செவ்வாய், 27 மே, 2014

சைலப்பன் அண்ணாச்சியும்,அம்பாஸ்டர் காரும்


 

        வழக்கமா எங்க வீட்டுல உள்ள கார்களை, பழுது நீக்கி சரி பண்ண திருனவேலி ஜங்சன் பேராச்சி பட்டறைக்குத் தான் அனுப்புவது வழக்கம். எங்க வாப்பா காலத்திலும், இப்பவும் அதுதான் நடைமுறையில் உள்ளது..

பேராச்சி திருநெல்வேலி ஜங்சன் பிரபு ஹோட்டலுக்கு அடுத்து ஒர்க் ஷாப் வச்சிருந்த நேரத்திலும்,அப்புறம் திருநெல்வேலி வடக்கு பை-பாஸ்  சாலையில் அதை மாற்றிய நேரத்தில் இருந்தும்,




எங்க கார்கள்  அந்தப்பட்டறைக்கே சென்று புதுப்பிக்கப்பட்டு, அல்லது பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

இப்போ பேராச்சி சின்னையா   இல்லை. கடும் உழைப்பாளியான அவர் காலமாகி விட்டார்.ஆனால் அந்த பேராச்சிப் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்,அந்த பழைய ஒர்க்ஷாப் பக்கம் தங்கள் தொழிலை செய்து வருகிறார்கள்.

நேற்று முந்தினம் மைத்துனர் ஹைதர் அலி சென்னையில் இருந்து செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது "உங்களுக்கு விஷயம் தெரியுமா?.......அம்பாஸடர் கார் கம்பெனிய மூடியாச்சு "  அப்படீன்னாம்.

"ஏதாவது ஸ்ட்ரைக்கா இருக்கும்",என்றேன்.
"இல்லங்க,பிளான்டையே குளோஸ் பண்ணிட்டான்.இனி அம்பாஸ்ட்டர் கார் தயாரிப்பு இருக்காது"என்ற சொல்லும் போது மனதை என்னவோ பண்ணியது.
அடடா....இப்படி மூடிட்டாங்களே....என்று மனசில் தோன்றியது..
முதலாவதாக கார் ஓட்டப்பழகிய அம்பாஸ்டர் கார்,அப்புறம் வாப்பா,சின்னவாப்பா,மற்றும் குடும்பத்தில் பல வீடுகளில் நின்ற அந்தக்கார்களின் எண்களும்,நிறங்களும் அதனை ஒட்டிய காரோட்டிகளும் நினைவில் வந்து போனார்கள்.

நீண்ட தூரங்களுக்கு அம்பாஸ்டர் கார் ஓட்டுவது தனித்தன்மை கொண்டது.
காரின் தரம் அதன் இயக்கத்தைப் பொருத்ததே. எத்தனை கார்கள் சந்தையில் புதிதாக வந்தாலும் அம்பாஸ்டர் கார்களின் அந்த "மோரிஸ் ஆக்ஸ் போர்டு"  மாடலுக்கு நிகரான "பழைய"  அழகை,கம்பீரத்தை வேறு எந்த மாடல் கார்களிலும் பார்க்க முடியாது.
எழுபது வருஷமாக முன்பக்க கிரில் மட்டுமே பெரும்பாலும் புறத்தோற்றத்தால் மாறும்.ஆனால் காரின் பின் பக்கம் "லேன்ட் மாஸ்ட்டர்" காலத்துக்கு பிறகு ஒரே மாதிரி தான்..

பெட்ரோல் என்ஜின்,அப்புறம் டீசல், கேஸ், என்று எல்லா வகை என்ஜின்களும் அதுக்கு மாட்டிப் பார்த்துவிட்டார்கள்...
கடைசியில் இசூசு என்ஜின் ஓரளவு நன்றாகவே இருந்தது...ஆனாலும் அந்த என்ஜினை வச்சிக்கிட்டு வேகத்தில் பிக்கப்பில் குட்டிப்பையன் "மாருதி ஸ்விப்ட்"பக்கம் நெருங்கக் கூட முடியவில்லை...

 நேற்று எங்க அம்பாஸ்டரை எடுத்துக் கொண்டு பேராச்சி பட்டறை சைலப்பன்-ராமகிருஷ்ணனிடம் காட்டப்போனேன்...
விஸ்வநாதன்-ராமமூர்த்தி மாதிரி  சைலப்பன்-ராம கிருஷ்ணன் இரட்டையர்கள் தான் தமது கைவண்ணத்தை எங்கள் வண்டிகளில் காட்டுவார்கள்.
அவர்கள் வண்டியை சரிசெய்தால் தான் மனதுக்கு ஒருவகை திருப்தி ஏற்படும்.

நான் போனபோது ராம கிருஷ்ணன் எங்கோ வெளியில் போய் இருந்தார்.

தமது தலையை வண்டியின் பானட்டுக்குள் சொருகி, பலவகை நம்பர்கள் கொண்ட ஸ்பானர்களால் "சைலன்சரை" முறுக்கிக் கொண்டு, வெளியே தலை காட்டிய  சைலப்பன் அண்ணாச்சியிடம் ,"அண்ணாச்சி,அம்பாஸ்டர் கார் கம்பெனிய மூடிட்டாங்க தெரியுமா' என்று கேட்டேன்.
 
 அவர் "என்ன  ஐயா சொல்றீங்க?" ...என்று பதறிய படி திரும்பி என்னிடம் கேட்டார்.

"ஆமா...அண்ணாச்சி.....நஷ்ட்டமாம்.மூடிட்டானுங்க.." என்றேன்.
கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டார்..அப்போது அவரின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.....
கொஞ்ச நேரம் ஒன்னும் என்னிடம் பேசவில்லை...
அப்புறம் சொன்னார்..."நான் பத்து வயசில் வேலைபார்க்க வந்தேன்.எனக்கு சாப்பாடுபோட்டது,என் வீட்டக் கட்ட உதவி செய்ய்தது,பிள்ளைகளை படிக்க வச்சது,கல்யாணம் கட்டிக் கொடுக்கவச்சது எல்லாமே அம்பாஸ்டர் கார் வேலைதான்"....என்றார்.

"இனி அது புதுசா வரவே செய்யாதா? ?...." என்று அப்பாவியாக ஏக்கத்துடன் மீண்டும் கேட்டார். "அண்ணாச்சி....உங்கள மாதிரி வேலை தெரிஞ்ச ஆட்கள் இருக்கும் வரை அம்பாஸ்டர் திருனவேலியில ஓடிக்கொண்டு இருக்கும்" என்றேன்.

சைலப்பன் அண்ணாச்சி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவர் கண்களுக்கு கீழே ஸ்பானரோடு ஒட்டிக கொண்டு இருந்த  கருப்புஆயில் பசை அவர்  முகத்தில் ஒட்டிக கொண்டது...

வழக்கமா....கலகலப்பாக என்னிடம் பேசிக் கொண்டே வேலைகள் செய்யும் சைலப்பன் அண்ணாச்சி....நான் புறப்படுகிறவரை ஒண்ணுமே பேசவில்லை...

அம்பாஸ்டர் கார் கம்பெனியின் மூடல் அவரை அவ்வளவு பாதித்திருந்தது...

நான் ஒரு சைலப்பனைத்தானே பார்த்தேன்....நாட்டில் அம்பாஸடர் காரோடு காதல் கொண்ட எத்தனை சைலப்பன்களோ?
 
.....( இந்தியர்களோடு இணைந்து கடந்த 70 ஆண்டுகளாக பயணித்த அம்பாசிடர் காரின் சகாப்தம் முடிந்தது
இந்திய சாலைகளில் கடந்த 70 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த அம்பாசிடர் கார் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. அந்த காலத்தில் கார் என்றால் அது பணக்காரர்களின் அடையாளமாகவே இருந்தது இந்த கார். தற்போது விதமான,விதமான கார்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், மிக பழமையான அம்பாசிடர் காரின் மவுசு மெல்ல, மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், அரசாங்க கார் என்ற பட்டப்பெயருடன் செல்ல பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டுவிட்டு சொகுசுகார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசிடர் கார் உற்பத்தி நேற்று முன் தினமும் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அம்பாசிடர் கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
'என்ன இருந்தாலும் அம்பாசிடர் கார் போல வருமா' என்று சொன்னவர்களின் நீங்களாக இருந்தால் அதன் நினைவை பகிர்க..என்ற முகநூல் செய்ய்தியைப் பார்த்ததும் என் மனதில் பட்டது....).
`

கருத்துகள் இல்லை: