ் இலக்கியத்தில் சீராப்புராணம் பாடிய உமறுப்புலவர் மீது அந்தக்காலத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது....ஆகவே உமறுப்புலவர் தெருன்னு பேர் வந்துச்சு.....இன்றைய உஸ்மானியா அரபிக்கல்லூரி இருந்த பழைய இடத்தில் இலாஹி பிரஸ் என்று அச்சகம் வைத்து இருந்தார். அன்றைய காலத்தில் அவர் அ.தி.மு.க.இயக்கத்தில் அமைப்பாளராக MGR அவர்களால் நியமிக்கப்பட்டு இருந்தார்..

முகம்மது லெப்பைதெரு, ஹஸ்ரத் பிலால் தெரு...ஆச்சு.அதுக்கு MOA. சுக்கூர் மாமா தான். காரணம்.அதுக்கு தனி கதை இருக்கு.

1976-77 ஆம் ஆண்டுகளில் இசைமுரசு நாகூர் ஹனீபா...பெரியார் பிலாலின் தியாக வாழ்வை கூறுவேன் இதோ...என்ற ஒரு பாடலை இசைத் தட்டாகவெளியிட்டார். பொறவு...அது கேசட்டாக பதிஞ்சு ஊர் முச்சூடும் பரவியது.

இசைத்தட்டு பாட்ட விட...மேடைகள்ள  இசைமுரசு நம்ம...நாகூரனிபா அண்ணன் பாடுறது...ரொம்ப உருக்கமா...கடைசில பிலால் பாங்கு சொல்லி...அப்படியே சரிஞ்சு ரூஹ விடுற சரித்திரத்தை.... முழுசும் பார்த்த மாதிரி இருக்கும்....

இந்தப்பாட்டு வர்றதுக்கு முந்திலாம்...யாராவது ஆலிம்சா மாருங்கதான் ஹஸ்ரத் பிலால் வரலாறை கூட்டங்கள்ல சொன்னாத்தான் உண்டு....

பெரும்பாலான அப்பாவிகள் அப்ப மார்க்கம் மற்றும் நபித்தோழர்கள் வரலாறு  தெரியாத ஆட்களாத்தான் இருந்தாங்க....

அந்தக் கேசட்ல இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுனதக்  கேட்டுட்டு பல பேர்கள் கண்ணீர் பொங்க... விக்கி விக்கி அழுவாங்க...அவ்வளவு ஈடுபாட்டோடு பாடுகிற இசைமுரசுவை பார்த்துக் கொண்டு பாடல்களைக் கேட்பார்கள்.குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் கச்சேரி நடக்கும்.அதுவும் நள்ளிரவுகள் தாண்டியும் நடக்கும்.

மேலப்பாளையத்து ஜின்னா மைதானத்துல 1977 ல முஸ்லிம் ஏழைப்பெண்கள் திருமண வாழ்வு அமைப்புச் சங்கம் நிதி வசதி பெற... சங்கத்துக்கு உதவி செய்ய இசைமுரசு அவர்கள் இலவசமாக ஒரு கச்சேரியை நடத்தி...
அதிலே வசூலான தொகை முழுசையும் ஏழைப்பெண்கள் வாழ்வமைப்புச் சங்கத்துக்கு கொடுத்தார்கள் .

அந்த இசை நிகழ்ச்சியில் பெரியார் பிலாலின் தியாக வாழ்வை பற்றி பாடியதைக் கேட்ட ஆண்களும் பெண்களும் அழுது கொண்டே இருந்தார்கள் என்கிற காட்சி இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது.

முஹம்மது லெப்பைத் தெரு MOA.சுக்கூர் மாமா அவர்கள் தன்னுடைய வீட்டு வாசலில் டேப் ரிகார்டரில் இந்த பாடலை போடும் போது.... அவரைச் சுற்றி வயசு வித்யாசம் இல்லாமல் இருந்துகொண்டு இந்த பாடலை ரசித்து கேட்பார்கள். அங்கேயும் கண்ணீர் சிந்துவார்கள்.

காலை.... மாலை... இரவு என்று இந்த காட்சிகள் நடக்கும்.
சுக்கூர் மாமா பக்கத்தில் முகம்மது லெப்பை தெரு மறைந்த பச்சை வேட்டி கச்சா மஸ்தான், காளை மைம்பிச்சை இன்னும் சில பேர்கள் அமர்ந்து கண்ணீர் மல்க இப்பாடலைக் கேட்பார்கள்.

அப்போது தெருப்பேர மாத்த நகராட்சி ஏற்பாடு செஞ்சுது.

இதுதான் ஒரு வாய்ப்பு என்று அந்த முகமது லெப்பை தெரு பேரை நீக்கிவிட்டு ....ஹஸரத் பிலால் தெரு என்று தன்னுடைய செல்வாக்கை ....மேலப்பாளையம் நகர் மன்றத்தில் முன்னிறுத்தி பெயரை மாற்றினார்.

தெருவின் பெயராக தொலங்கிய முகம்மது லெப்பை ஆலிம் அவருக்கு பெத்தவாப்பா என்பது இன்னொரு தகவல்.அவர் பேர தான் அந்தத் தெருவுக்கு வச்சு இருந்தாங்க.

"லட்சுமிபுரம் தெரு தெரியுமா?"...
"லட்சுமிபுரம் தெரா?"
"ஆமோ...வ்"
"அது எங்க இருந்துச்சு?"
"குண்டு தெரு...தெரியுமா"
"ஆமா...நம்ம காஜா நாயகம் தெரு.அதுக்கும் தனி  வரலாறு இருக்கு"....

குட்டி மூப்பன் தெரு செய்யது
" இஸ்மாயீல் தங்கள் தைக்கா தெரு...
ராவுத்தர் லெப்பை தெரு, அத்தியடி தெரு.... பெரிய கொத்துபா மேல, கீழ, வடக்கு, தெற்கு... என்று நீண்ட பெயர்த்தொடரோடு ஆகிவிட்டது.
பள்ளிலெப்பை தெரு
ஆசுரா தெரு ஆச்சு... எங்க தெரு இதுக்கெல்லாம் பேர் வச்சது RMA. அப்துல் சமது மாமா தான்.

வீராத்தெரு...கீழ வீரராகவத்தெரு செய்து லெப்பை தெருவாய் இருந்து செய்குல் அக்பர் தெருவாச்சி.
மூப்பன் பக்கீர் தெரு... அக்பர் தெரு ஆச்சு....

ஹாமீம்புரம் தெற்குத்தெருவுக்கு அப்புறம் உள்ள தெருக்கள் யாவும்...1985 க்கு பிறகே உருவாகின.

சரீ.... எதுக்கு இந்தப் பழைய பேர...எதுக்கு மாத்தினாங்கன்னு தெரியனுமே...

1977 ஆம் ஆண்டு மொத தடவையா மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட MGR ஆட்சிக்கு வந்தார்.... ADMK முதல்வர் .....MGR அவர்கள்   தெருக்களின் பெயர்களில் உள்ள  உள்ள சாதிப்பெயரை எடுக்கப் போறதா சொல்லி  உத்திரவு போட்டார்....அதன் தொடர்ச்சியா.....மேலப்பாளையம் தெருக்களின் பெயரில் இருந்த.....லெப்பை........., பிள்ளை.....,மூப்பன்.... இதுவும் ஜாதி ன்னு சொல்லி அந்த பெயர்களை அரசாங்கம் நீக்கி உத்தரவு போட்டது...

சென்னையில் பல தெருப்பெயர்கள் ஜாதிப்பெயர்களோடு தான் இருந்தன.புரட்சித்தலைவர் MGR குடியிருந்த ஆற்காடு முதலியார் தெரு ஆற்காடு தெரு என்றும்...மல்லன் பொன்னப்ப முதலி தெரு பொன்னப்ப தெரு என்றும்....லெப்பை பள்ளித்தெரு,  பள்ளித்தெரு என்றும் புது நாமங்கள் கொண்டன......அவை சிரிப்பைத்தந்தன.

அத வச்சித்தான்
குட்டி மூப்பன் தெரு,
உச்சிலி லெப்பை தெரு,
மைலக்காதர் லெப்பை தெரு
செல்வக்காதர் லெப்பை தெரு
பள்ளிவாசல் மூப்பன் தெரு
சரக்கி மூப்பன் தெரு
ராவுத்தர் லெப்பை தெரு
அத்தியடி தெரு
பள்ளி லெப்பை தெரு
சப்பாணி லெப்பை தெரு

முன்னாள் சேர்மன்கள் LKM. அப்துர் ரகுமான் சாகிப், MAS. அபூபக்கர் சாகிப், ஆகியோர் முயற்சியால் அவர்கள் வாழ்ந்த தெருக்களில் இருந்த லெப்பைகள் நீக்கப்பட்டு மைலக்காதர் தெரு, சப்பாணி ஆலிம் தெரு என்று ஆகியது....MAS அபூபக்கர் சாகிப் சப்பாணி ஆலிமின் குடும்பம் என்பது கூடுதல் தகவல்.

பிள்ளை, மூப்பன் என்பது இங்கே ஜாதிப்பெயரான்னு கேட்டால் ஆமான்னு தான் சொல்லணும்...சண்டைக்கி கிண்டைக்கி வந்துராதிய...அதிலும் வரலாறு இருக்கு.

ஆலப்பிள்ளை தெரு,
மொத்தை மீராப் பிள்ளைத்தெரு,
மூலன் அகமது பிள்ளை தெரு....
 இன்னும் அந்தப் " பிள்ளை" பெயரில் தான் உள்ளன..
சமாயினா காதர் மீத்தீன் மூப்பன் தெரு, சமாயினா ஷேக் முகமது மூப்பன் தெரு என்கிற பெயரில் மூப்பனை தூக்கிவிட்டார்கள்.

அது போல....மூப்பன் பக்கீர் தெரு என்கிற பெயரை மாற்றித்தான் அக்பர் தெரு என்று வந்தது...பள்ளி வாசல் மூப்பன் தெருவை மாற்றித்தான் உமறுப்புலவரும்,சரக்கி மூப்பனை மாற்றி காயிதேமில்லத் பெயர்களும் வந்தன.

ஞானியார் அப்பா பெரிய தெரு, சின்னத்தெரு...இப்போது வெறும் பெரிய தெரு சின்னத் தெருவா...இருக்குது.

யாதவாள் தெரு, மறக்குடித் தெரு என்பவை .... பாரதியார் தெரு என்றும்
மருது பாண்டியர் தெரு என்றும் ஆட்டுவாணியர் குடியிருப்பு ஆண்டவர் தெரு என்றும்......மரைக்காயர் தெரு முகைதீன் ஆண்டவர்  தெரு என்றும் மாறிப்போனது.

இன்றைய அண்ணா வீதிக்கு....அப்போதெல்லாம் மேல நத்தம் மெயின் ரோடுன்னு  தான் பேர் இருந்தது.MAS.அபூபக்கர் சாகிப் காலத்தில் அது அண்ணா வீதியாக மாறியது.

1969-75 ஆண்டு அன்றைய கால கட்டத்தில் LKM,அப்துர் ரகுமான் சாகிப்
 மேலப்பாளைய நகர்மன்றத்தில் முஸ்லிம் லீக் சேர்மனாக இருந்த போது,
அரசு நடுநிலைப்பள்ளி காயிதே மில்லத் நடு நிலைப்பள்ளியாகி உயர்நிலைப்பள்ளி யாக மாறி...தற்போது மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கிறது.....

அதற்கு முன்னரே அபுல் கலாம் ஆசாத் ரோடும், நகர் மன்றத்தில் மௌலானா முகம்மது அலி மண்டபமும் வந்து விட்டன.

1977ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் MGR அவர்கள் ,அ.தி.மு.க ஆட்சி அமைக்க தேர்தல் பிரச்சாரம் செய்ய மேலப்பாளையம் முனிசிபல் அலுவலகம் மேற்கே இருந்த காலியிடத்தில் மேடை அமைக்கப்பட்டு நள்ளிரவும் தாண்டி பேச  வந்து இருந்தார்.....அதனை அண்ணா திடல் என்று அழைத்தார்கள்....


எந்தப்பேர் எப்பிடிப்போனாலும் எங்க தெருவை ஐயர் தெருன்னு தான் இப்பவும்...கூப்பிடுதாக.