ஞாயிறு, 8 ஜூன், 2014

இசைமுரசு நாகூர் ஹனீபா.....சில நினைவுகள்..



இசைமுரசு நாகூர் ஹனீபா....
தமிழ் முஸ்லிம் வீடுகளில்......
இவர் குரல்கேட்காத வீடில்லை.
தமிழ் நாட்டில் இஸ்லாமியப் பாடல்கள் மூலமாக இஸ்லாமியத் தத்துவங்களை முஸ்லிம் களிடத்தும்,சகோதர சமுதாயப் பெருமக்களிடத்தும் கொண்டு போய்ச் சேர்த்ததில் இவரது தொண்டு மகத்தானது..
இவரது காலத்திலும்,அதற்கு முன்னரும் எத்தனையோ இஸ்லாமியப் பாடகர்கள், பாடல்கள் மூலம் இஸ்லாமிய நெறியினை எடுத்துச் சொன்னாலும்,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் உழைப்பை,புகழை யாரும் தொடவில்லை என்பதே உணமை யாகும்.
வெண்கல நாதமாய் ஒலித்த இவருடைய குரல் உள்ளத்துக்குள் நுழைந்து என்னவெல்லாமோ செய்தது..
பாடல்களில் உச்ச ஸ்தாயியை மிக எளிதாக அவரால் தொட முடிந்தது. அவரது குரல் அவ்வளவு நளினம் பேசியது..
முறையான சங்கீதம் எதுவும் கற்றுக் கொள்ளாத அவரால் தேர்ந்த பாகவதர்கள் போல் இராகம், தாளம், பல்லவி உரிய இலக்கணத்துடன் கொடுக்க முடிந்தது.
இதற்கெல்லாம் இவருடைய 'கேள்வி ஞானம்' தான் குருவாக அமைந்து இருந்தது...

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்.சிவாஜி பட சினிமா இசைத்தட்டுகள் எந்த அளவு விற்பனையானதோ அதற்குச் சற்றும் குறையாத எண்ணிக்கையில் இவரது இஸ்லாமியப் பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனைகள் படைத்தன என்கிற செய்திகள் பலரும் அறியாதது...
இன்றைய  ஐ பாட்,செல்போன் பிளேயர்கள் காலத்தில் இளைஞர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாறுதல்கள் தனிப்பட்ட முறையில் இவரின் பாடல்களைக் கேட்பதில் ஒரு தேங்குதலை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆனால் அகில இந்திய வானொலியும், பண்பலைகளும் இன்றும்.......இவரின் பாடல்கள் பலவற்றைப்    பன்னிசைத்துக் கொண்டு வருகின்றன..பாதுகாத்து ஒலிபரப்பி வருகின்றன...

வானொலியின் வீச்சு அதிகமாயிருந்த காலங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி   அவரின் பாடல்கள் பலவற்றை உலகிற்கே அறிமுகப்படுத்தியது  என்றும் கூடச்  சொல்லலாம்.

பலரது கார்,பஸ்,ரயில்,மற்றும் வான் பயணங்களிலும் கூட வந்து    குதூகலம்.தருவது .... இவரின் பாடல்களாகும்..
.
முஸ்லிம் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல்,அனைத்து மதப் பெருமக்களும் இரசித்து விரும்புகிற குரல் அவருடையது. அவர்கள் உள்ளங்களில் அப்படி ஒர் இடம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது.
அதையும் தாண்டி...... "இறைவனிடம் கையேந்துங்கள்" என்று யாரெல்லாம் வேண்டுகிறார்களோ, அந்த சமரச நெறியுடையோர்க் கெல்லாம் அவரின் பாடல்கள் எப்போதும் பிடிக்கும்.
எங்க பக்கமெல்லாம்......... "கேசட் பிளே யர்கள்"  என்கிற ஒன்று வீடுகளில்
ஆட்சிஊர்ப் செய்த பொழுது.... அதிகமாக ஒலித்த குரல்
இவர் குரல்தான்.....

அதற்கு முந்தியெல்லாம் கிராமபோன் தட்டுகளும்,  ஊசி மாட்டி உரசிச்சென்ற அரக்கு ரிக்கார்டுகளும் அதில் வெளி வந்த அவர் பாடல்களும்,விழாக்களிலும்,
திருமண வீடுகளிலும் உற்சாகக் குரல் கொடுத்தன..

இன்றைக்கும்  மணவிழாக்களில்,அதைப் பதிவு செய்த   ஒளிப்பேழைகளில்....
மாப்பிளையையும்-பெண்ணையும் ஒன்றாய் வைக்கும் போது,பின்னணியில்
"வாழ்க வாழ்கவே வாழ்கவே"........என்று இசைமுரசின் குரலே வாழ்த்துகிறது..

. அந்தக் காந்தக்குரல்..கம்பீரக் குரல்....சினிமாப் பாடல்களைப் பின்னுக் குத்தள்ளியது..பிள்ளைகள் நாவில் ஒழுக்க நெறிகளை மனனம் செய்ய வைத்தது...
அதுபோல ,ந்தக் குரல்  தந்தை பெரியாரை,காயிதே மில்லத்தை,பேறிஞர் அண்ணாவை, திராவிட இயக்கத்தை,கலைஞரை.... தமிழை.......
தமிழ்ப் புலவர்களை...இலக்கியங்களைப் பாடி நின்றது..
..
இசைமுரசின் குரலில் வெளிவந்த பெரும்பான்மைப் பாடல்கள்இஸ்லாமியப் பாடல்கள் தான்....அவை........காலத்தைக் கடந்தும்  நெஞ்சம் தொட்டுநிற்கின்றன.
.
         பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை....
         ஒரு நாள் மதினா நகர் தனிலே...
        அந்த நாளிலே மக்கா நகரம் ....
         அதிகாலை நேரம்....
         இரு கண்கள் நம் ஹசன் ஹுசைன் வாழ்வை....
         தாயிப் நகரத்து வீதியிலே....
         எத்தனை தொல்லைகள்,என்னென்ன துன்பங்கள்....

இப்படி எண்ணற்ற
பாடல்களை  இவர் மேடைகளில் பாடும் போது.... கண்ணீர் விட்டுக் கதறி அழுதவர்களை, ஊர் தோறும் பார்த்துள்ளேன்...பிள்ளைச்செல்வம் இல்லாத ஒருவர்"பிறை போல வளர்கின்ற சிறுவர்களே"....அவர் பாடும்போது
பிள்ளைக்காக ஏங்கிஅழுததை..... ....இசைமுரசின் முத்துவிழா மலரில்
22 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
அவருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மூன்று தலைமுறை நட்புண்டு.
சொல்லிக்காட்ட நிறைய உண்டு....
என் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தவேண்டும்
என்று நாங்கள் கேட்டதனால்வெளிநாட்டுப் பயணத்தையே
தள்ளி வைத்தார்கள்..சொன்ன மாதிரியே வந்து ஐந்து மணி நேரம் அமர்க்களமாகப் பாடிஎங்களை மகிழ்வித்தார்கள்..
பல பொழுதுகளில் நெல்லைச் சுற்று வட்டாரத்துக்கும்குற்றாலத்துக்கும் வரும் போதெல்லாம் அவரைக் காணாமல் இருந்ததில்லை...நாகூர் வீட்டுக்கும் போய் வந்துள்ளேன்...அது கணக்கில் அடங்காது..அங்கே நான் சாப்பிட்ட பொழுதுகளும்தான்..
நாகூரில் அண்ணன் நாசர், ..மதுரையில்,சென்னையில் அண்ணன் நவ்சாத்,திருச்சி மருமகன் சென்னை மருமகன் வல்லம் மருமகன்
சம்பன்குளம் மருமகன் வீடுகள்...அப்படி உபசரிப்பார்கள்..பேரப்பிள்ளைகள் உட்பட....மெய்சிலிர்க்க வரவேற்பார்கள்...
அப்போது ...அடிக்கடி சென்று வரும் இடங்கள்..அவை..

அந்த நேரங்களில்... அவர்களின் பாடல்களைப் பற்றி...
இசை அமைப்பைப் பற்றி...
இதமான,பதமான,
சூடான
விமர்சனங்கள் செய்வேன்.
இசை முரசு
அதை விரும்பி இரசிப்பார்கள்.
.
குற்றாலம் பேரருவி மேட்டில்,
ஆறாம் எண் அறையில்,
சமுதாயக் கவிஞர்.தா.காசிம்.
அவர்கள் பாடல்கள் எழுத
இசை அமைக்கப்பட்ட பொழுதுகள்...நினைக்க..... நினைக்க....
இன்பம் தருபவை...

அவர்களின் திருநெல்வேலி தாஜ் ஹோட்டல் சம்பந்தி ஷேக் முகைதீன் ஹாஜியை, மாமா என்றே நான் அழைப்பேன்.
.
இசைமுரசின் வீட்டில் நானும்
எங்க வீட்டில் அவரும்...
விருந்துகள் வரவேற்பைச்
சொல்லில் வடிக்க முடியாது...


பதினெட்டு ஆண்டுகள் முன்பு
ஒரு நாள்
சென்னை எழும்பூர்,
கென்னட் வீதி.........
ஏதோ ஒரு வேலையாய்
போய்விட்டு
நான் இருந்த
ரீகலுக்கு திரும்பிக்கொண்டு இருந்தேன்..
லட்சுமி மோகன்லாட்ஜ் முன்னர்
நான் கடந்து போகும் போது
இரண்டாவது மாடியில் இருந்து
சுதி பேதமில்லாமல்"எத்தா....எல்கேஎஸ் "என்று சங்க நாதத்தோடு ....என்னை நோக்கி ஒரு அழைப்புக்குரல் .......

அந்த மாடியின் முகப்பில்......சொல்லப் போனால் உப்பரிகையில்......... இசைமுரசு புன்னகை பூத்து நின்று கொண்டு இருந்தார்....அவ்வளவுதான்....வேகமும்,பாய்ச்சலுமாய்மாடிப் படிகள் ஏறினேன்.
நான் அவர்களை வழக்கமாக"வாப்பா " என்றே அழைப்பேன்.அவர்கள் என்னைச் செல்லமாய்"அத்தா"...என்று அழைப்பார்கள்..
எப்போவாவது  "தம்பி".
நான் அவர்களைப் பார்த்த மகிழ்வில்அவர் பக்கம் போயநின்றேன். வழக்கமான
குடும்ப விசாரிப்பெல்லாம்முடிந்தது..."எத்தா...இன்னைக்கு கவர்னர் மாளிகையில் நம்ம நிகழ்ச்சி இருக்கு...வாரீங்களா?"
என்று அவர்கள் அழைத்தார்கள்...
 
"இதோ...இப்பவே வாரேன்"..என்று அந்த மாலை வேளையில புறப்பட்டுவிட்டேன்..
வாசலில் அவர்கள் பயன் படுத்தும்ஒல்ட்மாடல் "மெர்சிடிஸ் பென்ஸ்" தயார் நிலையில்...அதன் அருகே...ஹார்மோனிஸ்ட் இன்ப ராஜ்.ஆல் ரவுண்ட் சின்னத்தம்பி, கீ போர்டு சேது ராமன்,'எலெக்ட்ரிக் தராங்' மாரியப்பா,தபேலா ஜான்பாய்.முதலானவர்கள் புறப்படத் தயாராக இருந்தார்கள்..
சென்னா ரெட்டி  அப்போ தமிழகக் கவர்னர். கவர்னர் மாளிகைக்குள்
அடக்கம் பெற்றுள்ள ஒரு இஸ்லாமிய ஞான வானின்நினைவு நாள்.
அதற்காகவே அவர்  அங்கே அழைக்கப்பட்டிருந்தார்.

 கவர்னர் சென்னா ரெட்டி வருகை தந்து...மந்திரக் கோல்கைகளில் தாங்கி....
கால்மேல் கால் போட்டு...முதல் வரிசையில்..வெல்வெட் நாற்காலியில்
மெய்க்காவலர்கள்..புடைசூழ ரசிகராக இருந்து இசை நிகழ்ச்சி முழுவதையும்
கேட்டு இரசித்துக் கொண்டு இருந்தார்..
அருமையான நிகழ்வாக அந்தக் கச்சேரி அமைந்தது...அந்தக் காலப் பொழுதில்
அவர்கள் பாடி பிரபலமானப் பாடல்கள் பலவற்றை பாடினார்கள்.பல்வேறு ரசிகர்கள்....
பல்வேறு பாடல்களைப் பாடச்சொன்னார்கள்...சளைக்காமல் பாடிக் கொண்டு இருந்தார்கள்...அப்போது ஒரு துண்டுச்சீட்டு.....அதில்,."உயிர் இருக்கும் வரை உம்மை மறவேனே    உள்ளத்தில் வாழ்கிற நபிகள் பிரானே..." என்கிற பாடலைப் பாடுங்கள்
என்று ஒருவர் கேட்டிருந்தார்..

அதைப் பார்த்துவிட்டு
"இந்தப் பாடல் புத்தகம் நான் கொண்டு வரவில்லை..
அதனால் வேறு பாடல் பாடுகிறேன்"
என்று சொல்லிவிட்டு வேறு பாடல் பாடினார்..
எப்போதும் என் சட்டைப் பையில்
பேனாவும் குறிப்பேடும்
வைத்திருப்பேன்...
நான் மளமள வென்று
"உயிர் இருக்கும் வரை உமைமறவேனே..
உள்ளத்தில் வாழ்கிற
நபிகள் பிரானே...
இது பல்லவி..
அப்புறம் சரணங்களாக....

உயர் மார்க்கம் தனைத்தந்த
உத்தமர் கோனே... உலகெல்லாம்
புகழ்கிற எம் பெருமானே....அருட்சுடரே.........
அண்ணலே,,,,,,இறைத்தூதே...
ஆமினார்,........அப்துல்லா....ஈன்ற மஹ்மூதே,......... ,
உரிமையெல்லாம் தந்த  அருமை ரசூலே...
உமக்கினை உண்டுமோ இப்புவி மேலே...."...என்று

அடுத்த பாடலை அவர்கள் பாடும் முன்னர்  நாகூர் ஆபிதீன் காக்காவின்
பாடல்வரிகள்முழுதையும்     இசை முரசுவிடம் எழுதிக் கொடுத்தேன்...
அந்தப்பாடலையும்  என் முகத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டு....
"நாற்பது வருடமாக நான் பாடும் பாடல் இது...  ஆனாலும் என்னால்
புத்தகம் இல்லாமல் பாடமுடியாது....
இதோ என் தம்பி....என் பிள்ளை....சின்ன வயதுக்காரர்...அவர் பிறக்கும் முன்னர்
நான் பாடி ரிக்கார்டாக வந்த பாடலை இந்த மேடையில் வைத்தே எழுதித் தந்துள்ளார்....நான் பாடுகிறேன்"...என்று சொல்லிவிட்டு பாடினார்...
அப்புறம் கவர்னர்  இசைமுரசு அவர்களுக்கு அணிவித்த பட்டு சால்வையையும் எனக்கே போர்த்தி விட்டார்..
..
மேலப்பாளையத்தில்முஸ்லிம் மேல்நிலைப்பள்ளித் திடலில்
கவியரங்கம்,பாட்டரங்கம், கருத்தரங்கம் கொண்டு...
தி.மு.க.தலைவர் கலைஞர்,   முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத்
அப்துல் லத்தீப்,
முதலான தலைவர்களை அழைத்து
மேலப்பாளையம் முன்னாள் சேர்மன் .
எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்கள் தலைவராக
நான் செயலாளராக,
வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பள்ளி
நிர்வாகத்தினர்
தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள்,சதக்கத்துல்லா அப்பாக கல்லூரி முன்னாள்முதல்வர் பேராசிரியர்.முகம்மது பாரூக்,
 சூழ இருந்து
இசைமுரசு 75 ஆம் வயது முத்து விழா
நடத்தியது பற்றி
தனியே எழுதலாம்..

இன்னும் நிறைய இருக்கிறது...