வெள்ளி, 18 மே, 2012

விளையாட்டை........ விளையாட்டாய்



இந்தக் காலப் பிள்ளைகள் கோடைக் காலத்தை எப்படியெல்லாம் கழிக்கிறார்கள்.?
பெரும்பாலும் விளையாட்டு தான்.அதுவும் கிரிக்கெட் மட்டும் தான்.மிகக் குறைந்த அளவினர் மட்டுமே பூப்பந்து வாலிபால்,டென்னிஸ் ஆட்டத்தை விரும்புகிறார்கள்.
சிலர் விடிய விடிய கேரம்போடு.செஸ் விளையாட்டில் மூழ்கி முத்தெடுத் துக் கொண்டுள்ளார்கள்.எப்ப முழிப்பார்கள்?,எப்போ தூங்குவார்கள்? என்பதே தெரியாமலிருக்கும் போது உங்க திங்க கழிக்க முழிக்க எப்ப போவார்கள்ன்னுயாருக்குத் தெரியும்.? 
சில வங்கிளடுகள் தம் பேரப்பிள்ளைகளிடம் "இன்னிக்கி ரன் எத்துனப்பா எடுத்தாணுவ?"
"சச்சின், தோணி வள்லாட்டு எப்பிடிடே?"
"என்ன எழவு வள்லாட்டு வெளாடுரானுவோ?"
"போக்கத்தவனுவோ,.......இவ்னுவளை எதுக்குத் தான் இந்தியால வச்சிருக்கானுவோ?"
இப்படி ஏதாவது ஒன்னை போகிற போக்கிலே சொல்லிட்டுப் போய் விடுவார்கள்.இல்லையென்றால் ஒன்னும் தெரியாத ஆசாமின்னு பேர் வாங்கணுமே.
சில பேர்கள்; "இன்னிக்கி கிரிகெட்டுல எத்தனை கோல் போட்டானுவோ"ன்னு கேட்டு அதிர்ச்சி ஊட்டுவார்கள்.
இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது என்பது வேறு.
அனைத்து ஆட்டங்களிலும் அது மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று  .சொல்வது வேறு.
இரண்டுக்கும் வித்யாசம் நிறைய உள்ளது.இவர்களிடம் வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்பதைச் சொல்லியாக வேண்டும்.ஊடகங்களும் சொல்லியாக வேண்டும்.
இந்த டி.வி.வந்த பிறகே எல்லாம் மாறிவிட்டது.கிரிக்கெட் மோகம் தலைக்கு மேல் ஆடத் தொடங்கிவிட்டது.மத்த விளையாட்டப்பார்க்க யாருமே ஆவல் கொள்வதில்லை.
நல்லவேளை தூரதர்ஷன் புண்ணியத்தில் ஹாக்கி,வாலி பால்,மாதிரி சிலதுகள் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றன ..தனியார் கையில் பணம் மட்டுமே வரும் விளையாட்டு தான் தெரியும்.
ஒரு காலத்தில் திருநெல்வேலி வட்டாரத்தில் பிரபலமாக இருந்த "அமெரிக்கா புகழ்" சாப்ட் பால் விளையாட்டு இன்று கிரிக்கெட் ஆக்கிரமிப்பால் அழிந்தே போய் விட்டது.மேலப்பாளையத்தில் இந்த வித்தை தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
அது போலவே டென்னி கட் ரிங் விளயாட்டும். அதிலும் மாநில அளவில் கில்லாடிகள் மேலப்பாளையத்தில் இருந்தார்கள். சின்ன பிள்ளைகளிடம் டென்னிகட் ரிங் தெரியுமா? என்று கேட்டால் "கையில் கட்டுகிறது தானே"? என்று கேட்கிறார்கள்,
"ரொம்ப கொளப்பாதிய.....டென்னி கட் ரிங்குன்னா சிம்பு கையில் கட்டுறது தானே.இது தெரியாதுன்னு நினைச்சிட்டியளா"? இது அந்த விளையாட்டை பற்றிநான் கேட்டதுக்கு ஒரு சேட்டைக்காரன் என்னிடம் சொன்னது.
ஒரு காலத்தில் மேலப்பாளையத்தின் கிழக்கே பாளையங்கோட்டையில் ஹாக்கி விளையாட்டில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.இப்போ அங்கேயும் ஹாக்கி மீது கொஞ்சமாவது பிரியம் கொண்டவர்கள் எங்கே ?என்று தேடுகிறார்கள்.
நாங்க சின்ன பிள்ளைகளா இருந்த போது கபடி விளையாட்டு ரொம்ப பிடித்தமானது.என் வயசுக்காரர்கள் கால் கை மூட்டுக்களில் கபடி விளையாட்டின் "விழுப் புண்கள்" தந்த வீரத் தழும்புகள்..... "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாட்டு பாடுகிறது.
ஆதித்தனார் அவர்களின் அரும் பணியால் தமிழ்நாட்டு கிராமங்களின் விளையாட்டான கபடி, அகில இந்திய அளவில் பரவி, இன்று சர்வ தேசமாக மாறி ஒலிம்பிக் கோட்டை தொடப்போகும் பக்கம் வரை போய் விட்டது.
மேலப்பாளையத்தில் எங்களின் சிறு பிராயத்தில் மைலக்காதர் தெரு இளைஞர்களிடம் இந்த விளையாட்டு மீது மிகுந்த வெறியே உண்டு.அந்த இளைஞர் அணியின் "செவன் ஸ்டார் குரூப்" திருநெல்வேலி ஜில்லாவில் ரொம்பப் பிரபலம்.அவர்களை எதிர்த்து பானாங்குளம் அணி வரும்.இருவரின் ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும்.
நடுவர்களாக எங்கபள்ளியின் "சின்ன ட்ரில் மாஸ்ட்டர்" யூசுப், மற்றும்,"பெரியட்ரில் மாஸ்ட்டர்"அகமது மீரான் ஆகிய இருவரும் வாயில் விசிலுடன்இருப்பார்கள்.
கபடி விளையாட்டு கண் மண் தெரியாமல் கோபத்தை கொடுக்கும்.அந்த நடுவர்கள் தான் விளையாட்டின் தலை விதியை நிர்ணயிப்பார்கள்.எங்களுக்கெல்லாம் அந்த இருவருக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாதேன்னு பக் பக்குன்னு பயமா இருக்கும்.
மேலப்பாளையத்தில் தற்போது கபடி அழிஞ்சே போய் விட்டது.
பல இடங்களில் கபடி நடந்தால் கலவரமே வந்து விடுகிறது.
எங்களின் விவசாய கிராமத்தின் பக்கம் ஒரு பொங்கல் நாளில் நடந்த கபடிப் போட்டியில் "ரெப்ரி" கொடுத்த தீர்ப்பு இரு அணிகளுக்கும் சண்டை ஆகி .பாக்க வந்த ரன்ன்டு சைடு ஆட்களுக்கும் சண்டை ஆகி.ரன்ன்டு கிராம மக்களுக்கும் அருவா கம்பு, வெட்டு.குத்து வரைக்கும் போய் விட்டது.
ஜெயிச்சவங்களுக்கு பரிசுக் கோப்பை கொடுக்க, விழாவுக்கு போன சிறப்பு விருந்தினர்கள் தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு ஓடி வந்தது திகில் கதைக்கு ஒப்பானது.கையில் கிடச்சவங்களுக்கெல்லாம் அடி,உதை விழுந்தது.பிருத்து தள்ளிட்டாங்க....கோர்ட்டுக்கும் வீட்டுக்குமா ரண்டு ஊர்க்காரர்களும் ஒரு பத்து வருசத்துக்கும் மேலா அலைன்ஞாங்க.அப்புறம் பஞ்சாயத்து பேசி சுமூக மானது தனிக் கதை. சில இடங்களில் கபடி விளையாட்டு வீரன்னு சொன்னா.மற்றவர்கள்,அவர்களை "சண்டியர் பார்வை" பார்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
சில இளைஞர்கள் குத்துச் சண்டையோடு, அடிதடி அராஜகம் வரை போகும் WWF விளையாட்டை என்னமா ரசிக்கான்னு பாத்தா, பேசவே பயமா இருக்கு.
ரா விடிய அந்தக் குத்து, அடி மிதியையே திரும்பத்திரும்ப பார்த்து ரசிக்கிறார்கள்.இது கொடூரம்ன்னு அவர்களுக்கு யார் எடுத்துச் சொல்லுவது?மனிதனை மனிதன் தாக்கிக் கொள்வதை ரசிப்பது எந்த வகையில் உசத்தி?
மேலப்பாளையத்தில் ஒவ்வொரு மழைக் காலமும் ஒவ்வொரு விளையாட்டையும் மாற்றும்.
தெல்லுக்காய்,குச்சிக் கம்பு,கோலிக்காய்,பம்பரம்,பேப்பந்து, ரயில் வண்டி ஓட்டம்,பாண்டி ஆட்டம்,ஒத்தையா,ரட்டையா?,கண்ணாம் பூச்சி.கல்குத்து ,கல்லாங்குத்து,காதுல பூச்சொல்லி, தொட்டு விளையாட்டு, இம்புட்டு பணம் தரேன் விடுவியா......?குதிரை, கள்ளம் போலிஸ்,பட்டம் விடுவது,சடுகுடு அதான் கபடி,கிளியன் தட்டு,கிச்சு.......கிச்சு தாம்பாளம்,...பாம்பு அட்டை.சோழிதாயம்......சங்குசக்கரம்,இங்கு,நாகம்.பால்,........... .இதெல்லாம் கானாப்போச்சு....(தொடரும்)



   
      
   

7 கருத்துகள்:

ஸாதிகா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்கள் பதிவுகளைப்படித்தேன்.மிகவும் சுவாரஸ்ய நடையில் எழுதுகின்றீர்கள்.மேலப்பளையம் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.தொடருங்கள்.

LKS.Meeran Mohideen சொன்னது…

மிக்க நன்றி.உங்கள் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Asiya Omar சொன்னது…

தோழி ஸாதிகா என்னிடம் தங்கள் ஊர் தம்பி ஒருவர் எழுதுகிறார், நீங்களும் போய் பாருங்கன்னு லின்க் அனுப்பி வைச்சாங்க.உங்கள் மேடைப் பேச்சு பற்றி தெரியும்,தம்பி,மிக சுவாரசியமான எழுத்திற்கு பாராட்டுக்கள்.

LKS.Meeran Mohideen சொன்னது…

மிக்க நன்றி. தங்கள் போன்றவர்கள் இதை வாசிப்பததோடு, உடனே கருத்துரைகளும் எழுதுகிறார்கள் என்பது அறிந்து மகிழ்வோடு நன்றி கூறுகிறேன்.

Senthil சொன்னது…

சகோதரர் திரு எல். கே. எஸ். மீரான் அவர்களுக்கு,

ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் இன்று நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறதே என்று எண்ணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
நமது பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி சரியான வகையில் இளம் தலைமுறையினருக்கு சொல்லி கொடுக்காததாலும் ஊடகங்களின் கண்மூடித்தனமான பின்புலமும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் நமது விளையாட்டுகளை நம்மிடம் இருந்து அழித்து வருகின்றது.

மேலப்பாளையம் நகரில் மீண்டும் கபடி, சிலம்பம், ஹாக்கி போன்ற விளையாட்டுக்களை துளிர்க்க செய்ய வேண்டும். நமது ஊரில் இருந்து சிறந்த வீரர்களை உருவாக்கிட வேண்டும். அதற்காக தங்கள் முயற்சி மிகவும் அவசியம்.

மீண்டும் ஒரு அழகான பதிவை தந்தமைக்காக மிக்க நன்றி.

செந்தில் கண்ணன். செ. ஆ.
புது தில்லி - 3

Senthil சொன்னது…

சகோதரர் திரு எல். கே. எஸ். மீரான் அவர்களுக்கு,

ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் இன்று நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறதே என்று எண்ணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
நமது பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி சரியான வகையில் இளம் தலைமுறையினருக்கு சொல்லி கொடுக்காததாலும் ஊடகங்களின் கண்மூடித்தனமான பின்புலமும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் நமது விளையாட்டுகளை நம்மிடம் இருந்து அழித்து வருகின்றது.

மேலப்பாளையம் நகரில் மீண்டும் கபடி, சிலம்பம், ஹாக்கி போன்ற விளையாட்டுக்களை துளிர்க்க செய்ய வேண்டும். நமது ஊரில் இருந்து சிறந்த வீரர்களை உருவாக்கிட வேண்டும். அதற்காக தங்கள் முயற்சி மிகவும் அவசியம்.

மீண்டும் ஒரு அழகான பதிவை தந்தமைக்காக மிக்க நன்றி.

செந்தில் கண்ணன். செ. ஆ.
புது தில்லி - 3

LKS.Meeran Mohideen சொன்னது…

அன்பு இளவல் கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. கடந்த மூன்று நாட்களாக நான் ஊரில் இல்லை.சென்னையில் பல் வேறு கல்லூரிகளில் நமது ஊர் மாணவர்களை பொறியியல் படிப்பிற்கு சேர்க்கச சென்றிருந்தேன். தங்கள் கருதுரைகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி .