செவ்வாய், 13 நவம்பர், 2012

லிப்ட்.லிப்ட்.லிப்ட்.


 
பூமியில் இப்பவெல்லாம்   மேலே ஏறுவதும் இறங்குவதும் ரொம்ப சர்வ சாதாரணம்.ஆகிவிட்டது.மலைகளின் உச்சிக்குப் போக ,ஓடு தளம்  இருந்தால் விமானங்கள் ஏறி இறங்கவும்,ஓடு தளமே இல்லாத இடங்களுக்கு போய்வர   ஹெலிகாப்டர்,வசதிகளும் வந்துவிட்டது சில இடங்களில் இரு மலைகளையும் இணைக்க விஞ்ச் போக்குவரத்து வசதிகளும் இருக்கிறது.
சாலை வசதி இருந்தால் கார்,ஜீப்,பேருந்து,லாரி,பஸ் ஏன் மோட்டார் பொருத்தப்பட்ட எந்த வாகனத்திலும் எந்த உயரத்துக்கும் செல்லலாம்,வரலாம்..ஊட்டி,டார்ஜிலிங் மாதிரி மலைகளில் செல்ல அற்புதமான இயற்கையை ரசித்து வர மலை ரயில் வசதியும் உண்டு..கால் வலிமை கொண்ட பயில்வான்கள் சைக்கிளில் கூட போகலாம்.
அதுக்கு முந்தி எல்லாம், ஒன்னு நடக்கணும்:இல்லன்னா கழுதை.குதிரை ,ஒட்டகம்,மாதிரி விலங்குகள் மேல் அமர்ந்து போயாகணும்.சில இடங்களுக்குகுறிப்பா மலை மீதுள்ள அடர்ந்த காடுகளுக்கு  யானையிலே தான் போக முடியும்.
ராஜா மார்கள் காலத்துல பல்லக்கு ஊர்கோலம்தான்.அது மேட்டுக்கோ, பள்ளத்துக்கோ .எதுவானாலும் உள்ளே இருக்கவனுக்கு கவலை இல்லை.சுமப்பவன் பாடு சொல்லி மாளாது.
எதுவும் வேண்டாம் நடராஜா சர்வீஸ் போதும் என்றால் வேறு வண்டி வாகனம் எதுவும் தேவைப்படாது.

இதெல்லாம் வூட்டுக்கு வெளியே தான் வசப்படும்.வீட்டுக்குள்ள ஒசக்கப் போக என்ன செய்ய.ஏணிப் படிகளில் ஏறி இறங்கி தானே ஆகணும்: ஒல்லிக்குச்சு பேர்வழிகள் எப்பிடியாவது ஏறி இறங்கிடுவார்கள்.கொஞ்சம் குண்டு மண்டுகளாக இருந்தால். மேல் மூச்சும்,கீழ மூச்சும் வாங்குமே என்ன செய்யன்னு தான் லிப்ட் என்கிற ஒன்ன கண்டு பிடிச்சானாம்.
ஏறி இறங்க ரொம்ப கஷ்டமா இருக்கேன்னு ரொம்ப நாளைக்கு முன்னால மைசூர் மகராஜா அரம்மனையிலே லிப்ட் வச்சாங்களாம். வட நாட்டு ராஜாக்களும்,ஜமீன்தார்களும் சும்மா இருப்பாங்களா?அவங்களும் வச்சாங்க.

.ரண்டு மூணு மாடி கட்டி வீடுள்ளவங்களும்.அடுக்கு மாடி வீட்டில் குடி இருப்பவங்களும் லிப்ட் இல்லைன்னா? ஏறி இறங்க நெனைச்சே பாக்க கஷ்டம தான்.இப்போ அதையும் தாண்டி எஸ்கலேட்டர் வரை வந்தாச்சு.
சின்ன வயசு ஆசாமிகளுக்கு எஸ்கலேட்டரில், லிப்டில் ஏறி இறங்க கொள்ளைப்பிர்யம் தான்.இதை திருனவேலிப்ப்பக்கம் ஆரெம்கேவி ,போத்தீஸ்.இப்போ ஆரா சில்க்,சென்னை சில்க் பக்கமெல்லாம் பாக்கலாம்.
சில ஆஸ்பத்திரிகளில் சிலதுங்க நோயாளிகளை கொண்டு செல்லுற லிப்ட்டில் ஏறி இறங்கினால் தான் ஆச்சுன்னு சண்டித்தனம் பண்ணுவதையும் பார்க்க முடியும்.

லிப்ட்டுன்னு ஒன்னு இருக்குங்கற கதையே  திருநெல்வேலியில் சென்ட்ரல் டாக்கீஸ்ல வச்ச போது தான் எங்க பக்கம் நம்பினார்கள். அங்கே தான் லிப்ட் அறிமுகம் ஆச்சு. “அது ஓடி நான் பாக்கவே இல்லை”ன்னு அண்ணன் சேக்கான் சொல்லும் போது சுவாரஸ்யமாய் இருக்கும்..
“என்னது லிப்ட் ஓடவா? அது எங்க ஓடப் போவுது?எங்கேயும் போகாமல் ஒரே இடத்துல நிக்கும்” "ஏறி இறங்க” ன்னு திருத்திச் சொல்லுங்கன்னு சீண்டுவான்  சர்புத்தீன்.

"பரணி ஓட்டல்ல லிப்ட் வச்சி கட்டிருக்கானாம்லே.போய் ஏறி  ஒரு ரவுண்ட் பாப்பமா"ன்னு நண்பர்கள் கேட்டிருக்காங்க..ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் கூட 1984 வரை லிப்ட் கிடையாது.இப்போ இதையெல்லாம் கணக்கே பாக்க முடியாது. லிப்ட் இல்லாத பெரிய கட்டடமே இல்லைங்கிற அளவுக்கு  போயாச்சு.
சரீ.....என்னடா லிப்ட் புராணம் பாட வந்துருக்கானேன்னு நினைச்சுட வேணாம். எல்லாம் அதுல?  படிச்ச பாடத்தத் தான் சொல்ல வந்தேன்.

லிப்டுக்குள்ள என்னைக்கு வகுப்பு யார் நடத்துனாங்க? போகும்போதும் வரும்போதும் இல்லையில்லை மேலே ஏறும்போதும் இறங்கும்போதும் பட்டது தான் எனக்குப் பாடம்.
அப்பவெல்லாம் மெட்ராஸ் என்கிற பேரால் சென்னை இருந்த போது எங்க மாமா எல்.கே.எம்.அவர்களோடு அந்த லிப்டுல போய் வந்திருக்கேன்.அப்புறம் சம்சுல் ஆலம் சட்டமன்ற உறுப்பினர் ஆன காலத்திலே உறுப்பினர் விடுதி லிப்ட்டில் ரொம்ப தைரியமா ஏறி இறங்கி இருக்கிறேன்.என்னா லேசாயிடுச்சுன்னு குஷிவந்து போகும்.

"பாத்துப்போப்பா; கரண்ட் இல்லன்னா உள்ள மாட்டிக்குவே.என்ன கூப்பாடு போட்டாலும் எவனும் வரமாட்டானுவோ”ன்னு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோதர் மைதீன் அவர்கள் மிரட்டல் குண்டு போட்ட நாள் முதலா,”நாம போய் வார வரை கரண்ட் போயிடக் கூடாது”ன்னு ரொம்ப வேண்டிக்கிட்டு தான் அதிலே ஏறுவேன்.இறங்குவேன். போய்ச் சேர வேண்டிய மாடிக்குப் போய்  லிப்ட் நிக்கிற வரை மனசெல்லாம் ஒரே பீதி மயம் தான்.காரணம் அங்கே இருந்த லிப்டுகளின் “முழிப்பு” அப்படி.

ஒரு முறை முஸ்லிம்லீக் தலைவர் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்களோடு கேரளா,மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உடன் சென்றிருந்தேன். கேரளா மாநிலத்தின் அலுவல்களுக்குப்பின்னர் கர்நாடக மாநிலத்தில் மங்களூர் நகரில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வசதியாக அந்த ஊரில் “ஹோட்டல் விக்னேஷ்” என்கிற லாட்ஜில் தங்கி இருந்தோம்.

மாலை நேரத்து நிகழ்ச்சி.அதில் பங்கேற்க மறைந்த தலைவர் பனாத்வாலா,இப்போதைய மத்திய அமைச்சர் மற்றும் அகில இந்தியத் தலைவர் இ.அகமது சாஹிப்,உள்ளிட்ட தலைவர்கள் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்களின் வருகையை எதிர் பார்த்து தரைத்தளத்தில் காத்திருந்தார்கள். தலைவர் அவர்களோடு நான் ஐந்தாவது மாடியில் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வந்து லிப்ட் வருகையை  நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.
ஏழாவது மாடியில் நின்று கீழிறங்கிய லிப்ட்டின்  வாசல் திறந்த போது அதனுள் நெருக்கமாக ஒரு ஏழு எட்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
தலைவரிடம் “என்ன செய்ய”? என்று கேட்ட போது “போங்க தம்பி” என்று சொல்லி என்னை உள்ளே போக விட்டு, அந்த நெருக்கடியில் அவர்களும் நுழைந்து கொண்டார்கள். தரைத்தளத்திற்கு பட்டனை தட்டியதும் முன்னே பின்னே கேட்டறியாத சப்தத்துடன் வழக்கத்தை விட வேகமாக கீழ்நோக்கி லிப்ட் துரித கதியில் இறங்கியது.. முடிவில் தொம் என்ற சப்தத்துடன் லிப்ட் இறங்கிய வேகத்தில் தரையில் எதோ ஒன்றில் அது மோதி ஸ்பிரிங்குகள் நொறுங்குவது போல உணரமுடிந்தது.

சரி.....வெளியே போகலாம்: கதவுகள் திறக்கும் என்று காத்திருந்தால் அது அசஞ்சுக்கொடுக்க வில்லை. ஒவ்வொருவரா உள்ளே இருந்த அத்தனை பேர்களும் ஒவ்வொரு பாஷையில் கத்த ஆரம்பித்தார்கள். நான் பொதுவாக “ஓப்பன் தி டோர் “ என்று லிப்ட் கதவுகளை பலத்த சப்தத்துடன் தட்டிக்கொண்டே அபயக்குரல் எழுப்பினேன்.
நேரம் போய்க்கொண்டு இருந்தது.அத்தோடு தலைவரைப் பற்றிய கவலையும் வந்துவிட்டது.அவர்கள் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளவில்லை.கையில் இருந்த சிறிய நோட்டுப்புத்தகத்தால்  அவர்களின் முகத்தில் விசிறிக்கொண்டிருந்தேன்.கொஞ்சம்கூட காற்று இல்லை.
எல்லோருக்கும் வியர்க்க ஆரம்பித்தது.எனக்கு மூச்சுத்திணறல் வந்தது போல் உணரமுடிந்தது.வெளியே அகமது சாகிப் அவர்கள் “Samath Saap Don’t worry.Just wait,we are trying to broke the door.”என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“எப்போ உடைச்சி எப்போ வெளியே வர.”?என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே லிப்டுக்குள் பலர் மயக்கம் போடத்துவங்கி இருந்தார்கள். அடுத்து நாம் தான்.மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேத்தினேன்.மூச்சு முட்டியது. அய்யோ.........இப்படி மாட்டிக்கிட்டோமேன்னு கண்ணீர்விடும் அளவுக்கு வந்து விட்டேன்.

நேத்து  கள்ளிக்கோட்டையில். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ரயிலில் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி இறந்த வீரர்களின்,  வரலாறு கூறும்  மண்ணறைகளை திரூர் பள்ளிவாசலில் பார்த்து வந்ததெல்லாம் கண் முன் வந்து போனது.நான் ஆடிப்போய் விட்டேன்.
சட்டை பேன்ட் எல்லாம் வியர்வையில் நனைந்து விட்டது.இதில் ரொம்ப வேதனை என்னவென்றால் உள்ளே நுழையும் போதே ஒரு புன்னியவாளன்  கையில் சிகரேட்டோடு உள்ளே நுழைந்தது தான். கூட்ட நெடியில் சிகரெட் புகை வேறு.

ஒரு பத்து நிமிஷத்துக்கு பிறகு லிப்ட் கதவு உடைத்து திறக்கப்பட்டது. தரைத்தளத்தின் வாசல் உயரத்தை விட லிப்ட் ஒரு மூன்று அடி கீழே இறங்கி இருந்தது.ஒவ்வொருவரும் தாவி வெளியே வந்தார்கள். ஆனால் இதய நோயாளியான தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்கள் சலனமே இல்லாமல் வெளியே.வந்தார்.பதட்டமோ பயமோ அவர்முகத்தில் இல்லை.
“எனக்குத் தெரியும்.நாம் வெளியே வர எப்படியும் ஒரு பத்து நிமிஷமாவது ஆகும் என்பதை  மனதளவில் ஏற்றுக்கொண்டதனால்.நான் பயப்படவில்லை.ஆனால் நீங்கள் தான் ரொம்ப பயந்துவிட்டீர்கள்” என்றார்.
எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நீங்க ரொம்ப நாட்களாச்சு.

எனது நண்பர் பொறியாளர் ஜூடு அந்தோணி இருதயராஜ் பாளையங்கோட்டையில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றை கட்டி முடித்த நேரம். முக்கிய நண்பர்கள் அனைவரும்  பொறியாளர்களின் உதவியாளர்களாக பணி செய்தோம்.எல்லா பணிகளும்  முடிந்து லிப்ட் பொருத்தும் வேலையும் முடிந்தது.
“இந்த லிப்ட் எப்படிண்ணே மாட்டியிருக்கானுவோ? போய்ப் பார்த்தீங்களா?” என்று அங்கே மேலாளராக இருந்த நண்பன் சரவணன் கேட்டான்.
“பாப்பம்மா?” நான் கேட்டேன்.
“இந்த லிப்ட் ஆப்பரேட்டர் உள்ளே இருக்கும் போதே திடீர் திடீர்ன்னு லிப்ட் நிக்குதே.  அதை  அவம்தான் நிப்பாட்டுரானா? இல்லை அதுவா நிக்குதா?” இப்படி சரவணன் கேட்டதும் நான் உஷாராகத்தான் இருந்தேன்.
ஒரு ரண்டு மூணு நாள் கழிச்சு மேலே ஐந்தாவது தளத்தில் நின்ற நண்பர் ஜூடு அந்தோணியை பார்க்க அதே லிப்ட்டில் மேலே சென்ற போது மாட்டிக்கொண்டேன்.என்னவோ கையில் செல் போன் இருந்த புண்ணியத்தில் நான் போட்ட சப்தத்தில் லிப்ட் மெக்கானிக்கும் வந்து சேர வியர்த்து விதிர் விதித்து கீழே இறங்கினேன்.இது எனக்கு கிடைச்ச ரண்டாவது அனுபவம்.
கடந்த அக்டோபர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது.வழக்கம் போல் பெருநாளைக்கு முந்திய நாள் எனக்கு சட்டை, வேஷ்ட்டி,துண்டு எடுக்கப் போனேன்.என்னுடன் என் மனைவியும் என் மகள் ரபீகாவும்  வந்திருந்தார்கள்.
ஜவுளிகள் எடுத்து முடித்து இரவு சாப்பிட திருநெல்வேலி சந்திப்பு ஜானகிராம் சைவ ஹோட்டல் ஆறாவது மாடியில் உள்ள ரூப் கார்டன் அரங்கத்துக்கு போனோம். வழக்கம் போல மேலே போக லிப்ட் தான். அதற்குள்ளே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் ஆப்பரேட்டராக இருந்தான்.எங்களோடு இன்னொரு குடும்பமும் மேலே ஏறி மூன்றாவது மாடியில் இறங்கிய பிறகு நாங்கள் இன்னும் மேலே மூன்று மாடிகள் போக சுவிட்ச்சை அழுத்தவும் லிப்ட் தூக்குவது தெரிந்தது. திடீரென மின்தடை.  லிப்ட் அந்தரத்தில் எதோ இருமாடிகளுக்கிடையில் நின்று விட்டதை  மட்டும் ஊகிக்க முடிந்தது.
உள்ளே கும்மிருட்டு.”பொறுங்க சார் ஜெனரேட்டரை இப்போ போட்டுருவாங்க”ஜெனரேட்டரை போட்ட பின்னர் லிப்டுக்குள் விளக்கு எரியத் துவங்கியது.ஆறாவது மாடி போக மீண்டும் சுவிச்சை அந்த ஆப்பரேட்டர் அழுத்தினான்.லிப்ட் மேலும் போகாமல் கீழும் இறங்காமல் அப்படியே நின்று அன்னா அசார் கதைக்கு வந்தது.. அந்த சுவிட்ச் போர்டில் எத்தனை  நம்பர்கள் உள்ளதோ அத்தனை பொத்தான்களையும் அந்த ஆள் அழுத்திய பிறகும் லிப்ட் அசஞ் சுக் கொடுக்காமல் அடம் பிடித்ததை கண்ட பிறகு தான்,ஆகா ....... இன்னைக்கு மாட்டிக்கிட்டோம் என்று உணரமுடிந்தது.
உள்ளே இருந்த போனில் அந்த லிப்ட் ஆப்பரேட்டர் யாரையோ அழைத்தான்.பத்து நிமிஷம் வரை ஆகியும் ஒன்னும் கதை நடக்கவில்லை.அவன் கையில் இருந்த போனை வாங்கி நானும் வெளியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். “பொறுங்க சார்” என்றார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் மகள் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். நான் எனக்குள்ள கவலையை முகத்தில் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. என் மனைவியும் தன்னால் மூச்சு விட சிரமாய் உள்ளதாகச் சொல்லியதும் எனக்கும் அதே கோளாறு உள்ளதை உணர முடிந்தது.லிப்டுக்குள் பேன் ஓடிக்கொண்டிருந்தது.ஆனால் காற்று தான் கொஞ்சம் கூட வரவே இல்லை.உச்சகட்டமாக லிப்ட் ஆப்பரேட்டர் பையனும் “முழிக்க” ஆரம்பித்தான்.

இனி இவர்களை நம்பிப் பயன் இல்லை.தீ அணைக்கும் இலாக்காவை அழைத்து  விட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அதுக்குள் என்னவோ,ஏதோ  செய்து லிப்ட்டை  திறந்து விட்டார்கள்.வெளியே பார்த்தால் ஒரு சிறிய ஏணி இருந்தால் தான் இறங்கமுடியும் என்கிற உயரத்தில் லிப்ட் இரு மாடிகளுக்கிடையில் இருந்தது..
வெளியே பெரிய ஸ்டூல் ஒன்று போட்டார்கள் முதலாவதாக என் மகளை லிப்டின் தரையில் உட்கார்ந்து அதில் இறக்கிவிட்டேன். அப்போது தான் அவள் அழுகை நின்றது.இரண்டாவதாக என் மனைவியும் மூன்றாவதாக நானும் இறங்க கடைசியில் லிப்ட் ஆப்பரேட்டர் இறங்கினான். மூணு நாலு பேர் வந்து லிப்டை ஆராய்ச்சி செய்தார்கள்.
"அப்பாடி ....போதும் .....இனி லிப்ட்டில் ஏறவே மாட்டோம்” என்று அப்போதைக்கு, என் மனைவியும் மகளும் உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
சாப்பாடு எனக்கு இறங்கவே இல்லை.ஒரு மணி நேரம் போனது.கீழே “காருக்குப் போகணும். போலாமா”? நான் கேட்டதும் இந்த லிப்டுல தான் போகனுமா?என்றார்கள்.
“லிட்டில் மேல ஏறுவது தான் கஷ்டம்.தாராளமா கீழே இறங்கலாம்”னு கூட்டிவந்துட்டேன்.

ஆனாலும் “லிப்ட்பயந்திகள்”  எங்க வீட்டில் மேலும் இரண்டு பேர்கள் கூடிவிட்டார்கள்.