ஞாயிறு, 18 மே, 2014

எங்க போச்சோ?



“நெய்யும் தொழிலே செய்யும் தொழில்”, என்று வாழ்ந்தவர்கள் மேலப்பாளையம் மக்கள்.அதுவும் 1990ஆம்  ஆண்டு வரை என்றால் இளைய தலைமுறை ஆச்சரியமாகத் தான் கேட்கிறார்கள்.

என்ன செய்ய ? இன்றைக்கு தொழில்கள் பல இங்கே இல்லாமல் போய் விட்டதே.

ஊருக்குள்ளே மண்பானை சட்டி விக்கிற கடைகள் கொடிமேடையிலும்,கொட்டிக் குளத்திலும் இருந்தன. இன்னைக்கு குறிச்சியில் ஏதோ கூட்டுறவு சங்கம் அமைத்து அந்தத் தொழில் குற்றுயிரும், குலை உயிருமாக உள்ளது.

காரணம்,விறகு அடுப்புக்கள் மறைந்து,கேஸ் அடுப்புக்கள் மட்டுமே கதி என்று ஆகிவிட்டதும்,பொறுமையாக சமையல் செய்ய நேரமில்லாததும்,அப்புறம் சமைச்சி முடிச்சு சட்டி பானைகள் பூசி கழுவி வைக்க மலைச்சலால் வந்த சோம்பலும் சேர்ந்து வந்ததுதான் என்று ஆகிவிட்டது.  மண்சட்டி சமையல் சோறு என்று கடைகளில் போர்டு மாட்டி ஜாம ஜாமுன்னு யாபாரம் பிச்சி எடுக்குது.

“ரா வேளை” கல்யாணங்களில் அப்பாவித்தொழிலாளர்கள் தலைச்சுமையாக பெட்ரோமாக்ஸ் லைட் பிடித்து வருவார்கள்.மாப்பிளை ஊர்கோலத்தில் அவை ஒரு அங்கமாக இருந்துச்சு. ராக் கல்யாணங்கள் இல்லாது போனதால், அவங்க தோளிலும் இல்லாமல் போயிட்டுது. இன்னைக்கு பழைய பெட்ரோமாக்ஸ் லைட்டை ரிப்பேர் பார்க்கக் கூட ஆட்கள் இல்லை.

அதுக்குண்டான சாமான்களும் இல்லை. “பதினாலு லாம்பு” என்று ஒரு சிமினி மாட்டிய மண்ணெண்ணெய் விளக்குகள், பல வீடுகளில் இருந்துச்சு. அதுங்களுக்கு உண்டான சிமினி, திரி என்று எதுவும் மார்க்கட்டில் இல்லையே.அதனால் அதுகளும் இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு.

நட்டி விளக்குகள் அதுவும் இல்லை.

சைக்கிள் ரிப்பேர் பார்க்குற ஆட்கள் கூட இன்னைக்கு ரன்ண்டு மூணு பேர் மட்டுமே இருக்காங்க.

ஓவியர் மைதீன் மாமா எனக்கு தந்த கியர் பாக்ஸ் “ராலி” சைக்கிளை ரிப்பேர் பார்க்க ஆள் இல்லை.

சாவி கொடுத்து ஓடுகிற, மணி அடிக்கும் கிடியாரத்தை ஒக்கிடவும் ஆள் இல்லை. சாவி கொடுத்து ஓடுகிற ரிஸ்ட் வாட்ச் கதையும் அதுதான்.

எங்க வீட்டில் உள்ள பழைய வால்வு ரேடியோ பெட்டியை, "ரிப்பேர் பார்ப்பீங்களா?"ன்னு யார்கிட்டயாவது கேட்டால் "வேற ஆளப் பாருங்க".அப்படீங்குறாங்க..

சமீபத்துல எங்க வீட்டில் இருந்த பழைய "நேசனல் பானா சானிக்" கேசட் டேப் ரிக்கார்டரை ஓட வைக்க "மோட்டாரில் ஒரு பெல்ட் மாட்டிக் கொடுப்பா"ன்னு நம்ம கலீல் கிட்ட கேட்டால்,வேற யார்ட்டயாவது "அத"க் காட்டுங்களேங்கான்.
ஆல் இண்டியா ரேடியோ செய்தி கேக்கிற ட்ரான்ஸ்சிஸ்ட்டர் "கை ரேடியோ"வ சரிக்கட்டித்தர யாருமே இல்லை.கேட்டா "நாங்க செல்போன் ரிப்பேர்தாம் பாக்றோம்"ன்னு சொல்ற பதிலா கேட்டு,பல கடைகளில் ஏறி  இறங்கியாச்சு.

அம்மிக் கொத்தனுமா? என்று கேட்டு  வருகிற கல் ஆசாரிகள், இன்னைக்கு தெருத்தெருவாக யாரும் வாரதில்லை.

ராத்திரி வேளைகளில், கொடிமரம் பக்கம் அம்மன் கோவில் முகப்பில், நட்டிவிளக்கு பந்த வெளிச்சத்தில், போர்வை துப்பட்டியில் இருந்து சீட்டித்துணி பாப்ளின் சட்டை, நேரியல், லேஞ்சி வரை ஏலம் போட்டு வித்த யாபாரிங்க யாரும் வர்றதில்லை.

ஒரு காலத்தில் “சக்கரை காடி” அப்படீன்னு ஒன்ன காய்ச்சி வீடு வீடா 'வெளம்புன' ஒரு குடிப்பு, இன்னைக்கு இல்லாமலே ஆகி விட்டது.

புள்ள பெத்த சீதேவிகளுக்கு கொடுக்க “காயம்” காய்ச்சிறதும் எங்கேன்னு தேட வேண்டியது உள்ளது.  

40 மருந்து சாமான்கள் சேர்த்து ஆக்கிய மருந்துச்சோறு இன்னைக்கு 7 சாமான்களோடு “பண்டாரிகள்” ஆக்குகிறார்கள். பண்டாரிகள் என்றால் அந்தக் காலத்தில் சாப்பாடு தயாரிப்பவர்கள் என்றும் அர்த்தமும்  உண்டு.

மருந்துக் களி “பசியாற” பல வீடுகளில் மாசம் ரண்டு தடவையாவது கொடுப்பார்கள்.இன்னைக்கு பிள்ளைங்க கிட்ட இதப்பத்தி மூச்சு விட முடியல்லை.பசியாறன்னா என்னா?...... அது நாஸ்ட்டா வாகிப்போனதால் அப்படிக் கேக்காக.

மழைக்காலம் வந்துவிட்டால் சுக்கு,  மிளகு, திப்பிலி, அக்கரா, இஞ்சி, வேப்பிலை கொழுந்து சேர்த்து,அத ஒன்னா,மை போல  அரைச்சி.சாறு எடுத்து, "விஷ கஷாயம்" தருவார்கள். அதை பிள்ளைகளுக்கு தம்ளர் மூலம் வாயப் பெழந்து  ஊத்தியோ,மூக்கைப் பொத்தி  சங்கில் வைத்தோ “பூட்டி” யோ விடுவார்கள். இன்னைக்கு பல வீடுகளில், சங்கே இல்லை. காலுக்குள்ள அமுக்கி போட்டு கொடுக்கிற, வித்தைகள் தெரிஞ்ச பெத்தும்மாமார்களும் இல்லை.

நம்ம ஊரில் மார்க்க புஸ்தகக்கடைகள், தொப்பிக் கடைகள், மூணு நாலு இருந்துச்சு, இன்னைக்கு யார் புண்ணியத்திலோ ஒன்னும் இல்லாம போயிடுச்சு.பெருநா ராவைக்கு மட்டும் “ஏதோ கொஞ்சம்”,தொப்பி யாவாரம் அங்க இங்க நடக்குது.

கீழக்கரை, காயல் பட்டணம் தொப்பி போடுரவங்களை, லட்சம் பேர் உள்ள இந்த ஊரில், விரல் விட்டு எண்ணிவிடலாம்.

முந்திலாம் ஒரு விருந்துக்கு போறதா இருந்தாலும், தொப்பி போடாம யாரும் போகமாட்டாங்க.காலத்தில் கோலம் விருந்தில் “பறிமாறுகிற”, பிடிச்சிக் கொண்டுவந்த தம்பி மார்கள் “பாய்” என்றுதான் கூப்பிட்டு “சோத்த வைக்கவா ?,காய ஊத்தவா ? ”ன்னு கேக்கிறான்.

மத்தவங்கள “பாய்”ன்னு கூப்பிடுகிற அந்தப் பையன்கள், தம் கூட பிறந்த அண்ணன் தம்பி, மாமன் சித்தப்பன,ஏன் மச்சான  பாய்ன்னு ஏன் கூப்பிட மாட்டேங்கானுவன்னு, பிடிபட மாட்டேங்குது.அவங்களையும் கூப்பிட்டா தெரியும் அந்த வார்த்தையின் வலி. எங்கேயோ இருக்கிற உருதுக் காரங்களின் கலாச்சாரங்களை ஊரில் இறக்குமதி பண்ணிட்டாங்க.

காக்கா,பெத்தாப்பா, மாமூட்டுவாப்பா,மாமும்மா,அத்தா,பெரியத்தா,சின்னத்தா,அத்தான்,மச்சான், என்கிற அழகு பாச வார்த்தைகளையே அழிச்சிருவாங்கபோல இருக்கு.

பங்காளிகளா பழகிட்டு இருக்கிற இந்து,கிறிஸ்துவ மக்கள், முஸ்லிம் மக்களை, மாப்பிளை,மாமா சாச்சா, சித்தப்பா,தாத்தான்னு தான், கூப்பிடுறாங்க.இவம்மட்டும் புதுசா “பாய்”அப்படீன்னு சொல்லப் படிச்சிருக்கான்.

நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.

இருநூறு வருஷத்துக்கும் மேலா ஊருக்கு சோறு போட்ட நெசவுத்தொழில் இன்னைக்கு அழிஞ்சே போய்விட்டது....சரி அந்த காக்குழி,, தறி, பாவு, ஓடம், தாரு,புல்லு,கஞ்சிப்பை,கலைக்கா கம்பு,பண்ணு,ராட்டு,குதிரை,தள்ளு,பூட்டு,அலாம்பு கம்பு,கப்பி,மிதி,புடுத்தலை,சூவை,ஏதாவது ஊரில் இருக்கா? அப்படீன்னு தேடினா ஒண்ணுமே கிடைக்கலே.

நேற்று, என் மச்சினன் வகையில், மொன்னி வீட்டு தெரு நடுவே, ஒரு கல்யாண வீட்டுல சாப்பிடப் போகும் போது,”கருமமே கண்ணாயினார்”கதையில் ஒரு பெத்தாப்பா ராட்டுல,பீடியை சுருட்டிக்கட்ட,  தார் திரிச்சிக்கிட்டு இருந்தார்.. அதைப்பார்த்ததும் நான் நின்னுட்டேன். அப்பறம் அத "செல்லுல", படமா எடுத்துகிட்டு வந்தேன்.

எம் மருமக்கள் “மாமா....எதுக்கு இத எடுக்கிய?” அப்படீன்னு வேறு கேட்டுக் கிட்டாங்க...

நான் சொன்னேன் “ என்ன செய்ய ? இதையாவது பதிஞ்சு வைப்போமே”   

 


 

கருத்துகள் இல்லை: