திங்கள், 9 டிசம்பர், 2013

புத்துலகம்.....: ஒரு செல்போன் அழைப்பும், ஆறு ஊசிகளும்.

புத்துலகம்.....: ஒரு செல்போன் அழைப்பும், ஆறு ஊசிகளும்.: “அப்பாட .......ஒரு மட்டும் இந்த ஊசி போட்டு முடிச்சாச்சு.....இனி கவலை இல்லை.....வெளி ஊர்களுக்கு தாராளமா போயிட்டுவரலாம்”.....எனக்கு நானே சொ...

புதன், 4 டிசம்பர், 2013

ஒரு செல்போன் அழைப்பும், நாய் கடி ஊசியும்..


“அப்பாட .......ஒரு மட்டும் இந்த ஊசிய  போட்டு முடிச்சாச்சு.....இனி கவலை இல்லை.....வெளி ஊர்களுக்கு தாராளமா போயிட்டுவரலாம் ”.....என்று  எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்..

எனக்கு சின்னஞ்சிறிய வயசில் இருந்தே ஊசின்னா,ஒரு பயம் தான்.”அது இப்போ வரை இருக்கிறதா”? அப்படீன்னு யாரும் கேட்டுறப்படாது. அப்படி யாரும் கேட்டா? “ஆமா இப்பவும் அந்த பயம் இருக்கு” ன்னே சொல்லலாம்.

அதிலும் அந்த நரம்புல போடுத ஊசி இருக்கே....,அத பார்த்தாலே, தானா நடுக்கம் வரத்தான் செய்யுது....

ஊசியை குழந்தைங்க பிட்டியில டாக்ட்டரோ,நர்சம்மாவோ சொருகும் போது அந்த வலியத் தாங்காம,அதுக சத்தம் கொஞ்சநேரம், நின்னுதான்,அழுகை வெளிய வருது....மாசக்கணக்கும்,வருஷக்கணக்கும் வச்சி,  பிள்ளைகளுக்கு ஊசியைக் குத்தி தொலைக்கிறாங்க.....அதுக படுற கஷ்ட்டத்தப் பார்த்துட்டு இனி எதுக்கு இந்த கொடூர ஊசி போடணுமா?.....போதும் அப்படீன்னு நினைக்கத் தோனும.. கூடவே, ,இளம் பிள்ளைவாத ஊசி, அம்மை நோய் தடுப்பு ஊசி,வலிப்பு தடுப்பு ,நோய் எதிர்ப்பு  மாதிரி உள்ளத போடாம இருக்க முடியாதே என்று மனசில் பதிலும் வரும். அந்த வலியும் வேதனையும் நன்மைக்கு தானேன்னு பிற்பாடு நினைக்க வேண்டியது உள்ளது..

  இந்த ஊசிக்கு பதிலா வேற எதுனாச்சும் கண்டு பிடிக்க மாட்டுக்காங்களே.....இது டாக்டர் ஊசியத்தூக்கும் போதெல்லாம் மனசுக்குள்ளே.....வரத்தான் செய்யுது. வருங்காலத்தில் கண்டிப்பா வரத்தான் போவுது..

என்ன?.....இப்படி ஊசிக் கதையா இருக்கே?....அப்படீன்னு கவலைகள் வேண்டாம்..நான் சொல்லுறேனே, அதுக்கு காரணம் இருக்கு.

இந்த செல்போன் படுத்துற பாடு, என்ன மாதிரி ஆட்களால தாங்கவே  முடியல்ல..ஏந்தான் இது கிட்ட பழகி,நம்பரைவச்சிகிட்டோமோ?,அப்படீன்னு பலமுறை கவலைப் பட்டுள்ளேன்..

எனக்குத்தெரிந்த தொழில் அதிபர்கள் பலர், இன்று வரை செல் போன் இருக்கிற கதையை, மற்றவங்களுக்கு சொல்லுவதேயில்லை...யாருக்கும் அந்த நம்பர் தெரியவும் செய்யாது.
 “ இந்த செல் போன் என்பதே, நம்ம அவசரத்துக்கு,தேவைக்கு  நம்ம ஆபீசுக்கோ, வீட்டுக்கோ பேசத்தான் வச்சிருக்கோம்......மற்றவர்கள் நம்மிடம் பேசனும்ன்னா,வீட்டுக்கோ,அலுவலகத்துக்கோ உள்ள போனில் வரட்டும்.  நமது நம்பர் மிக முக்கியமானவர்களுக்கு மட்டும்     தெரிந்தால் போதும்....எல்லா சூழ் நிலைகளிலும் , நாம் போகுமிடமெல்லாம் மற்றவர்கள் ஏதாவது கேட்டோ,பேசியோ அதன் மூலம் தொல்லைகள் தர  வேண்டாம்” என்று ஒருமுறை செய்யது பீடி முதலாளி பத்ஹூர் ரப்பானி அவர்கள் சொன்னார்கள்,  ... அந்த முறைதான் சரி.

இப்போ நம்ம செல் நம்பரை வைத்து வருகிற குறுஞ் செய்திகள் தரும் பாடுகள் தாங்க முடியவில்லை. பெண்டு,  பிள்ளைகள் கைகளில் செல்லைக் கொடுத்து தொல்லைகள் கண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதுக்காக பெரிய்ய பட்டி மன்றமே நடத்தனும்.அப்ப தான் சரியா வரும். செல்லால ஆம்பிளை பையங்க  கெட்டுப் போறாங்களா?......இல்லை பொம்பிள்ளைகளா?

அத பேச மட்டுமா வச்சிருக்காங்க?......இப்ப உள்ள போணில்  ஒரு கம்யூட்டரில் உள்ள, வசதிகள் எல்லாம் வந்துருச்சே...சின்ன வயசுக் காரங்க  அத பயன்படுத்துற விதத்தை சொன்னால் தாங்காது.....அவ்வளவு அனாச்சாரம்,.....அசிங்கம்.....புள்ளைகளைப் பெத்தெடுத்தவங்க ரொம்ப கவலையா கண்காணிக்க வேண்டியது உள்ளது,

கைல வச்சிருக்கிற போன் வெலைய வச்சு, இதுல கவுரவம் வேற.

ஐயோ....இந்த வாட்ஸ் ஆப் வந்தாலும் வந்தது......பல மேதாவிகள் தினசரி காப்பி பேஸ்ட் செய்து.... படங்களும் வீடியோவும் அனுப்பி காசையெல்லாம் செல்போன் கம்பெனிக்கு புடிங்கிக்  கொடுத்திடனும்ன்னு வைராக்கிய வெரி பிடிச்சு அலைகிறார்கள்...

தினசரி என்னை ஒவ்வொரு குரூப்பில் சேர்த்து அவர்கள் படுத்துகிற பாடு கொடுமையோ கொடுமை....சில முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ளத்தானே இந்த வசதி....அதையேன் இப்படியாக்கிட்டாங்க....?

போனை வச்சி மத்தவங்களுக்கு என்ன வந்துச்சோ? அது பத்தி நிறைய கேள்விப் படுகிறேன்..ஆனா எனக்கு மாசா மாசம் ஆயிரக் கணக்கில் செல் போன் கம்பெனி பில் அனுப்பி, கட்டிக் கிட்டு இருந்தேன்....இப்போ டாக்ட்டர் கிட்ட பில் கட்டுகிற வரை கொண்டு விட்டு விட்டது....

வழக்கமா தினமும் காலை நேரங்களில்,போன் பேசவே,   ஒரு மணி நேரம் போய் விடுகிறது....முக்கியமான கூட்டங்களில் இருக்கும் போதோ,கார் மோட்டார் சைக்கிளில் நானே ஓட்டும் போதோ,செல் போனை நான் கண்டு கொள்வதே இல்லை....மிக முக்கியமானவர்கள் அழைத்தால் நின்று பேசி,தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்த பின்னர் தான் மத்த வேலைகள் எல்லாம்..

திருனவேலி போலிஸ் படுத்துற பாட்டில், தலைக்கு போட்டுள்ள ஹெல் மெட்டுக்குள், மோட்டார் சைக்கிள் சத்தம், மற்றும் போக்குவரத்து இரைச்சலைத்தாண்டி  கேக்கிற அளவு, அழைப்புச் சத்தம் அதான் ரிங் டோன் உள்ள செல் போனை, இன்னும் யாரும் கண்டு பிடிக்காததுக்கு, என்னை மாதிரி ஆட்கள், நன்றி தான் சொல்லணும்.

அம்புட்டுத் தொல்லை..... ." நான் ட்ராபிக்குல நிக்கேன்......பைக் ஓட்டுறேன்,கார் ஒட்டுறேன் " னு சொன்னாலும் சில பேர்கள்  வலுக்கட்டாயமா விடுறதே இல்லை......அவங்க என்ன காரணத்துக்காக அழைக்கிறாங்களோ அதச்சொல்லி முடிச்சுதான் ஆள விடுறாங்க...

இப்பிடித்தான் ஒரு நாள் காலை தோட்டத்தில் இருக்கும் போது ஒரு புண்ணியவாளன் வெளி நாட்டில் இருந்து என்னை அழைச்சான்....அவன் நம்பரும் அதில் வரல்லை......
,நாம் எங்கே, எந்த சூழ்நிலையில் , என்ன  வேலையில் இருக்கிறோம் என்பதை செல்போனில் கூப்பிடுகிற நண்பர்கள்  அறிய மாட்டார்கள்.  

அலுவலகத்தில்,அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கு போன் அழைப்பு வந்தால், உட்கார்ந்தோ,அல்லது வீட்டுக்குள் நடந்து அல்லது இருந்து கொண்டு பேசலாம். செல்போன் கதை ரொம்ப வித்த்யாசமானது.

லேண்ட் லைன் போனில் மட மடன்னு பேசி முடிக்கிற நண்பர்கள் சிலர் கம்ப்யூட்டர் புண்ணியத்தில் விடாப்பிடியாக பேசுறாங்க,.....பேசுறாங்க.பேசிக்கிட்டே இருக்காங்க. ........... .......தாங்க முடியவில்லை....

அன்னைக்கு அதமாதிரி ஒரு பேச்சு......அந்த நண்பருடன் பேசிக்கொண்டே, நடந்து போன நான் ஏதோ ஒரு கவனத்தில்  மரத்தடியில் ஒரு ஓரமா நிப்போமுன்னு கண்ணை முன்னால வச்சிக்கிட்டு, காலை பின்னால் எடுத்து வச்சேன்....அப்புறம் தான் தெரிந்தது, நான் கீழ பாக்காம கால வச்சது.... அங்க படுத்துக் கிடந்த நாய் வயித்திலன்னு.

எண்பத்தைந்து   கிலோ எடையை ,  தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த  நாய் , எப்படி திடீர்ன்னு தாங்க  முடியும்? கண்ண முழிச்சு பார்க்கிறதுக்கு முந்தியே வள்ளுன்னு ....சப்தத்தோடு உர்ர்ன்னு ஒரு உறுமல் உறுமி  “ “லபக்குன்னு” வாயைத்திறந்து ...அப்போதைக்கு கிடைச்ச என்  காலில் கோபத்துல ஒரு கடி கடித்தது....

பெறகு நான்  நான் குதிச்ச குதியில்..... மேற்கொண்டு என்னை அது கடிக்காம ஓடியே போய் விட்டது.......அது வரைக்கும் சந்தோசம் தான்..அப்புறம்என்ன?.....ரத்தம்வந்தது.....வலியும் வந்தது......கூடஇருந்தவர்கள் பதறிப் போய் விட்டார்கள்.....தோட்டத்தில் இருந்து புறப்பட்டு, மேலப்பாளையம் டாக்டர் பிரேமச் சந்திரன் அவர்களிடம் வந்தேன்...

அங்கே இருக்கும் போதே, என் தாயாரிடமும், மனைவியிடமும், நாய்க்  கடிக் கதையை போனில் சொன்னேன்...அவங்க இருவரும், சொல்லி வச்ச மாதிரி ” அய்யய்யோ தொப்பிளை சுத்தி நிறைய ஊசி போடணுமே?.......கறி, மீனெல்லாம் சாப்பிடக்கூடாதே......பக்கத்துல வெத்திலை  வாங்கி,மிளகு வச்சி உடனே வாயில போடணும் " ங்கற, அளவு அவ்வப்போது உத்தரவுகள்  கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.....

 அமீரகத்தில் இருந்து,நாய்க்கடி பற்றிய முதல் விசாரிப்பு, என்தம்பியிடமிருந்து தொடங்கியது....

கொஞ்ச நேரத்தில் எங்க வீட்டம்மாவும் வந்தாச்சு.
" இப்பிடியா நாயோடு விளையாடுவது" ன்னு?......கேள்வியே கேக்காமல் கடுமையான விசாரிப்பு......நான் பதில் சொல்லி முடித்தேன்..போனில் கூப்பிட்ட ஆளை மட்டும் கடைசி வரை,சொல்லவே இல்லை....ஆனாலும் தொப்பிள் ஊசி பயம் மட்டும்  வந்து வந்து போனது......

கையில பிட்டியில,நரம்புல ஊசி போட்டிருக்கோம் . வயித்தில ஊசி போட்டு பழக்கமில்லையே.....அங்க  போட்டா எங்கன, எப்படி வலிக்குமோ? அப்படீங்கற ஆராய்ச்சி மனசுக்குள் பண்ணிக்கிட்டே இருந்தேன்..

நான் வந்திருப்பது தெரிந்து, டாக்டர்  வந்தார்..விபரம் கேட்டார்...
"என்ன.....உங்களை.....நாயி....கடிச்சுட்டுதா?"...
" ஆமா...சார்சார்,  அது தூங்காம இருந்தா என்னை கடிச்சிருக்காது..."
" நீங்க மிதிக்காம இருந்தா அது உங்களைக் கடிச்சிருக்காது..." 
"சார் ஊசி போடாம மருந்து மாத்திரை நாய்க்கடிக்கு இல்லியா" நான் கேட்டேன்.
"ம்ஹும்......கண்டிப்பா ஊசி போட்டே ஆகணும்....
ஆறு ஊசி போதும்..அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் " என்றார்.
அப்புறம்... காயத்தை ஆய்வு செய்து,மருந்து போட்டு கட்டினார்.

வழக்கமா அவர் பேசினாலே பாட்டு படிக்கிற மாதிரிதான் எனக்கு கேக்கும். அன்னைக்கு மட்டும் அப்படி கேக்கலை. காரணம்.... எனக்கு ஏற்பட்ட பீதி தான் .....
பக்கத்தில் நின்று கொண்டிருந்த நர்சம்மாக்களிடம் ஏதேதோ பேர் சொல்லி மருந்துகளைக் கொண்டு வரச்சொல்லி, கொஞ்சம் பெரிய சைஸ் ஊசியில் ஏற்றினார்...
எனக்கு நாய் கடிச்ச போது வாராத பயம் அப்பம் தான் வந்தது...
“சார்.....ஊசி எங்க போடுவீங்க?” சட்டையை ,பனியனோடு சேர்த்து கழற்றினேன்..
டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்...

“பனியனைத் தூக்காதீங்க......உங்க கையில் தான் ...பனியனை மாட்டுங்க.”


செவ்வாய், 12 நவம்பர், 2013

ஏற்றி வைத்த ஏணிகள்.....


மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர்களை பற்றி, மருமகன் அப்துல் ஜப்பார் அவர்கள்,  அண்மைக் காலமாக, அரிய தகவல்களை படங்களோடு முகநூலில் தொடர்ந்து வெளியிடும் பணியினை செய்து  வருகிறார்....
அவற்றை பல்லாயிரம் இளைய தலைமுறையினர் பார்த்து,படித்து  தங்களது கருத்துக்களையும் பதிவாகத் தருகிறார்கள்...அதற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடன் நண்பர்கள் ஷா இன்ஷா,மற்றும் முகம்மது அலி, முதலானோர் உறுதுணை நல்கி வருவது பாராட்டுக் குரியது.
அவர்கள் செய்து வருகிற இந்தப் பணிக்காக, பல்வேறு நாட்கள் எனது ஆசிரியப் பெருமக்கள் பலரைப் பற்றியும், என்னிடம் கலந்துரையாடி இருக்கிறார்கள்.......
மேற்கொண்டு அவர்கள் , பணி நிறைவு பெற்ற ஆசிரியத் தந்தைகளிடம், நேர்காணலும் நடத்தி வந்துள்ளார்கள்.....அதற்காக PM அப்துல் ஜப்பார் மற்றும் நண்பர்களை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் சில வகுப்புக்களாவது படித்திருந்தால் மட்டுமே....அந்த குருகுலத்தை-பள்ளிக் கூடத்தை,அதன் ஆசிரியப் பெருமக்களைப்  பற்றித்  தெரிந்து கொள்ள முடியும். 
மேலப்பாளையத்தில் உள்ளவர்கள் இதைத்  தவற விட்டிருந்தால்,மிகப் பெரிய அனுபவத்தை அவர்கள் இழந்து விட்டதாகத்தான் கருத வேண்டும்.....
“.....நாங்க படிச்ச பள்ளிக் கூடம் என்னத்துல குறைச்சல்?... .......எங்க மாதிரி  மாணவர்களுக்கு,  மகிழ்வும், கண்டிப்பும் அனுபவமும், இல்லாமலா போகும்?...... உங்க பள்ளிக் கூடத்தமட்டும் நீங்க உசத்தி சொல்லலாமா?” என்று கூட நண்பர்கள் கேக்கலாம். ஆமா....அப்படிக்கூட சொல்லலாம்.
இன்னைக்கு பணக்கார ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கிற மாணவ மாணவியரிடம் “ உங்க டீச்சரைப் பற்றி சொல்லுங்களேன் ” என்றால் சொல்லத்தெரியவில்லை......எந்த டீச்சரைப் பற்றிச் சொல்ல?.....மறந்து விடுகிறார்கள்....
குறிப்பாக ஆங்கிலப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நிரந்தரமாக அல்லது தொடர்ச்சியாக, ஒரே பள்ளியில் வேலை செய்யாதது கூட  இப்படிச் சொல்ல முடியாததுக்கு காரணமாக இருக்கலாம். என்னால் என் முதல் வகுப்பு ஆசிரியரைக் கூட சொல்லிக் காட்ட முடியும்...
....மேலப்பாளையம் முஸ்லிம் ஹைஸ்கூல் வாத்தியார்கள்  வாப்பாமார்களுக்கும்,பின்னாட்களில் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும், பலநேரம் வகுப்புக்கள் எடுத்ததனால்......பழைய மாணவர்களாக இருந்த வாப்பாமார்களிடம் பிள்ளைகளின், படிப்பு லட்சனத்தை சொல்லிவிடுவார்கள்.....இதனால் பாதிபேருக்கு “தானா”  பயம் வந்துடும்....
 “நம்ம யோக்கிய தாம்சம்” வீடு வரை போய் விடும் எதுக்கு வம்பு? என்பதனாலே பிள்ளைகள்  விழுந்து விழுந்து படிப்பார்கள்....பரிட்சைல மார்க் எடுக்காததை, வாப்பா மார்களிடம் வாத்தியார்கள் சொன்னால் வேற வெனையே வாண்டாம். “பையன் படிக்கலைன்னா ......பிச்சிருங்க பிச்சி..” அப்படீன்னு அடி பின்னியெடுக்க உத்திரவாதங்கள் வேறு கிடைத்துவிடும்....பிறகென்ன “கேக்கவா’ வேணும்?
படிக்கிற காலத்துல அடி உதை கொடுத்த ஆசிரியப் பெருமக்களை இன்னைக்கு பார்த்தாலும்.....பாசம்,மரியாதை  மட்டும் தான் வரும்......
அது என்னவோ ஆச்சிரியமாத்  தான் இருக்கு.....என்னைக்கோ எவனோ அடிச்சதை நினைவில் வைத்து, அதற்கு பழி வாங்க, கால நேரம், காத்திருக்கும் மனித மூளை.....ஆசிரியர்கள் விஷயத்தில் மட்டும் நேர்மாறாக  நினைக்கிறது.....
சொல்லப் போனால் அந்த ஆசிரியர் தந்த பழைய அடிகளுக்கு, மரியாதையான பார்வையும், வாழ்த்துக்களும், சலாமும்தான் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் திரும்பக் கொடுக்கிறார்கள்...      அது அந்த தொழிலுக்கு உண்டான, அற்பணிப்புக்கு காலம் தருகிற பரிசாக இருக்கலாம்.
எங்களுக்கு ஆறாவது வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பல்வேறு  பாடங்கள் நடத்திய மைதீன் லெப்பை சார், எங்களின் எட்டாம் வகுப்பு, கடைசி நாளில் எங்களை வாழ்த்தி விடைபெறும் போது, பிரிவுத்துயர் தாங்காமல் அழுது ......வாழ்த்திக் கொண்டே வழி அனுப்பி வைத்தார்....
அதுபோலவே, கடும் கெடுபிடிகள் கொண்ட, கண்டிப்புகளுக்கு பேர் போன,  மாசில்லா மணி சார்வாளும் பள்ளி கடைசி நாளில் எங்களிடம் விடை பெறும் போது, பேச முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு, நாத்தழுதழுக்க ஆசி கூறி அழுது வழியனுப்பி வைத்தார்... இன்னைக்கும் மனதில் அந்தக் காட்சிகள் தான் நிழலாடுகிறது.அவர்கள் தந்த “அடிகள்”  பின்னால் மறைந்து போய்விடுகிறது....
கல்வி ஆண்டின் துவக்கத்தில் பல்வேறு பெற்றோர்கள் தம் பிள்ளைகளைச் பள்ளிக் கூடங்கள்,கல்லூரிகள்,தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர்க்க என்னை அணுகுவது உண்டு...
என்னால் செய்ய முடிந்ததைச் செய்வேன்.
ஆனால் என்னை எவ்வளவோ சொல்லியும் என் பிள்ளைகளுக்காக சென்றுவந்ததில்லை...
என் பிள்ளைகளுக்கு என் தம்பியோ,  மைத்துனர்களோ,அல்லது சகோதரிகளோதான் பள்ளிக் கூடங்களில் காத்திருந்து இடம் வாங்கித் தந்துள்ளார்கள்...நான் அப்ளிகேசனில் கையெழுத்து போடுவதோடு சரி..
பணக்காரப் பிள்ளைகள் படிக்கிற கான்வெண்டுகளுக்குப் போய், என்னை அறிமுகப் படித்தி என் பிள்ளைகளுக்கு சீட் பெறுவதை அவமானமாகவே என் மனது தடுத்து வந்துள்ளது....
ஒரு வேளை என் பிள்ளைகளுக்கு நான் சென்று கேட்டும், வந்த அந்த பிரபல ஆங்கிலப் பள்ளிக் கூடங்களில்,  இடம் தராமல், அனுமதிக்காமல் இருந்திருந்தால்  என்னால் அந்தத் தோல்வியை காலம் முழுதும் தாங்க முடியாது...
இந்த ஒரு அநியாயத்துக்காகவே நான் என் பிள்ளைகளை அழைத்து கொண்டு  பள்ளிக் கூடங்களில் காத்திருக்கவில்லை.  ஆனால் ஊரில் உள்ள பிள்ளைகளை, அழைத்துச் சென்று, சண்டை போட்டாவது இடம் வாங்கிக் கொடுத்துள்ளேன்...எனக்காகக் கேட்பது சுயநலம் என்றே மனசு அணை போடுகிறது..
எங்க வாப்பாவும் என்னை பள்ளிக் கூடங்களில் சேர்க்க நேரில் வந்தது இல்லை....என் தாயின் தந்தையார்,மாமுவாப்பா வந்து என்னை சேர்த்துள்ளார்கள்....
என் பிள்ளைகளை உயர் வகுப்புகளில் சேர்க்க...11,12 மற்றும் கல்லூரிகளில் சேர்க்க நான் என் மனைவியுடன் சென்று சேர்த்து வந்துள்ளேன்.
மருமகன் ஜப்பார் வெளியீடு செய்யகிற முகநூல் பதிவுகள் பல ,நான் ஆறாம் வகுப்பும்,அதற்கு மேலும் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த நாட்களை என் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.   அப்போ என் வாத்தியார்கள் எப்படி காட்சி தந்தார்களோ,அந்தத் தோற்றத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
மாணவர்கள்,எல்லோரும் கைலி கட்டிக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போக முடியுமா என்றால் எங்க ஊரில் முடிந்தது...அன்றைய கால கட்டத்தில் நான் படித்த முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில்  “யூனிபார்ம் டிரஸ்” முறையெல்லாம் இல்லை. அதுபோலவே தென்காசி,கடைய நல்லூர்,புளியங்குடி,கீழக்கரை,காயல் பட்டணம் மாணவர்களுக்கும் இல்லை.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் , 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான்  யூனிபார்ம் ட்ரஸ்  முறை அறிமுகப்படுத்தப் பட்டது.....
இன்னைக்கு உள்ள பிள்ளைகளிடம் நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு கைலி கட்டிக் கொண்டுதான் போனோம் என்றால் நம்பத்தயாராக இல்லை. “அது எப்படி பள்ளிக் கூடத்துக்கு உள்ளே விடுவாங்க?.....யார் கிட்ட கதை விடுதிய?”  அப்படீன்னு எங்க வீட்டில் என் சின்ன மகள் கேக்கிறாள்.
 
நாங்கள் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று அல்லது நான்கு மாணவிகள் இருந்தாலே,அது அதிகமாகவே தெரியும்....ஆனால் இப்போது முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மொத்த மாணவ மாணவியரில் பாதிக்கும் மேல் மாணவிகள் தான் இருக்கிறார்கள்.அது அறுபது சதவீதத்தை தொடுகிறது......
முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில், எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களில் ‘சொல்முரசு’ கோமதி நாயகம், கிதிர் முகம்மது, ஜலீல், ஓவிய ஆசிரியர் அப்துல் ரகுமான், கந்தசாமி ஜோஸ்வா, சோம சுந்தரம், அல்லி மீத்தின் சாகுல் ஹமீது, அனந்தையர்,’களந்தைதமிழ்க் கோ’ களக்காடு சி.காசா முகைதீன, எஸ்.என்.எம்.முகம்மது காஜா,சயின்ஸ் சார் சீனிவாசகம், வீரை.பீர் முகம்மது,முகைதீன் லெப்பை, மாசிலாமணி ஆகியோர் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்-மறைந்து விட்டார்கள்...
 தலைமை ஆசிரியர் ஜமால்.அகமது அலி, மற்றும் ஆசிரியர்கள் முகுந்தன், நல்ல பெருமாள், கடைய நல்லூர் எகியா,உமையொருபாகம் விளையாட்டு ஆசிரியர்கள் அகமது மீரான் , முஹம்மது யூசுப் ஆகிய பெருமக்கள் இன்றும் நலமுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் 1952-1982 வரை பணி நியமனம் பெற்றவர்கள் யாவரும் எனது மாமா L.K.M அப்துர் ரகுமான் B.A.,B.L. (Melapalaiyam Ex.Chairman ) அவர்கள் பள்ளியின் தாளாளராக இருந்த போது, அவர்களால் நியமிக்கப் பட்டவர்கள் ஆவார்கள்.....
எங்கள் மாமா வீட்டில் சின்ன வயசுப் பிள்ளைகளாக வளர்ந்த நான், பணி நியமன ஆணை பெற வருகிறவர்களுக்கு ....1973-1982  வரை ஒரு பத்தாண்டுகள், தேநீர் விநியோக  சேவைகள் செய்துள்ளேன்.....அதனால் அந்த ஆசிரியப் பெருமக்கள் பணிக்கு சேரவந்த முதல் நாள், அவர்களைப் போல எனக்கும் நன்றாக நினைவில் இருக்கும்.....
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் ஜமால்.அகமது அலி, திருமிகு ஆசிரியர்கள், எஸ்.என்.எம்.முகம்மது காஜா,சயின்ஸ் சார் சீனிவாசகம் முகைதீன் லெப்பை, மாசில்லாமணி, ஓவிய ஆசிரியர் அப்துல் ரகுமான், கந்த சாமி ஜோஸ்வா, முதலான என் ஆசிரியர்கள் எனது வாப்பாவுக்கும் வகுப்புக்கள் நடத்தியுள்ளார்கள்.. 
திருமண வீடுகளிலோ,  பசாரிலோ மற்ற இடங்களிலோ என் ஆசிரியர்கள் என் வாப்பாவையும் என்னையும் ஒரு சேரப்  பார்த்தால் இருவரையும் “ஒருமையில்”  தான் அழைப்பார்கள்.எங்க வாப்பா அப்படியே நெகிழ்ந்து விடுவார்கள்....
என் படிப்பு,மற்றும் பரீட்சை மார்க் விபரங்களை அப்போவே சொல்லி விடுவார்கள்....மார்க் குறைவாக எடுத்திருந்தால் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் எங்க வாப்பாவிடம் கையெழுத்து வாங்க, நான் படாத பாடுகள் பட வேண்டும்...எங்க உம்மாவோ,வாப்பும்மாவோ,லெப்பார் மாமாவோ கடும் சிபாரிசு பண்ணினால் தான் நடக்கும்.....
 
இன்னைக்கு என் பிள்ளைகள் அது போல கையெழுத்துக் கேட்டால் உடனே, போட்டு கொடுத்து விடுகிறேன்....”கோப்புகளை  தாமதப்படுத்துவதே  இல்லை”.....
.”நீங்க என்ன?...... ஒன்னும் கேக்கமாட்டேங்றீங்களே?......உடனே போட்டு விடுரீங்களே........மார்க்கா இது?”....... அப்படீன்னு எங்க வீட்டு உள்நாட்டு இலாக்காவிலிருந்து கடும் கண்டனங்கள் எனக்கு வரும்....
அதற்கு நான் “பிராக்ரஸ் ரிப்போர்ட்டின் கையெழுத்துக்காக எங்க வாப்பாவிடம் கால் கடுக்க,கண்சிவக்கக் காத்திருந்தது என் முன்னால், நினைவில் வந்து போகிறதே ...நான் என்ன செய்ய”?.....அப்படீன்னு வழக்கம் போல பதில் சொல்லிடுவேன்...
நாங்கள் ஏழாம்  வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் முகம்மது பாரூக் அவர்கள், ஒரு ஸ்க்ரிப்ட் தயாரித்துக் கொண்டுவந்து “ஆல் இண்டியா ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி தயாரிக்கிறேன்......உங்க பள்ளியில் இருந்து நல்லா பேச, பாட  மாணவர்கள் தாருங்கள்"  என்று அன்று எங்கள் தலைமை ஆசிரியராக இருந்த ஜமால் அகமது அலி அவர்களிடம் வந்து கேட்டார்கள்....உடனே ஆள் பிடிக்கும் வேலை நடந்தது.....
நான் படிக்கிற காலத்தில் இன்றைய அன்னை ஹாஜிரா  கல்லூரித்தலைவர் நாடறிந்த பொறியாளர். செய்யது அகமது அவர்கள் ஒரு வருஷம் எனக்கு இளையவர்.    பள்ளிக் கூடத்தில்  நடக்கும், ‘ சொற்பயிற்சி மன்ற’ பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டிகளில்  தீவிரமாகப் பங்கு பெற்று நானும், எஸ்.கே.செய்யது அகமது, அவர்களும் பரிசுகளை பங்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் போட்டியிடுவோம்.....
(எங்கள் குடும்பத்தில்,என் தந்தையுடன் பிறந்த சகோதரி மற்றும்  மாமா பொறியாளர் முகம்மது ஹுசைன் அவர்களது மகளை எஸ்.கே.செய்யது அகமது, மணம் முடித்துள்ளார்.)
ஆர்.எம்.எ.ஷாஜஹான், அழகிரி புரம் மாரியப்பன், மியா லெப்பை லத்தீப் ஆகியோர் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.பரிசுகள் பெறுவார்கள்...
பேச்சுப்போட்டிகளில் என்னோடு SK. செய்யது அகமது, சின்னாமது மசூது, கே.கே.முகம்மது முகைதீன்  போன்றவர்களும் பரிசுகள் பெறுவார்கள்....
அவ்வாறு பரிசுகள் பல பெற்ற எங்களை ஆல் இண்டியா ரேடியோ நிகழ்வில் பங்கு கொள்ள அழைத்துச் சென்றார்கள்....
அந்த நிகழ்ச்சியின் பெயர் “நபி பிறந்தனரே” என்பதாகும்....பேராசிரியர் முகம்மது பாரூக் அவர்கள் எழுதித் தந்த  நபிகள் நாயகத்தைப் பற்றி வசன கவிதையை, “அனைத்துலகின் அருட்கொடையாம்.:” என்று .... பொறியாளர் புகாரி ஒருபத்தி வாசிக்க,அடுத்து நானும் ,செய்யது அகமது,ஷாஜஹான் என்று வரிசையாகப் பேசினோம்.
இடையிடையே பாடல்கள். அதுவும் சாஸ்த்தீரிய இசை அமைப்பின் சாயலில்.....அதை யாரெல்லாம்  பாடுவது?...என்று  ஓவிய ஆசிரியர் ரகுமான் சார் கடும் ஒத்திகை நடத்தி, என்னையும்,செய்யது அகமது,மாரியப்பன், மற்றும் எங்கள் சக மாணவி விருந்தாட்சி என்பவரையும் தேர்வு செய்தார்....
பாடல்களை சொல்முரசு கோமதி நாயகம் எழுதினார்....அவற்றில் “அழியாச்செல்வம் கல்வியைப் பெறுவோம்”......”அருளைப் பொழியும் புனித ரமலான் மாதத்தில்”....”.நேற்றடித்த திசையினிலே.....ஐலசா..” என்கிற பாடல் வரிகள் எனக்கு இன்றைக்கும் நினைவில் வந்து போகும்.....
பாடல்களுக்கு இசை அமைத்தவர் ஓவிய ஆசிரியர் ரகுமான் சார்..."அன்பர் இசைக்குழு" என்கிற பெயரில் சார் அந்தக் காலத்தில் ரொம்பவும் பிரபலமானவர்.....தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு சினிமா நடிகர் போல நேர்த்தியாக, அவ்வளவு அழகாக இருப்பார்.....இளம் வயதில் புல் புல் தாரா வாசிப்பதில் இணையற்ற திறமை சாலியாக இருந்தார்.....அதே பாணியில் இடது கையாலே பட்டன்களை அழுத்திப் பழகியதால் இடது கை பழக்க முடையவராக ஹார்மோனியத்தில் இசை அமைத்தார்..
 ஹார்மோனியம் வாசிப்பதிலும் தன்னிகரற்றவராக இருந்தார்.....அவரது விரல்கள் ஹார்மோனியத்தின் கருப்பு வெள்ளைக் கட்டைகள் மீது அப்படியே நர்த்தன மாடும்....அப்போது துள்ளி எழுந்து இசை வந்து ஆனந்தத் தாலாட்டும் என்று கேட்பவர்கள் சொல்வார்கள்..... ......அடிக்கடி "மெல்லிசை மன்னர்"  எம்.எஸ்.விஸ்வநாதனை நினைவு கொள்வார்.....அவர் மூலம் விஸ்வநாதன் மீது ஏற்பட்ட மோகம் எனக்கு இன்றும் குறைய வில்லை...
 சிறுவர் குரல் நிகழ்ச்சிகளில் எங்கள் பள்ளி மாவட்ட அளவில் பரிசுகள் பல பெற்றது.....அதனால் வருஷத்துக்கு ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோ ,நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்துச் செல்வார்கள்.....வானொலி நிலையத்தில்,கிடைக்கும் பணத்தை அப்படியே பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்குக் கொடுத்து விடுவோம்......இன்றும் அன்று வானொலியில் பாடிய அந்தப் பாடல்கள் நினைவில் வந்து தாலாட்டும்.......  எப்போவாவது அந்தப் பாடல்களை நான் மெதுவாகப் பாடும் போது.....இது எந்தப் படம், என்று பிள்ளைகள் கேட்பார்கள்........
என்னை மேடையில்  பேசவைக்க ..மதிப்பிற்குரிய என் ஆசிரியர்கள் முகைதீன் லெப்பை, கோமதி நாயகம், முகுந்தன், காசா முகைதீன் மற்றும் ஓவிய ஆசிரியர் ரகுமான் முதலானவர்கள் கடுமையாகத் தயார் செய்தார்கள்.
அதுபோல தமிழ் மீது பாசமும், காதலும் கொள்ளச் செய்தவர்கள் எனது திருமிகு ஆசிரியர்களான  கோமதி நாயகம், சி.காசா முகைதீன்,ஐயா.முகுந்தன் ஆகியவர்கள் என்றால் அது தான் உண்மை....
கல்லூரிக் கனவுகளை இன்னும் பேசுவோம்....

(முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் மாணவர் என்கிற உரிமையில் நான் என் ஆசிரியர்களைப் பற்றி எனது பார்வையில் பகிர்ந்துள்ளேன். இறைவன் நான் படித்தபள்ளியின் ஆட்சிக் குழுவின் உறுப்பினராக,தலைவராக, தற்போது செயலாளராக, தாளாளராகப் பணி செய்யும் வாய்ப்பையும் எனக்குத் தந்துள்ளான். 
எங்கள் நிர்வாக காலத்தில், தலைமை ஆசிரியராகப் பணி செய்த  ஆசிரிய மாமணி ஐயா, நல்ல பெருமாள், நல்லாசிரியர்கள் ஹாஜி ஷேர் அலி கான், ஜனாப்.பீர் முகம்மது, திருமிகு.ஐயா முகுந்தன், திருமிகு தேவராஜ், கடைய நல்லூர் ஹாஜி எகியா முதலானோர் பற்றியும் தனியே நான் பதிவிட எண்ணுகிறேன் )



வெள்ளி, 18 அக்டோபர், 2013

கனவுகள் காணும் கன்னியர்கள் .....




  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு கல்வியின் பேரால் வாழ்க்கைத்துணை அமைய
    தடைகள், இருப்பதில்லை...ஆனால் மேலப்பாளையத்தில் இது...... தாண்டவ மாடுகிறது....

    எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு பெண் மக்களை,படிக்க வைக்கிறார்கள், பட்டதாரிகளாக,என்ஜினியர்களாக்குகிறார்கள்......ஆனால் அவளது பணி?......பெரும்பாலும் அடுப்படியில் தான்.....

    சில சம்பந்தங்களில் "பொண்ணு வேலைக்கெல்லாம் போகக் கூடாது", என்று கண்டிசன் போட்டே திருமணம் நடக்கிறது....

    அண்மையில் "அரசு வேலை கிடைத்த பெண் வேண்டாம்", என்று ஒரு சம்பந்தமே நின்று போய் விட்டது....

    மாப்பிள்ளைகளோடு வெளிநாடுகளில் பணி செய்ய்கிற வாய்ப்பு மிக,மிக குறைவானவர்களுக்கே கிட்டுகிறது..

    நம்மூர் பெண்மக்கள், வெளி ஊர்களில் குடும்பத்துடன் தங்கி படித்து பட்டதாரிகளாகி.... மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை தேடினால்....அந்த சம்பந்தத்தை அந்நியமாக பார்ப்பதைக் கேட்டு மிக வருத்தப் பட்டேன்...

    தந்தை மறைந்து, தாயின் பாதுகாப்பில் படித்து பட்டம் பெற்ற பெண் மக்களின், கண்ணீரும் கேள்விப்படும் போது மனது படாத பாடு படுகிறது.

    பெண்மக்கள் கல்வியில் முன்னேறினால் தான் வீடும் நாடும் முன்னேறும்.
    வரும் காலம் இன்டர்நெட், எல்லாவற்றையும் இணைக்கும் காலம்.

    சாதாரணமான போன் பில் முதல் வங்கிக்கணக்கு ட்ரான்ஸ்பர் வரை,எல்லாவற்றையும் நெட் மூலமாகவே செய்கிற காலம் வந்துவிட்டது....

    அதற்கு ஆங்கில மற்றும் அடிப்படை அறிவு, எல்லோருக்கும் தரவேண்டும் ,அவை குறிப்பாக பெண் மக்கள் பெற வேண்டும் என்று உழைக்கிற கூட்டத்தில் நானும் இருக்கிறேன்..

    படிக்கிற எதிர் கால சந்ததிகளுக்கு, நல்ல கல்வி அதிகம் தர, தாயும் தந்தையும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தால் மென்மேலும் நல்வழி,காட்டமுடியும் என்பதே என் கருத்து.

    இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...பெற்றோர்களுக்கு எடுத்து வைக்க வேண்டும்.....

    சமீப காலமாக..... அழகும், நிறமும், கொஞ்சம் குறைவான மணப்பெண்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் தடை படுகிறது.

    கொஞ்சம் நிறம் குறைவான பெண்களைப் பெற்றெடுத்தவர்கள்,தம் மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி அலைந்து, படும் பாட்டை......சொன்னால் பரிதாபம் தான்..இதயம் தாங்காது...

    இளைஞர்கள் அந்த பெண்மக்களையும் அவர்களின் உள்ளத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும் ...அடுத்த வீட்டுப் பெண்மக்கள் அவர்கள் தம் மாப்பிள்ளைகளோடு மண முடித்துச் செல்லும் போது...."நாமும் இப்படிப் போகவில்லையே?.......அதற்கு நிறம் ஒரு தடையா ?" என்று வேதனைப் பட மாட்டார்களா?

    அவர்கள் சிவப்பாகப் பிறக்காதது யார் குற்றம்.?...ஒவ்வொருவரும் விரும்பியா கருப்பாகவோ,புது நிறத்திலோ,வெளுப்பாகவோ பிறக்கிறார்கள் ? அது தாய் தந்தை முன்னோர் " ஜீன்ஸ்"தருகிற அமைப்பு.அதுதான் உண்மை...

    அண்மைக்காலமாக மகரைக் கொடுத்து மணம் புரியும் இளைஞர்கள் பெரும்பான்மை ஆகி விட்டார்கள்.

    வரதட்சணை கொடுமையை அனாச்சாரங்களை .... தூரவீசி, எறிந்து விட்டார்கள்...லட்சக் கணக்கில் மங்கைக்கு, மஹர் கொடுத்து மனம் புரியும், தைரியத்தை வாய்ப்பை, இன்றைய இளம் தலைமுறைக்கு அல்லாஹ் தந்துள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.....

    இக்கால இளைய தலை முறை, இதையும் செய்வார்கள்,... நிற பேதம் பார்க்காமல், அந்தப் பெண்மக்களுக்கு வாழ்வு கொடுப்பார்கள், என்கிற நம்பிக்கை,என் போன்றவர்களுக்கு அதிகம் இருக்கிறது....)


 

       

 

 

 

 

 

வியாழன், 3 அக்டோபர், 2013

1993ஆம் ஆண்டு.மேலப்பாளையம் க முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபுபக்கர் அவர்கள்'மீரான் நீ பள்ளிக் கூட கமிட்டிக்கு உறுப்பினராக,பாரம் தரோம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் புதிய உறுப்பினராஅதுல கையெழுத்துப்போட்டு தப்பா"என்று என்னிடம் சொல்லி பள்ளியின் கல்விக் கமிட்டி உறுப்பினராக என்னை சேர்த்துக்கொண்டார்.
என் வாப்பவிடம் சேர்மன் இப்படிச்சொல்லுகிறார் நான் கைஎழுத்துப்போடவா?என்று கேட்டேன்.
பள்ளிக்கூடத்தை எங்க வாப்பா1941ல் டி.எஸ்.எம்.ஓஉதுமான் சாகிபோட சேர்ந்து ஆரம்பித்தார்கள்.உனக்கு சேர்மன் காக்கா அழைத்து அங்கீகாரம் தருகிறார்.சரின்னு சொல்லு.ஒன்ன மனசில வச்சுக்கோ,நீ அவர் ஆளா போறே,அவர் நாலும் நாலும் பத்துன்னா நீயும் அதத்தான் சொல்லனும்,தெரியுதா?அப்படீன்ன போ.இல்லன்னா வேண்டாம்.அவர் அதிகாரம் செய்யிற இடத்தில அவருக்கு முழு ஆதரவாளனா இருக்கனும்.மனசில வேற எண்ணம் ஏதும் வரக்கூடாது தெரியுதா?என் தந்தை எனக்கு இதைத்தான் சொல்லி அனுப்பினார்.
தன்னுடைய மகன்களைவிட மேலான அன்பு அவருக்கு என் மேல் இருந்தது.
ஒரு முறை பள்ளி வளர்ச்சி நிதி வசூலிக்க மெட்ராஸ் போன இடத்தில எனக்கு கடுமையான காச்சல் வந்து ரொம்பவும் கஷ்ட்டப்பட்டேன்.
சேர்மன் எம்.எ.எஸ்.அவர்கள் நீண்ட தூரம் நடந்து போய் மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தார்.வேறு நபரிடம் வாங்கி வரச்சொன்னால் மருந்து வந்துவிடும்.ஆனால் நான் பட்ட பாட்டைப் பார்த்து அவரே சென்று அதை வாங்கி வந்து என்னை படுக்கையில் இருந்து தூக்கி உட்ட்கார வைத்து என் வாயில் மாத்திரைகளைப் போட்டு அவரே ஒவ்வொரு மிடக்காக தண்ணீரைத்தந்தார்.அவர் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு கூட இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா?என்றால் சொல்ல முடியாது.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

குற்றாலம் போன கதை.


ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்கள் வரும் முன்னாலேயே..... என் பிள்ளைகள், எங்கயாவது   போவதுக்கு, ,.    ....இங்க ,அங்கன்னு திட்டம் போடுவார்கள். என்னால் பெரும்பாலும் போகமுடிவதில்லை. ஆனாலும் சில வேலைகளைத் தூர ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களோடு தயாராகி விடுவேன்.

ஆண்டு விடுமுறையில் என் தம்பியும் ஊர் வந்து விட்டால், பிள்ளைகள்... கேக்கவே வேண்டாம்......எப்படியாவது அவனைச் சரிக் கட்டிக் கிடுவார்கள். பிறகு அவன் தலைமையில் பயணம் கிளம்புவோம்.,

எனது உம்மாவும்,சகோதர,சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் டூரில் இருப்பார்கள். சின்ன கார்கள் காணாது. ஏதாவது வேன் இருந்தால் கொஞ்சம் தாராளமாய் இருக்கும்.

அப்படி சென்று வரும் போது மனது மிக லேசாகிவிடும்.

எனக்கு புடிச்சது என்னவோ குத்தாலம்தான்.அந்த மலையும்,அருவியும் நான் எத்தனை முறை பார்த்தாலும்,குளித்தாலும் சலிப்பு தந்ததே இல்லை. என்னவோ அந்த ஊர் மேல அம்புட்டு பிரியம். “பார்க்கப் பார்க்க, ஆனந்தம் எனக்கு எது? ன்னு கேட்டால் ,நான் குத்தால மலைஅழகை, மேகங்களை, அருவிகளைத் தான் சொல்லுவேன்.

“உங்களுக்கு குத்தாலத்த விட்டா வேற ஊருக்கு வழியே தெரியாதா?”......என்று “அந்தப்புரத்திலிருந்து” காட்டமான கேள்விகள் கூட அவ்வப்போது வருவதுண்டு.

திருனவேலி காரங்களுக்கு டூர் போக ரொம்பத் தோதுவான இடங்கள் சுத்திச் சுத்தி  நிறைய இருக்கு.....

அனேகமா....எல்லாவீட்டிலேயும் மூணு தலைமுறைக்குள்ளான கால கட்டத்தில், குத்தாலத்திலும்,மணிமுத்தாறு பாவனாசத்திலும் எடுத்த படங்கள் கண்டிப்பா இருக்கும்.

கொஞ்சம் “விவரம் தெரிஞ்சதுகள்” நம்பிக் கோவில், களக்காடு,செங்கல்தேறி,மாஞ்சோலை,கடனாநதி,மேக்கரை.பாலருவி,கும்பாவுருட்டி அருவி,தென்மலை....என்று .அப்படியாப்பட்ட ஊர்களுக்கு போய்வரும்.

எங்க சுத்தி எங்க போனாலும் காலையில் போயிட்டு, பொழுகிற ஊட்டுக்கு வந்துடலாங்ற வசதி இதுல இருக்கு.

அதென்னவோ ஊர் சுத்துரதில, எல்லாருக்கும் பிரியம்தான் . பல சிரமங்கள் பயணத்தில் இருந்தாலும், மனசு என்னவோ அவைகளை விரும்பி ஏத்துக் கிடத்தான் செய்யுது.

இந்தத் தலைமுறை மக்கள் கொடுத்து வச்சவங்க......

இன்னைக்கி டூர் போக  நினைச்சா, விமானம்,கப்பல், ரயில்,பஸ், வேன்,கார்,பைக் அது இதுன்னு நிறைய வசதி வந்துட்டது. நாங்க சின்னவர்களா இருக்கும் போது நிலைமையே வேறு..

ஊரைத்தாண்டி டவுனுக்கு சினிமா போரதுக்குக் கூட, விடாமல் கட்டுப்பெட்டியாக எங்களை வளர்த்திருந்தார்கள் பள்ளிக்கூட சுற்றுலா போரத்துக்கு ரொம்பவே கனவு கண்டிருந்தோம்.

“தினத்தந்தி” அச்சாவது எப்படி என்று பார்க்க, ஒருக்க “வீராவரம்” ஜங்ஷனுக்கும்,”சிமிண்ட் எப்படி தயாரிக்கிறார்கள்?” என்று   காட்ட தாழையூத்து சிமிண்ட் மில்லுக்கும் பள்ளிக் கூடத்தில் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.அதுலாம் நாலாவது,அஞ்சாவது படிக்கிற காலத்தில் தான்.

அப்புறம் ஆறாவது,ஏழாவது படிக்கும் போது அரசு அதிகாரிகள் உத்தரவுப்படி பள்ளிக்கூடத்தில் ஏதாவது அரசு சினிமா படம் காட்ட கூட்டிப் போவாங்க.....

கண்ணகி டாக்கீஸில் காந்தி டாக்கு மென்ட்ரி படம் பார்க்கப்  போயி   வந்து, ” என்ன படமோ?............என்னத்த எடுத்திருக்கானுவோ?..... எம்.ஜி.ஆர். சிவாஜி வராதது ஒரு படமாலே? ஒரு பாட்டு,ஸ்டண்டு இருக்கால?.... ன்னு அந்தக்காலத்தில் எங்க செட்டுக்கே பயங்கர கோபம் வந்து போனது.  “ “இதெல்லாம் எவம்லே பார்ப்பாம்? . இந்த டிராயிங் சாருக்கு வேற படமாலே கிடைக்கல்லே?” என்று பேசிக்கொள்வோம்.

“கப்பலோட்டிய தமிழனில் சிவாஜிய போட்டு, கொன்னு எடுக்குராணுவ” சிவாஜியால அடி தாங்க முடியல்லே......எனக்கு அழுகையா வந்துட்டது”ன்னு எங்க செட்டுல, ஜின்னா சொல்ல.......

“இதுக்கு தாம்லே வாத்தியார் வருணுங்றது.....அந்த போலீசை விட்டு வைப்பாராலே? நொறுக்கித் தள்ளிற மாட்டாரேலே” என்று “ஓப்பீ” சொல்வான்.

எட்டாவது ஓம்பதாவது படிக்கிற காலத்தில் தான் குத்தாலத்துக்கு “எக்ஸ் கர்சன்” போப்போரம்..வர்றவங்க பேர் கொடுங்கன்னு ஒவ்வொரு வகுப்பா பேர் எடுத்தாங்க.....

“எல நீ வந்தா நா வாறன்”......அப்படீன்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல ரொம்ப நெருக்கடி கொடுத்து அனுமதி கேட்டோம்.....

 “மாசிலாமணி சார்வாள் வாறாரா?.”....என்று கேட்டு, அனுமதி கொடுத்த உம்மா வாப்பாவும் உண்டு. 

அந்தக் காலத்துல முஸ்லிம் ஹைஸ்கூலில் அவர் கொடுக்கிற அடிகள்,  அம்புட்டு பிரபலம். மாணவர்களை,சர்வ காலமும்  அடிச்சி அழகு பார்க்கும் அவரை, புதுசா எவனாவது பார்த்தான்னா,பாக்கிறவன் மிரண்டே போயிருவான்........வாட்ட சாட்டமா......ஆஜானு பாகுவா...அப்படி இருப்பார்.  

அவர் கொடுக்கும் பிரம்படி வித்தை, ஒவ்வொருத்தன் வீடு வரைக்கும் தெரியும்....அடி வாங்குனவன் .நடக்க முடியாது. .....அவர் கண்ணசவை, விட்டு பிள்ளைகள்,யாரும் தூரப் போமாட்டங்கன்னு, தாய் தகப்பனுக்கு நம்பிக்கை இருந்தது.

எங்க வாப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி, நேரம் பாத்து அப்ப்ளிகேசன் போட்டேன்.

“பள்ளிக் கூடத்துல குத்தாலம் கூட்டி போறாங்களாம்.....நான் கண்டிப்பா போகணுமாம்.”

“அப்படி யாரு சொன்னா” ?

“சார் தான்...”

“எந்த வாத்தியார்ரா, சொன்னது?”

“கோமதி நாயகம் சார்வாள் தான்”

“அப்படி, எந்த சாரும் சொல்ல மாட்டாங்களே?”

“அவர்தான் சொன்னார். நாங்க அங்க .....போனதிலிருந்து வூட்டுக்கு வரும் வரை, பாத்ததை ,மனசுல தொகுத்து  கட்டுரை எழுதணுமாம்......அதுக்கு கிடைக்கிற  மார்க்க வச்சித்தான் பரிச்சையிலே பாஸ் பண்ணுவாங்களாம்.”......

“சரி,சரி, .....குத்தாலம் போக ரூபா எவ்வளவாம்?”  

“நாலு  ரூவா தான்.”

“எதுல கூட்டி போறாங்களாம்?”

“திருனவேலி ஜங்ஷனில் இருந்து தென்காசி வரை ரயில்.....அப்புறம் வரும் போதும் ரயில் தான்”.....

“சரி சரி ....உன்கூட யார்லாம் வாராங்க?......

“சிந்தா காஜா,..முத்துப் பாண்டி,மயில்.நம்ம தாஜுத்தீன்,ஜின்னா.....ஜாபர்......இவங்கல்லாம்”

."மலைக்கு மேலெல்லாம் போகக் கூடாது.....உம்மாட்ட ரூபா வாங்கிட்டு போயிட்டு வா........எல்லாரும்....பத்திரமா போயிட்டு வாங்க...ஆழம் தெரியாம எங்காவது இறங்காதீங்க”....அப்படீன்னு வாப்பா சொல்லி அனுமதியும் கிடைச்சிது..

“செண்பகாதேவி,தேனருவிக்கேல்லாம் போகப்டாது” ன்னு உறுதி மொழியோடு பணமும் தந்து எங்க உம்மா அனுப்பினாள்.

அன்னைக்கு மதியம் பனிரண்டு மணி சுமாருக்கு திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலைய ரண்டாவது பிளாட் பாரத்தில் செங்கோட்டை பாசஞ்சர் ரயில் தெற்கு நோக்கி புறப்படத்தயாரா நின்னது.

அங்க எப்படி வந்து சேர்ந்தோமுன்னு தெரியல்லே....அம்புட்டு சந்தோசம்..மதிய சாப்பாட்டை பத்தரை மணிக்கெல்லாம் முடிச்சாச்சு.

கருத்த நீண்ட குழாய் வடிவம்; கீழே சக்கரங்களைக் கொண்டு வடிவமைத்தது  போல நீராவி என்ஜின்.அதுக்கு அடுத்த ரண்டு,மூணு பெட்டியில் நாங்கள் சுமார் நூறு பேர் அடித்து பிடித்து உட்கார்ந்து கொண்டோம்.

.ஆத்ம நண்பனா இருந்தாலும் ஜன்னலோர சீட்டை விட்டுக் கொடுக்க யாரும் தயாரா இல்லை .இதப்பார்த்த கோமதி நாயகம் சார்வாள் ”ஆளுக்கு கொஞ்ச நேரம் முறை வச்சி உட்காருங்கப்பா”அப்படீன்னு ஒரு முடிவு சொன்னார்.

நீராவி என்ஜினில் இருந்து வந்த நிலக்கரி புகையும்,ஒரு மாதிரி ஆவி வாடையும் ரயில் நிலையம் முச்சூடும் இருந்தது.அது அப்போதைக்கு ரொம்பப் புடிச்சிருந்தது.

இதற்கிடையே பசிவந்தால் சாப்பிட ஒட்டு மாவு.பணியம்,மிச்சர்,காரச்சேவு,அல்வா எல்லாம் எங்க அப்பாம்மா தந்து விட்டாள்.

“ம்ம்ம்வூம்” என்கிற சங்கு சப்தத்தில் ரயில் புறப்பட தயாரானது. நாங்க இருந்த பெட்டிக்குள்ளே,வாத்தியார்கள் ஒவ்வொருத்தன் பெயரா சொல்லி வருகையை சரி பார்த்துக் கொண்டார்கள். என்ஜினை சுத்தி பக்கவாட்டில் இருந்து ஆவியும் புகையும் கலந்து வெளிவர வண்டி புறப்பட்டது.

மேம்பாலம் தாண்டியும் வண்டி வேகம் புடிக்கல்லே.

.”மீராப்பள்ளி ஆறு வருமாலே?......லெப்ப கேட்டான்.

“அது திருச்செந்தூர் பாதையில் தாம் வரும்.ஒரு மண்ணும் உனக்குத் தெரியல்லியே” அப்படீன்னு ஒப்பீ சொல்லிக்கிட்டான்  .

டக், டக், டக், டக்,...... ஊ......ஸ்.........ஊ....ஸ் ஊஸ் என்று குறுக்குத்துறை ரோட்டு ரயில் கேட் பக்கம் போனது. ரயில் கேட அடைச்சிருந்தது, அங்க நிக்கிற நம்மூர்க்காரர்கள் யாராவது,ரயில்ல நாங்க போறதைப், பார்க்க மாட்டார்களா? என்று தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டோம்.தெரிஞ்ச மூஞ்சி யாரும் இல்லை.

கொஞ்ச தூரத்தில் டவுண் ஸ்டேசன் வந்து அங்க ஒரு அஞ்சு நிமிஷம்.அப்புறம் பேட்டை,கல்லூர்,என்று நின்னுபோனது.

“எலே....சேர்மாதேவி கத்திபாலம் வரும்ல.....எவனாவது தலய, கிலய நீட்டாதிய.....உள்ள வாங்க”...அப்படீன்னு சொல்லிக்கிட்டுருக்கும் போதே,தாமிர பரணி ஆத்தின் மேல் உள்ள அந்த  பாலம் வந்தது. தடா தட சப்ப்தத்துடன் வண்டி போனது...

அங்கும் நிப்பாட்டினான்.

ஒவ்வொரு ஸ்டேசனிலும் என்ஜின் டிரைவர் கையில் கொடுக்க, வட்ட சைசில்ஒரு பெர்ய கவட்டை மாதிரி பேட்,  சடார்ன்னு வண்டி போகிற,அந்த வேகத்திலும் டிரைவர் கையில்,கொடுத்துகிட்டே இருந்தான். அத மாதிரி வண்டி டிரைவரும் ஏதோ எரிஞ்சிக்கிட்டே வந்தான்.

“அம்பாசம்த்திரம் முறுக்கு நல்லாருக்கும் சாப்பிட்டு பார்லே”...என்று சொல்லி எங்க லெப்பார் மாமா எனக்கு நாலணா தந்து விட்டார்.அது டவுசர் பாக்கட்டில் இருந்தது.அந்த ஊர் வந்ததும் மறக்காம வாங்கி சாப்பிட்டுக்கிட்டேன்.

போளின்னு ஒன்னு கொண்டு வந்தான்.அத ரயில்ல தவிர மத்த இடங்கள்ல வாங்க முடியாதோ?என்னவோ.?

எப்பவோ போட்ட போளியை, எங்க தலையில் கட்டிட்டு அந்த கண்ணாடி டப்பா யாவாரி போயிட்டான். மஞ்சக் கலர் சப்பாத்தியில் கொஞ்சம் இனிப்பு கலந்த மாதிரி அது இருந்தது. "நம்ம ஊரில் ஏது?  இந்தப் பண்டமுன்னு" தின்னேன்.

அம்பாசம்த்திரத்துக்கு அடுத்துநாலைந்து ஸ்டேசன் தாண்டி  ரவண சம்த்திரம்..அங்க இறங்கித்தான் பொட்டால் புதூர் போவாங்க.தூரத்தில் அந்த மினாரா தெரியுதான்னு பார்த்தால் ஒண்ணுமே தெரியல்லே.

அங்க சுத்தி இங்க சுத்தி.பொளுகிற அஞ்சு மணி தாண்டி வண்டி தென்காசி வந்து சேர்ந்துச்சு.

கொண்டு வந்த பை,பாக்கட்டுகளோடு,வண்டிய விட்டு  இறங்கி வெளியே வந்தோம்.தூரத்தில் மேக கூட்டத்தோடு குத்தால மலை தெரிந்தது.     அங்கிருந்து  மலை வாசத்தோடு, வந்த குளுந்த காத்து அப்படியே மனசை என்னவோ செய்தது.

ம்ம்ம்.....நடங்கப்பா...அப்படீன்னு சொன்னாங்க.

“சரி பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்காம்”? .

“ கொஞ்ச தூரத்துல”......சரி நடப்போமுன்னு நடந்தோம்.....

நடைப் பயணம்   பஸ் ஸ்டாண்டும் தாண்டி,,குத்தால ரோட்டுக்கு போனது.

வழி நெடுக இருந்த மருத மரங்களில் இருந்து, சொல்லிக் காட்ட முடியாத வாசனை......

"சார்.....குரங்கெல்லாம் எங்க போச்சு?.....ஒன்னையும் காணமே"? அப்படீன்னு நாங்க கேட்டுக்கிட்டோம்.

"நீங்கல்லாம் வாரத தெரிஞ்சு    அதுகள்லாம், மலைக்குள்ள போயிட்டுதோ என்னவோ?  " சொன்னது மாசிலாமணி சார்வாள் தான்
.
அவர்  இந்த மாதிரி ,நடந்து வந்து ரொம்ப நாளாச்சுதோ....என்னவோ? பேசும் போது கொஞ்சம் இளைக்கவும் செஞ்சுது.  அவர் சட்டை,வேஷ்ட்டி  எல்லாம் வேர்வையில் நனைஞ்சிருந்தது.

"எப்போ குத்தாலம்  கண்ணுல தெரியப் போகு தோ?" ன்னு ஆயிடுச்சு...

ஒரு ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு, எங்களை நடத்தியே குத்தாலத்துக்கு கூட்டி வந்துவிட்டார்கள். கை காலெல்லாம் , ஒரே வலி.

அப்பாட......வந்துட்டோமுன்னு அண்ணா சிலை பக்கம் வந்து, அருவிக் கரைக்குள் நுழைந்தோம்.

அக்கடான்னு, ......மெயின் பால்ஸ் கரையில் உட்கார்ந்திட்டு ,. கொஞ்ச நேரம் கழிச்சி .......குளிச்சோம்.குளிச்சோம்.அப்படி ஒரு குளி...

"கரையேறு" ன்னு சொல்ல ஆள் யாரும் இல்லை..... கண்கள் சிவந்து தலை முடியெல்லாம் பஞ்சாய் பறக்க,நடுக்கம் இல்லாமல். வெளியே வந்தோம்.தலை துவட்டும் போது காத்து அடிச்சதால் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது,..

அடுத்து சாப்பிடுறது தான்.....

“யாருக்கு என்ன வேணுமோ?  அதை அவனவன் வாங்கி சாப்பிட்டுக் கங்க.....அதுக்கு அவங்களே துட்டு கொடுத்துக்கங்க “ இதை சார் சொல்லிக் கிட்டார்,

ஒரு ரூபா கொடுத்தா நல்லா சாப்பிடலாம்.......

அன்னைக்கு சாரலோடு குளிரும் இருந்தது.  அருவியில் குளிச்சு நல்லா பசி.. சாப்பிட்டோம்..சாப்பிட்டு முடிச்சுட்டு எங்களை அப்படியே ஐந்தருவி ரோட்டில், தளவாய் பங்களாவுக்கு எதிரே “கங்கா விலாஸ்” என்கிற பழைய பங்களாவுக்கு கூட்டிப் போனார்கள்.

அந்த பங்களா  உள்ளே போய், ஆசிரியர்கள் பேசப் போனார்கள். ரொம்ப நேரம் ஆச்சுது...எங்க யாரையும் உள்ளே கூப்பிடல்லை. பெறகு ஒரு தடிச்ச அம்மாவெளியே வந்து கடுமையான குரலில்  “இங்க நிக்கிற அம்புட்டு பேரும் வெளிய போங்க....என்றார்,
"எம்மா.....வந்துருக்குறது எல்லாம் புள்ளைங்க.....இந்த நேரத்துல அவங்களை நாங்க எங்க கூப்பிட்டுப் போக முடியும்? "கோமதி நாயகம் சார் கெஞ்சுகிற குரலில் பேசினார்.

"நான் கேக்கிற வாடக உங்களாலே தரமுடியாது...போயிருங்க.....இங்க தங்குரதுக்கு இடமில்லை".....வார்த்தைகளில் கொஞ்சம் கூட அந்தப் பெண்ணிடம் இரக்கம் தெரியவில்லை..

என்ன செய்யன்னு ஒருத்தருக்கும் ஓடல்ல......மணி வேற பத்து ஆயிட்டுது....

கொண்டு வந்த குளிர் தாங்கும் டர்க்கி டவல் நனைந்து விட்டது.அதனால் தூக்கி கொண்டு போக,கனம் வேறு.   எங்க வாத்தியார்கள் கெஞ்சிப் பார்த்தார்கள்.அந்த தடி பொம்பள கிட்ட ஒன்னும் நடக்கலை.
அங்க இங்க ஓடி யாடி பார்த்தும் ஒரு இடமும் கிடைக்கவில்லை.

எதிரே இருந்த ஒரு ஹோட்டல் வாசலில், கடும் குளிரில்,சாரல் மழையில் பற்கள், கிடுகிடு என நடுங்க சுவர் ஓரமாக உட்கார்ந்தும், படுத்தும் அந்த இரவைக் கழித்தோம்.   

கொஞ்சம் குண்டு பையன்கள்,   குளிரை தாங்ர மாதிரி, காட்டிக்  கிட்டாங்க..ஒல்லிக் குச்சி ஆசாமிகள்   வெட வெடுத்துப் போனார்கள்...அந்த கோஷ்ட்டியில் நானும் இருந்தேன்.....அப்படி ஒரு கஷ்டத்தை, தூக்க மில்லாத இரவை நான் அனுபவித்ததே இல்லை.    
 
அந்த நிலையைப் பார்த்து கொஞ்சம் அழுகை வந்தது. நல்ல வேளை....நம்ம வீட்டில் இத யாரும் பார்க்கல்லை...தெரிஞ்சா இனி டூர் போக விட மாட்டாங்களே ....என்ற கவலை தான் வந்து போனது..

மறுநாள் அதிகாலையில்,நம்ம ஊர் பிள்ளைகள் இப்படி "மழையில்..... ராவிடிய கஷ்ட்டப்படுகிரார்கள்"  என்பதைத் தெரிந்து கொண்ட குத்தாலம் பள்ளிவாசல் இமாம்,மறைந்த கோஜா லெப்பை யூசுப்  ஆலிம் அவர்கள், ஓடோடி வந்து விட்டார்.     அவரும் ஆசிரியராக இருந்து பல, நூறு பிள்ளைகளுக்கு பாடம் படிச்சிக் கொடுத்தவர்   ஆச்சே......அதனால் "தானாடாவிட்டாலும் அவர் தசை ஆடியது".

"அவ ஒரு பொம்பளையா?  இப்பிடி குளிர்ல போட்டு,பிள்ளைகளை அநியாயம் பன்னிட்டாளே"....கிதிர் சாரும்,மைதீன் லெப்பை சாரும் அழுது விட்டார்கள்.

"வாங்க எல்லோரும் போவோம்"..என்று கையோடு பள்ளிவாசலுக்கு கூட்டி வந்துவிட்டார்..தூக்கக் கலக்கத்தில் இருந்த மாணவர்களை  பள்ளிவாசல் கட்டிடத்தில் ஓய் வெடுக்கச் செய்தார்.

பள்ளிவாசல் எதிரே     சித்தருவிக்குப் போனோம்...அப்புறம் வேற எங்க போகவும் மனசே வரல்லை.

பிறகு மதிய உணவும்   பள்ளிவாசல் திண்ணையில் தந்தார்கள்.பருப்பு சாம்பாரோடு அன்னைக்கு புதுசா ஒரு துவையல் சாப்பிட்டேன். எங்க வீட்டில் சாப்பிடாத கொத்தமல்லி சட்னிதான்.பசியில் உண்ட அந்த உணவும்,சட்னியும்,பள்ளிவாசல் திண்ணையும் இன்னைக்கும் நினைவில் நிற்கிறது.

 

அன்னைக்கு மாலையே ஊருக்கு கூட்டி வந்தார்கள்...தென்காசிக்கு மீண்டும் நடைப் பயணம்....திருனவேலி ரயிலைப் பிடிச்சு ஜங்ஷன் ரயில்வே ஸ்டேசன் வந்தோம்....

அங்கிருந்து,....... தூக்க கலக்கத்துடன் நடந்து வந்து, பத்தாம் நம்பர் பஸ் புடுச்சு கீழாப் பாளயம் வந்து தளர்ந்த நடயுடன் வீடு வந்து சேர்ந்தேன்..

என்னைப் பார்த்துட்டு எங்க உம்மா சொன்னாள் “ஒரு நாள்ல இப்பிடி உணந்துட்டியே “

 .

 

.

:

 

 




(இன்னைக்கும் அந்த “கங்கா விலாஸ்” பங்களாவை நான் பார்க்கும் போதெல்லாம்,................ எனக்கு பள்ளி நாட்களும்,.................எங்க வாத்தியார்களின் கெஞ்சலும் .......இரவெல்லாம் கடும் குளிரில் நடுங்கியதும்,.............எங்களைத் துரத்திவிட்ட அந்த "குண்டு பொம்பிள்ள" உருவமும் தான்,நினைவில் வந்து போகிறது...................அப்போ பார்த்த அதே கட்டிடம், எந்த விதமான வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே நிற்கிறது...)