வியாழன், 22 அக்டோபர், 2015

ரயில் பயணங்களில்....


ரயில்....
அந்த வண்டிகள் நிற்கும் நிலையம்...
அவை சின்ன வயது முதலே என்னவோ ஒரு ஈர்ப்பை, எல்லோர் மனதிலும் ஏற்படுத்தித்தான்  வைத்துள்ளது.

நாங்க உயர்நிலை மேல்நிலை வகுப்புகள் படிக்கிற காலங்களில் ....உசுரோடு .....காற்றில் ஆடி அசைந்து....நெடிது  உயர்ந்த.... பெரிய மரங்கள் நிறைந்து,தென்றலோடு தாலாட்ட,..... பச்சைப்பசுமை வயல்கள் சூழ....அப்போது இருந்த மேலப்பாளையம் குறிச்சி ரெயில் நிலையம், அழிஞ்சே போச்சு.....தூக்கிட்டாங்க.

சின்னச்சின்ன வீடுகளில் அங்கேயே குடியிருந்த , அந்த ஸ்டேசன் மாஸ்ட்டர் ஐயருக்கு பத்து பிள்ளைகள்.அவர்களில் கிருஷ்ணன் எங்க கூட முஸ்லிம் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படிச்சான்.....

அதனால் பரிட்சைக் காலங்களில் அங்கே கிடந்த சிமென்ட் சிலாப்பு பெஞ்சுகளில் நானும் நண்பர்களும் ஒன்னா...இருந்தே படிக்க முடிந்தது.

சின்னஞ்சிறிய அழகிய நிலையமாக குறிச்சி ரெயில் நிலையம் இருந்தது....நண்பர்கள் அபூபக்கர் மவ்லானவும்,சின்னாமது மசூதும்  அங்கே படிச்சதவிட அங்கே பாடியதும் ,"பாடம்" படித்ததும் தான் அதிகம்.

மேலப்பாளையம் ரயில் நிலையம் உருவானபோது அங்கேயும் நானும்....இப்போ....மாவட்ட துணை ஆட்சியர் தகுதியில் உள்ள அபுல்காசிம் மாப்பிள்ளையும் நிறைய...."வாசித்துள்ளோம்".
அந்தக்காலத்தில் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் நீராவி என்ஜின்கள் இழுக்க ஒரு.... பத்து பெட்டிகள் கொண்ட தொடர் நெல்லையில் இருந்து சென்னை வரை போகும்.
முதல் நாள் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.00 மணியளவில் சென்னை போய்ச் சேரும்.
கோடை வந்தால் சென்னை செல்வது என்பது.....அமெரிக்கா போவதற்கு நிகரான ..ஒரு வித பரபரப்பை தந்தவை .
பெரும்பாலும் திருநெல்வேலியில் இருந்து கிழக்கே காயல் பட்டணம் ,திருச்செந்தூர் போகவும். மேற்கே தென்காசி ,ரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம் போகவும் அந்தக்காலத்தில் மூணு மணி நேரம் பயணப்பட்டு....சிரமப்பட்டு....கஷ்ட்டப்பட்டு.... "கரிவண்டியில்" தான் போவார்கள்.
ரயில் என்ஜினில் இருந்து கிளம்பும் நீராவி மற்றும் நிலக்கரி தந்த புகை வாசம் ஒருவிதமா இருக்கும்....
மதியம் மதியம் 1.00 மணிக்கு புறப்படும் வண்டிக்கு காலை11.00 மணிக்கே மேலப்பாளையத்தில் இருந்து மாட்டுவண்டியில் புறப்பட்டு விடுவார்கள்..
முதலாவது அல்லது இரண்டாவது நடைமேடையில் நிப்பாட்டி வச்சு இருக்கிற வண்டியில் ஏதாவது ஒரு பெட்டியில் உட்கார்ந்து கொள்வோம்.
வீட்டில் இருந்து எங்க அப்பாம்மா ....கட்டிக் கொண்டு வந்த கூட்டாஞ் சோத்தை.....அவ கையால் எங்களுக்கெல்லாம் ஊட்டி விடுவாள்.....அந்த ருசியை இதுவரை வேற எந்த சாப்பாட்டிலும் கண்டதில்லை...
பெரும்பாலும் ஜன்னல்களுக்கு கம்பிகள் இருக்காது...
ரயில் போகும் திசையில் இருந்து காற்றில் பலநேரங்கள் கரித் துகள்கள் பறந்து கண்களில் விழுந்து உறுத்திக் கொண்டே இருக்கும்..
சென்னைக்கு வருடத்தில் நாலைந்து முறை போகும் எங்க மாமா ...."ஹோல்ட் ஆல்"....என்கிற சுருட்டும் மெத்தையில் தலையணை,போர்வை, சிலவேளைகளில் போர்வை உள்ளிட்டவைகளை கொண்டுசெல்வார்கள்....அதுதோல் வார்பெல்ட்டால் அது கட்டப்பட்டிருக்கும்.அது ராணுவப் பச்சை....நிறத்தில் இருக்கும். 
பெறகு....இப்போ கிடைக்கிற மாதிரி குடி தண்ணீர் பாட்டில்கள் அப்போவெல்லாம் விலைக்கு கிடைத்ததில்லை....திருகுச்செம்பில் காணும்  வரை தண்ணீர் கொண்டு செல்வார்கள்.தீர்ந்துவிட்டால் ஏதாவது ஸ்டேசனில் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு ஊர் தண்ணீரும் வெவ்வேறு ருசியில் இருக்கும்.சில ஊர் தண்ணீரை குடிக்கவே இயலாது.அவ்வளவு துவர்ப்பாக இருக்கும்.வெளியூர் போனால் அந்த ஊர் தண்ணீர் சுவை மாறுபாடு படுத்திஎடுத்துவிடும்.

இப்போது குளிர் பெட்டிகளில் பயணங்கள் பல நேரங்களில் வெறுமை தான்.

இப்போதுள்ள இளைஞர்கள் முதுகில் மாட்டும் பையும்.....அதில் ஒரு ஜீன்ஸ் மற்றும் இரண்டு டி சர்ட்டுகளோடு நாலு நாள் பயணத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள்....அந்த ஜீன்சை எப்போது தான் துவைப்பார்களோ.....யார் அறிவார்?.....தெரியவில்லை.
முன்பெல்லாம் ரயில் கிளம்பியதும் பக்கத்தில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆகிக் கொள்வார்கள்...பலகதைகள் பேசிக்கொள்வார்கள்...

இப்போது செல்போனில் ஹியர் போன்களை மாட்டிக்கொண்டு இளம் வயசுக் காரர்கள் தொடங்கி கிழடு கட்டைகள் வரை .....ஒரு வித மான... "முழி"...முழித்துக் கொண்டு வருகிறார்கள்.....சிலர் இடையிடையே உடம்பையும் நெளித்துக் கொள்வார்கள்..அவங்க பாட்டுக் கேட்கிற ..."லட்சணம் "அப்படி.யாரும் யார்கூடவும் பேசுவதில்லை...
லேப்டாப்,டேப்லட் வைத்துக் கொண்டு சினிமா படங்களை இளைஞர்கள் மட்டுமல்லாமல் கிழடுகள் வரை .....என்னத்தையோ பார்த்து ரசிக்கிறார்கள்..இடையில் தீவிரப்பார்வையும் சிரிப்பும் வேற.
குளிசாதன வசதிப் பெட்டியில் .....உடன் வரும் பயணிகள் பூசுகிற நீலகிரித்தைல அல்லது கோடாரித் தைல நெடி....தாங்கமுடியாதது...

இரவு நேர பயணங்களில் வெளிச்சத்தங்கள் உள்ளே ரொம்ப கேக்காத மாதிரி  இருக்கு....ஆனா...சில பெரும் ஆசாமிகள் சில பயணங்களில் எழுப்புகிற குறட்டைச்சத்தங்கள்  ....தூக்கமில்லாமல் செய்துள்ளன.
எப்போதோ தயார் செய்த வடை,போளி,சமோசாக்கள்,....தின்பவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புகிற பணிகளை கச்சிதமாக செய்து வருகின்றன...
ரயிலில் பயணிக்கும் டிக்கட் பரிசோதனை செய்பவர்களும் , காவலர்களும் டீ முதற்கொண்டு காசு கொடுத்து அவர்களிடம் வாங்கி சாப்பிட்டதை நான் பார்த்ததே இல்லை.
நேற்று திருநெல்வேலி ரயில் நிலையம் சென்று வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வரப் போய் இருந்தேன்.....அப்போது பழமை மாறாத பாட்டிகள் இருவர்.....யாரையோ எதிர்பார்த்து வாசலில் காத்து நின்றார்கள்....
அப்போது நினைவில் வந்தவை இவை.




கருத்துகள் இல்லை: