ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மோட்டார் பைக்கும்....குருநாதரும்.


சில சம்பவங்கள்....சில முகங்கள்....எப்போதும் மனதை விட்டு மாறவே மாறாது ; மறையாது....
அதில் எங்க அண்ணன் செய்யது முகம்மது புகாரி..பற்றி நினைக்க ....நினைக்க பல சம்பவங்கள் மனதில் வந்து போகும்..அதில் எதைச் சொல்ல?......எத விட?
எங்க வீட்டில் பாட்டனார்கள் மூவர்......
அவர்கள் இலங்கை,பர்மா,கராச்சி,சிட்டகாங்,கொல்லம் முதலான ஊர்களில் கைத்தறி லுங்கிகள் மொத்தவணிகம் செய்தவர்கள்.
அந்த மூவருக்கும் ஆண் மக்கள் ஆறு பேர்கள் தாம்....
அந்த ஆறுபேர்களுக்கும் பதிமூன்று பேர்கள் பேரன்கள் ஆவோம்...நான் சொல்வது ஆண் வாரிசுகளை மட்டுமே..
எங்கள் இளமைக் காலம்.... பள்ளி...கல்லூரிக்கு செல்வதைத் தவிர, வயலுக்குப் போவது ,தண்ணீர் பாய்ச்சுவது ....சந்தைக்கு போவது.....ஆடுமாடுகளை பேனுவது.....என்று தொடர்ந்தது..அது சுகமானது.
எங்கள் பெரிய வாப்பா மகன் அப்துல்லா லெப்பை காக்கா.....அவரைத்தொடர்ந்து சின்ன காக்கா கபீர் என்று சிறிய வயதிலேயே அவர்கள் இருவரும் மாரடைப்பால் இறந்துபோய் விட்டார்கள்...
குடும்பத்தில் கார்கள் இருந்தாலும் அதன் மீது அந்தக் காலத்தில் எனக்கு ஆர்வம ஏற்படவில்லை.... மோட்டார் சைக்கிள் ஓட்டிப் பழக, சின்ன வயதில் நான் மிக ஆர்வம கொண்டிருந்தேன்...ஆனால் அந்த ராஜ்தூத் வகை மோட்டார்பைக்கை தொடக் கூட முடியாது.
பெரிய வாப்பா அவ்வளோ அழகா வைத்திருப்பார்....எங்க ஊரில் மொத்தமே நான்கு பேரிடம் மட்டும் தான் மோட்டார் சைக்கிள் இருந்த காலம் அது.....
என்றைக்காவது வயலுக்கோ அல்லது சந்தைக்கோ போகச்சொல்லி அவர் தந்து வண்டியை ஒட்டிக கொண்டு போனால் தான் உண்டு.
அதுவும் எங்க அண்ணன் மார்கள் மூத்த இருவர் மட்டுமே ஓட்ட அனுமதிப்பார்கள்.....என் போன்றவர்கள் பின்னால் உட்கார்ந்து தான் வரவேண்டும்.
ஒருநாள் எங்க சின்ன காக்காவை.....மோட்டார் சைக்கிள் ஓட்ட சொல்லித் தரச்சொல்லி படுத்தாத பாடு படுத்தினேன்...
"சரி....நாளைக்கு நம்ம வயலில் களை எடுக்க ஆளை எண்ணச் செல்லும் போது நீயும் வா.....பாக்கலாம்"..... என்று அவன் பொதுவாகவே சொல்லி வைத்தான்...
மறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் அவனோடு செல்ல அவங்க வீட்டுத் திண்ணையில் தயாராக இருந்து கொண்டேன்...
ஒரு பத்து மணிவாக்கில்...."வா..போலாம்"...ன்னு கூப்பிட்டான்...
அன்னைக்கு கடும் வெய்யில....ஊரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தருவை வயக்காட்டுக்கு "ஆள எண்ண"..ப் போனோம்..
மதியம் இரண்டு ....மணியாச்சு .,வயலில் இருந்து ,வீட்டுக்கு புறப்பட்டோம்..
நிழலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் பக்கம் வந்தோம்.அண்ணன் அதன் விசையை உதைத்து..... உட்காரப் போனான்..
"சரி...சரி....நான் ஓட்டுறேன்" என்றேன்.
"இன்ன பார்...இது பிரேக்..."...
"அப்புறம்"....
"இது ஆக்சிலேட்டர்... "
"ம்ம்..."
"இது ...கிளட்ச்...."..முதல்ல...கிளட்சை...அழுத்திப் பிடிக்கணும்....அப்புறம் காலால் கியர் ராடை....கீழே அழுத்தனும்....அப்புறம் மெதுவா....ஆக்ஸிலேட்டரை கூட்டி....கிளட்ச விடனும் என்றான்..."
"சரி..சரி...ஆட்டும்"என்றேன்.
எல்லாம் சரியாத்தான் நடந்தது...
ராஜ்தூத் வண்டி டப...டப...வென்று போகத்துவங்கியது....நான் எதோ ....பறப்பதைப் போல அந்தப் பொழுதை....உணர்ந்தேன்.
கொஞ்ச தூரம் ஒட்டி இருப்பேன்...
பச்சையாற்றுப் பாலம் வந்தது....
"டேய்...அங்கே ஒரு பஸ் வருதுல........கொஞ்சம் ஆக்சிலேட்டர கொறல..."...
"கொறச்சாச்சு...அப்புறம் என்ன செய்ய?"...
"கியர கால வச்சு கீழே அமுக்குல...."....
.................................................................
"ஏல..ரொம்ப....நேரமா...கால வச்சு என்னத்த தேடுறே"?....
"கொஞ்சம் பொறு.....கியர் மாத்துற ராட காணோம்டா....அதைத் தான் நான் தேடுறேன்...." என்று நான் கொஞ்சம் லேசான பதட்டத்தோடு சொன்னேன்..
"என்ன..சொல்ல்றே..கியர் ராட....காணோமா?...என்னடா சொல்றே?சீக்கிரம் கியர மாத்துடா..."...என்று கடைசியாக அவன் சொன்னது மட்டும் கேட்டது...
எப்படியோ தட்டுத் தடுமாறி....வேர்த்து... விறுவிறுத்து....அந்த கட்டபொம்மன் பஸ் முன் பக்கம் போய் மோட்டார் சைக்கிளை...நிறுத்தினேன்...
குருநாதர்....... என்ன சொல்லப் போறாரோ?...என்ற தவிப்புடன்....
பின்னால் திரும்பிப் பார்த்தேன்........பகீர் என்றது.

ஆளைக்காணோம்.

பின்னால் தான இருந்தான்? எங்க போனான்?.....என்று அங்க இங்க...பதட்டத்தோடு தேடினேன்.
ரொம்ப தூ.......ரத்தில்..... நடு ரோட்டில் அவன் நிற்பதைப் பார்த்தேன்..அப்படியே மெதுவாக என் பக்கம் வந்து சேர்ந்தான்.
என்னால் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றி, பிரேக் முடியவில்லை...என்றதும் எப்படித்தான்.....வண்டியை விட்டு குதித்தானோ?....என்னால் இன்று வரை புரிந்து கொள்ளமுடியவில்லை...
அவனைப் பார்த்து ரொம்ப நேரமாக.......நான் சிரிக்க....என்னைப் பார்த்து அவன் முறைக்க....
அதன் பின்னர்..... பஸ் என்னை விட்டு கடந்த ....வெகுதூரத்தில் ரோட்டில் கிடந்த, கியர் ஷிப்ட் ராடை...எடுத்து...கல்லை வைத்து தட்டி சொறுகி...வண்டியை " ஒரு மாதிரியா...."..ஸ்டார்ட் பண்ணினோம்.
கொஞ்சம் கெஞ்சிய குரலில்.... " நான் ஓட்டட்டுமா"..என்று மீண்டும் கேட்டேன்..

"ஏல...என்னை கொண்டு போய்.... வேற லாரி ....பஸ்ல...உள்ள விடவால ....இப்படி கேக்கிறே"?....என்று கேட்டுட்டு ஒரு முறை முறைச்சான்...
வீடு வந்து சேர்ற வரையும்..அவன் என்னை ஏசிக்கொண்டும்....நான் அவனை பதிலுக்குத் திட்டிக் கொண்டும் வந்தோம்...
அப்புறம்....நாலு வருஷமா ....என்கிட்டே அந்த வண்டிய ,  அவன் தரவே இல்லை....
நான் வேற ஆளைப பிடிச்சி ஓட்டப படிச்சது வேற கதை.....
இன்னைக்கும்..அதே கிண்டல்..அதே கேலி....அதே பொறுப்புணர்ச்சி....அதே பாசம் கொண்டு உரிமையோடு இருப்பவன் எங்க அண்ணன் செய்யது முகம்மது புகாரி..
(அவனைப் பற்றி சொல்ல நிறையவே இருக்கு...
அப்புறம் எனக்கு கார் ஓட்டப படிச்சுத்தந்ததும் அவன் தான்.)

கருத்துகள் இல்லை: