வெள்ளி, 20 அக்டோபர், 2017

இப்படி ஆகிட்டாங்களே.....



அன்னைக்கு ராத்திரி கொஞ்சம் தாமதமா...மோட்டார் பைக்கில் ஒரு மணி வாக்கில்  ....வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.அதுவும் கிழக்க இருந்து மேக்க பார்க்க புல்லட்ல வந்து எங்க வீட்டு வாசலில் பைக்க  நிறுத்தி   ஸ்டேண்ட் போடதயாரானேன்..... என்  பைக் லைட் வெளிச்சம் ஒரு ஆயிரம் அடி தூரமாவது ...இருட்டைக் கிளிச்சுக்கிட்டு போகும்.

அப்படி...லைட்ட அங்க நேரா...காட்டிய போது எங்க வீட்டிலிருந்து நூறு அடி தூரத்தில் உள்ள எங்க தெரு....அதான் அய்யர் தெரு பிள்ளையார் கோவில் தெரிந்தது.



எங்க வாப்பா?பெரிய வாப்பா  காலத்தில் எங்க தெரு,பக்கத்து தெரு  வயசாளிகளும்,நடுத்தட்டு ஆசாமிகளும்  ராத்திரி பத்து மணி வரை அதன் வெளியே உள்ள வாய்க்கால் திண்டில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பார்கள்.
இப்ப உள்ள பாளையங்கால் தண்ணீர் சாக்கடையானதால் அங்கன யாரும் உட்கார முடியல்லை.கொசு பிச்சி எடுத்துடுது.

அத மாதிரி தான் பக்கத்தில் உள்ள கொடி மேடையிலும்.
எங்க இளமைக்காலங்களில் நாளைக்கு பள்ளிக்கூடம் லீவுன்னாலோ ,கோடை லீவுன்னாலோ.....நள்ளிரவு வரை இளவட்ட வயசுக்காலங்களில்....அந்த மேடை மணலில் துண்டை விரித்துப்படுப்போம்.படுத்துக்கொண்டே கதைகள் பேசுவோம்.....ஆம்பிள...கதாபாத்திரங்கள் பொம்பிள கதாநாயகிகள்  கதைகள் பல மாதிரியா எங்க செட்ல பேசப்படும்.... நட்புகள் பொருளாதாரம் பார்த்து பழகாத காலம் அது.இப்போ அந்த மேடையிலும் யாரும் படுப்பதில்லை,.

மைதீன் தைக்கா கொடிமேடை....பிள்ளையார் கோவில் கோபுரம் தாண்டி...என் பார்வை கோவில் பின்னால் அமைந்து இருந்த எங்க பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வாட்டர் டேங் மீது சென்றது.
அங்கே....அதன் மேலே......நாலு அல்லது ஐந்து பேர்கள் நின்று பேசிக்கிட்டு இருப்பது போல தெரிந்தது.எதோ செல் போன் விளக்கு..வெளிச்சங்கள் போல அடிக்கடி அங்கே மாறி மாறி தெரிந்தது.

அங்கே என்ன நடக்குது ?....கொஞ்ச நாளா நம்ம பக்கத்துல உள்ள டேங்ல இருந்து நம்ம பகுதிக்கு குடி தண்ணீர் வருவதில்லையே.....என்று சந்தேகம் கொண்டு....டேங்ல எதுவும் பிரச்சினையோ...என்று பலவாறாக யோசிச்சுகிட்டே இருந்தேன்.

என்னை எங்க வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டத்  தயாரா இருந்த கிருஷ்ணசாமி  அண்ணாச்சி....என்னிடம் “அங்க என்னத்த பார்க்கிய?” என்றார்.

“ எப்பா?....டேங் மேல ஒரு அஞ்சாறு பேர் நிக்கிற மாதிரி தெரிது....வா....போய் பார்த்திட்டு வருவோம்”...ன்னு சொன்னேன்.
“அதாரு....அங்க நடமாடுறது? வாங்க போலாம்”என்று அண்ணாச்சியும் கூட வந்திட்டார்.

ஒரு நிமிஷத்தில் எங்க தெரு மேக்க உள்ள டேங் கீழே நானும் அண்ணாச்சியும் வந்து சேர்ந்துட்டோம். ....கீழே நான்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

“ கிருஷ்ணசாமி ...வா....மேல போலாம்.” என்று சொல்லிட்டு....வளைஞ்சு வளைஞ்சு ஐம்பது அடி உயரத்தில் இருந்த அதன் மேல்பகுதிக்கு வந்து விட்டேன்.

அங்கே அந்த நட்ட நடு நிசியில்...ஒரு ஐந்தாறு பேர்கள் உட்கார்ந்தும் நின்றும் கொண்டு இருந்தார்கள்....அப்போது என்கையில் இருந்த செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில்  சுத்து முத்தும்  பார்த்தேன்.....ஆளாளுக்கு போதையில் இருந்தார்கள்..இரண்டு மூணு பேர் சாப்பிட்டு இலையை விரிச்சு போட்ட..கோலம தெரிந்தது......

யாருப்பா....நீங்க....இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்..

“சும்மா....இங்கே உட்கார்ந்து சாப்பிட வந்தோம்.”என்றான் ஒருவன்.அங்கே நின்ற எவனுமே...எங்கள் பகுதியை சேர்ந்தவன் இல்லை.

“ என்னடே விளையாடுறிய? ஆமா...இந்த டேங் மாடியில யாரு சாப்பாட்டு கிளப் நடத்துறா? " கிருஷ்ண சாமி அண்ணாச்சி கொஞ்சம் கோபமாக கேட்டார்.

" யார்ரா நீங்க.?...சொல்லுங்க...என்றேன்.....

எங்க வட்டாரத்தில் இருந்து அம்பை ரோட்டுக்கு தூரமா இருக்கிற தெருவை சொன்னார்கள்.

நான் பேண்ட் சர்ட் போட்டு அந்த இருட்டில் நின்று கொண்டு இருந்ததால்..
:"யாரோன்னு" கொஞ்சம் கலவரப்பட்டு ...ஜட்டி மட்டும் போட்டு இருந்த அந்த இளைஞர்கள்....பேண்ட் சட்டைக்கு மாற ஆரம்பித்தார்கள்....

" என்ன...வேல செஞ்சோம்....கைல பாதுகாப்புக்கு ஒரு கம்பு கூட இல்லையே...எவனாவது வேகத்துல நம்மள ஒரு முட்டு முட்டி தள்ளிவிட்டுட்டா என்னசெய்ய.?..வாங்க போலாம்ன்னு" ,என் காதில வந்து  ..அண்ணாச்சி எச்சரிக்கை பண்ண ஆரம்பிச்சார்.

அதுல ஒருத்தன்......“ டே....வாங்க சீக்கிரம்..” .என்று... அந்த வாட்டர் டேங் உள்ளே நுழையிர " மேன் ஹோல" பார்த்து சவுண்ட்...கொடுத்துக்கிட்டு இருந்தான்..

அப்போது அங்கே போய் பார்த்தேன்....அந்த குடி நீர் தொட்டிக்குள் இறங்கி...பாதி டேங் தண்ணியில படிக்கட்டுல நின்று....தேய்த்துக் குளித்துக்கொண்டு இருந்தான்......இன்னொருவன்..அங்கே நீந்திக்கொண்டு இருந்தான்.

“ டேய்....வாடா  வெளியே...என்று சொல்லி பிடித்து இழுத்து வந்தேன்...இப்படி கொடுமை  செய்றீங்களே...இந்த குடி தண்ணியத்தானே...பச்சப்புள்ளைக...முதக்கொண்டு எல்லாரும் குடிக்கோம்...நீ...குளிச்ச அழுக்குத்தண்ணிய நாங்க குடிக்கணுமா?...”.என்று ஆத்திரம் தீர கத்தித் தொலைச்சேன். ஆவேசமா ஆடிவிட்டேன்...

கொஞ்சம் கொஞ்சமா....கூட்டம் கூட ஆரம்பிச்சுது....விட்டா போதும்ன்னு...அந்த பயலுவ.....ஓட்டம பிடிச்காணுக...அதுக்கப்புறம் அவனுங்கள நான் எங்க வட்டாரத்தில்...பார்க்கவே இல்லை.

யாருக்கும் கட்டுப்படாமல் இப்போது எங்கள் ஊரில் இளைஞர்களில் ஒரு பிரிவினர் உருவாகிவிட்டார்களோ என்ற கோபமும் அடிக்கடி வந்துபோகிறது.

ஒரு பைக்கில் மூவர் , நால்வர் தெருக்களில் அதிவேகத்தில் செல்வதும் அங்கே நிண்டு விளையாடிக் கொண்டு  இருக்கிற குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கும் வேலைகளிலும் இறங்கிவிட்டார்களோ என்ற எண்ணமும் வந்து நிற்கிறது...இவர்களை யார் கட்டுப்படுத்துவது என்கிற கேள்வியும் பிறக்கிறது. 
மறுநாள்...அரசு அதிகாரிகள்....ஜமாஅத் தலைவர்கள்...உள்ளிட்ட பலருக்கும் அன்று இரவு நடந்த கொடுமையை  சொல்லி...பள்ளிவாசல்களில் பேசச்சொன்னேன்.....

அந்த டேங் மேல போக உள்ள ஏணிப்படிகள் மேலே அன்னியர் யாரும் போக முடியாமல்  அந்தப்  பகுதியை...சுற்றி காம்பவுண்ட்...சுவர் எழுப்பி பாது காக்க வழி ஏற்பாடு செய்து விட்டுத்தான் மறுசோலின்னு முடிச்சேன்.

பண்பாடும் கலாச்சாரமும் கொண்டு மேலோங்கும் அன்பினைக் கொண்ட இந்த ஊரை " எங்கே கொண்டு செல்லுகிறார்கள்?."...என்கிற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.

3 கருத்துகள்:

Cbtiffs சொன்னது…

நிச்சயம் இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது..நம் சமுதாய இளைய தலைமுறை உலக மோகம் கொண்டு வீறு கொண்டு எழுந்து வருகிறது

Jamesha habibullah சொன்னது…

அன்று நீங்கள் கவனிக்கவிடில் தொடர்ந்து இருக்கும் .. வாழ்த்துகள் அண்ணா

Jamesha habibullah சொன்னது…

அன்று நீங்கள் கவனிக்கவிடில் தொடர்ந்து இருக்கும் .. வாழ்த்துகள் அண்ணா